கற்குவேல் அய்யனார் கோயில்

ஆள்கூறுகள்: 8°30′56″N 78°00′37″E / 8.51556°N 78.01028°E / 8.51556; 78.01028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கற்குவேல் அய்யனார் கோயில்
கற்குவேல் அய்யனார் கோயில் is located in தமிழ் நாடு
கற்குவேல் அய்யனார் கோயில்
கற்குவேல் அய்யனார் கோயில்
தமிழ்நாட்டில் கோவிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்:8°30′56″N 78°00′37″E / 8.51556°N 78.01028°E / 8.51556; 78.01028
பெயர்
வேறு பெயர்(கள்):கருக்குவாலை அய்யன்
பெயர்:கற்கோலய்யன்[1]
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தூத்துக்குடி
அமைவு:தேரிக்குடியிருப்பு
கோயில் தகவல்கள்
மூலவர்:கற்குவேல் அய்யனார்
சிறப்பு திருவிழாக்கள்:கள்ளர் வெட்டு திருவிழா
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தமிழர் கலை
இணையதளம்:http://karkuvelayyanartemple.tnhrce.in/

கற்குவேல் அய்யனார் கோயில் தமிழ் நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமத்துக் கோயிலாகும்.

வரலாறு[தொகு]

இக்கோயில் திருச்செந்தூரில் இருந்து 14 கி.மீ. தொலைவிலுள்ள காயாமொழி என்ற ஊரிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் குதிரைமொழி-தேரிக்குடியிருப்பு கிராமத்தில் அமைந்துள்ளது. [2]

வரலாறு

அருள்மிகு ஸ்ரீகற்குவேல் அய்யனார் தல வரலாறு. அய்யனாரை பற்றி வாய்வழி கட்டுக்கதைகள் நிறைய உண்டு. ஆனால் காலம்காலமாக கோவிலில் பாடப்பெறும் வில்லுக்கதையினை சேர்த்து எழுதப்பட்ட உண்மையான வரலாறு இது. அருள்மிகு ஸ்ரீ தர்ம சாஸ்தா கற்குவேல் அய்யனார் கோவிலில் உள்ள ஐவராஜாவின் வரலாறு. நம்ம கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டின் போது படிக்கப்படும் வில்லுப்பாட்டில் வரும் ஐவராஜா கதை. நம்ம கோவிலில் எப்போதும் முதல் பூஜை ஐவராஜா பூஜையுடன் தொடங்கபடுகிறது. பாண்டிய மன்னர்கள் காலத்தில் கிபி1226(கொல்லம்442) மதுரை (கொற்கை) தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்த ஐவராஜா மன்னர்கள் மாலையம்மனின் புதல்வர்கள் குலசேகர பாண்டியன் எனும் மன்னர் ராசா, முத்தும் பெருமாள், முகிலன் பெருமாள், முடிசூடும் பெருமாள், பாண்டிய பெருமாள் ஆகியோர்கள் ஆவார்கள் . பெரும் புகழுடனும் குறையாத செல்வத்துடனும் மக்கள் மனம் மகிழ குலசேகர மன்னன் (ஐவராஜா) நல்லாட்சி புரிந்து வந்தார். மன்னரிடம் திறமை பெற்ற கவிகளும், ஒவியர்களும் தனது திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளை பெற்றுச் செல்வது வழக்கம். அப்படி ஒரு ஒவியர் மன்னர் குலசேகர பாண்டியனின் முழு உருவத்தையும் ஒவியமாக வரைந்து மன்னரிடம் கொண்டு வந்து கொடுத்தார். மன்னரும் தத்ரூபமாக வரையப்பட்டிருந்த ஒவியத்தை கண்டு அசந்து போனார். ஒவியரின் திறமையை பாரட்டி அவருக்கு ஏராளமான பொன்னும் பொருளும் கொடுத்தார், ஆனால் ஒவியரோ "மன்னா இந்த பொன்னையும் பொருளையும் விட உயர்ந்த ஒரு பொருள் வேண்டும்" எனக் கேட்டார். நீங்கள் என்ன வேண்டுமோ கேளுங்கள் என்றார் மன்னர். "மன்னா நான் வரைந்த இந்த ஒவியமே எனக்கு பரிசாக வேண்டும்" எனக் கேட்டார். மன்னரும் புன்சிரிப்புடன் பொன்னும் பொருளும் கொடுத்து ஒவியத்தையும் கொடுத்தார். ஒவியரும் ஒவ்வொரு தேசமாக சென்று தன் வரையும் பணியை செய்கிறார். அவ்வாறே கன்னட தேசத்திற்கு சென்ற போது கன்னட அரசனின் (கன்னடியான்) மகள் முத்து வடுகச்சி, குலசேகர மன்னன் ஒவியத்தை பார்த்து அவரது அழகில் மயங்கி காதல் வயப்படுகிறார், கன்னட அரசனுக்கு ஒரே மகள், செல்ல மகள். குலசேகர மன்னனை நினைத்து இளவரசி உண்ணாமல் உறங்காமல் வாடுகிறாள். மகளின் வாட்டத்திற்கு என்ன காரணம் என விசாரிக்கிறான் மன்னன். நாட்டிற்கே மன்னனாக இருந்தாலும் தன் அன்பு மகளின் காதலின் ஆழத்தை உணர்ந்து, குலசேகரனுக்கு திருமணம் செய்து கொடுக்க எண்ணி குலசேகர மன்னரிடம் தூதுவர் மூலம் கேட்கிறார், குலசேகரரோ " எங்கள் நாட்டிற்கு எதிரி நாடு உங்களுடையது, எங்கள் மூதாதையர் காலத்திலே பகை உண்டு, எதிரி வீட்டு பெண்ணை மணக்க மாட்டேன்" என்று கூறி திருப்பி அனுப்பி விடுகிறார். குலசேகர மன்னனின் மீது போர்த் தொடுக்க பெரும்படையை திரட்டுகிறான் கன்னடியான்.மதுரையை தலை நாகராக கொண்டு ஆண்டு வந்த மன்னன் வள்ளியூரிலும் ஒரு கோட்டை அமைத்து தன் நாட்டின் தென் பகுதியை கண்காணித்து மக்கள் குறை தீர்த்து வருவதும் எதிரி படைகளிடமிருந்து நாட்டை காத்து வருவதுமாய் இருந்தான். கன்னாடியான் படை தாக்க வருவதை அறிந்து குலசேகர மன்னன் வள்ளியூர் கோட்டைக்குள் தன் மக்களுடன் பாதுகாப்பாக இருந்தான் காரணம் எதிரி படையை எதிரிக்கும் அளவுக்கு போதுமான படை கை வசம் இல்லை மதுரையிலிருந்து தன் பெரும் படை வள்ளியூர் வந்து சேரும் வரை மக்களை காக்கும் பொருட்டு மன்னன் அவ்வாறு செய்தான்.ஐவராஜா இருந்து வரும் வள்ளியூர் கோட்டைக்குள் எறும்பு கூட உள்ள நுழைய முடியாதவாறு பாதுகாப்புடன் கட்டப்பட்ட கோட்டையாகும். கோட்டைகுள்ளே மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்து வசதியும் உள்ளடக்கி கட்டப்பட்டது.வள்ளியூர் கோட்டைக்குள் வாழும் மக்களின் தண்ணீர் தேவைக்காக சீவலப்பேரி குளத்தில் இருந்து இரகசிய மடை வழியாக தண்ணீர் வந்து கோட்டைக்குள் உள்ள குளத்தில் நிரம்பும் படி பாதாள ஒடை அமைத்து கட்டி இருந்தனர். போர் தொடுக்க வந்த கன்னடியனால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை, எப்படியாவது குலசேகர மன்னனை சிறை பிடித்து சென்று மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என எண்ணி, கன்னடியன் வள்ளியூர் கோட்டைக்கு அருகில் கூடாரம் அமைத்து சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தான்.நாட்கள் ஒடியது கன்னடியான் ஐவராஜா வெளிவரும் நாளை எதிர் பார்த்து இருந்தான். அப்போது ஒரு இடையர் குலத்தைச் சேர்ந்த பெண் கோட்டையில் ஜன்னல் வழியாக தினமும் பால் கொடுக்க வருவாள். அவள் தங்க உழக்கு (பால் அளக்கும் தங்கத்திலான படி) கொண்டு பால் அளந்து கொடுப்பாள். ஒருநாள் அவள் பால் கொடுத்துவிட்டு வரும் போது சீவலப்பேரி குளத்தின் மடையில் தங்க உழக்கை கழுவுகிறாள், கழுவும் போது உழக்கு, மடையில் விழுந்து காணமல் போகிறது. அய்யய்யோ என் தங்க உழக்கை காணவில்லையே, என அழுது புலம்புகிறார். மறுநாள் கோட்டைக்கு பால் குடுக்க வரும்போதும் சோகமாக வருகிறாள், இறுகிய முகத்துடன் அலுமினிய உழக்கில் பால் அளந்து கொடுக்கிறாள். கூடாரத்தில் இருந்த கன்னட படைவீரன் அந்த பெண்ணை பார்த்து விட்டு ஏன் என்னாச்சு உன் தங்க உழக்கு எங்கே என கேட்கிறான். மடையில் உழக்கு தொலைந்ததை சொல்கிறாள்.ஐவராஜா படைவீரன் கோட்டைக்குள் சுற்றி வரும்போது தொலைந்து போன அந்த தங்க உளக்கு அவன் கண்ணில் படுகிறது அதை எடுத்து இவராஜாவிடம் குடுத்து நடந்ததை சொல்கிறான், நீதி அரசன் இவராஜாவோ இதை அந்த பெண்ணிடம் குடுத்துவிடுமாறு கூறுகிறார் அதற்கு மறுநாள் கோட்டைக்கு பால் கொடுத்து விட்டு, கூடாரத்தில் பால் கொடுக்கும் போது தங்க உழக்கில் கொடுக்கிறாள், கன்னடிய படைவீரர்கள் ஏனம்மா உன் உழக்கு தொலைய்ந்தகாகசொன்னாயே எப்படி உன் உழக்கு கிடைத்தது என கேட்கிறார்கள். கோட்டைக்குள் கிடைத்தது, கோட்டையில்தான் கொடுத்தார்கள் என வெகுளியாக கூறுகிறாள். ஆனால் கன்னடியர்கள் " குளத்தில் தொலைந்த உழக்கு எப்படி கோட்டைக்குள் கிடைக்கும், அப்படியென்றால் கோட்டைக்கு தண்ணீர் அந்த குளத்தில் இருந்துதான் செல்கிறது, தண்ணீர் செல்லும் தடத்தில் சென்றால் கோட்டைக்குள் சென்று விடலாம்" என்று நினைத்தனர். அதே போலவே குளத்தில் இருந்து இரகசிய மடையை கண்டுபிடித்தனர். அதன் வழியாக கோட்டைக்குள் செல்லும் தண்ணீரை தடுத்து நிறுத்துகிறார்கள் . இதை அறிந்த மாமன்னன் குலசேகர மன்னரும் , அவரது தம்பிகளும் இனியும் காலம் கடத்துவது தவறு மக்களை காக்கவே கோட்டை அமைத்து வாழ்ந்தோம் இப்போது என் மக்களுக்கே உணவும் நீரும் கிடைக்காத நிலை ஏற்படின் போர் செய்வதே உத்தமம் என்று எண்ணி வீரத்துடனும் விவேகத்துடனும் போரிட்டனர். போரில் குலசேகரனின் தம்பிகள் கொல்லப்பட்டனர். குலசேகர மன்னர் சிறைபிடிக்க பட்டார். கன்னடியன் மகளுக்கு மன்னரை திருமண செய்ய கொண்டு செல்கிறான். மன்னரை பல்லாக்கில் வைத்து கொண்டு போகும் போது, எதிரி நாட்டிற்கு கைதியாக போவதை விட சாவதே மேல் என் எண்ணி கையில் இருந்த வைரமோதிரத்தை விழுங்கி மன்னவன் குலசேகரார் சாகிறார். மகன்கள் இறந்த செய்தி கேட்டு போர்க்களத்திற்கு வந்த மாலையம்மனும் அதிர்ச்சியில் இறைவனை வேண்டி தன் உயிர் துறந்தார். கனட்டியன் கோட்டை வந்து சேர்ந்த மன்னர் ஐவராஜா உடலை கண்டு அதிர்ச்சியடைந்த இளவரசி கண்ணீரும் வேதனையுமாய் குலசேகராரோடு உடன் கட்டை ஏறினார்.

ஐவராஜா சாமி ஆனது எப்படி.

        குலசேகர மன்னரும் கன்னட இளவரசியும் .அவரது சகோதரர்களும். மாலையம்மனும் விண்ணுலகம் சென்றார். அங்கே அவர்களின் ஆயுள் கணக்கை பார்த்த சித்திரகுப்த நயினார் , எமதர்மராஜாவிடம் இவர்களுக்கு முற்பிறவி மனிதப்பிறவி, பிற்பிறவி தெய்வ பிறவி என கூறினார். எமதர்மராஜாவும் அவர்களை சிவனிடம் அழைத்து சென்றார். சிவபெருமானும் அவர்களை வாழ்த்தி  இவராஜவே( ஐந்து சகோதரர்களையும் )நீ பூவுலகம் சென்று மக்களை காத்து நில் உனக்கு கொல்ல வரம் வெல்ல வரம் குழந்தை பாக்கியம் அருள வரம் சோதனை தீர்க்க வரம் வேதனை மற்ற வரம் சகல செல்வமும் அருள வரம் என பல வரம் அளித்து   பூலோகத்தில் அவர்களை நாடிவரும் மக்களுக்கு அருள் ஆசி அளிக்க வேண்டும் என பூலோகம்  அனுப்பி வைத்தார்.  அந்த கன்னட இளவரசி இப்பவும் வடுக நாச்சியார் அம்மானாக பல இடங்களில் வழிபட படுகிறார்கள். பூலோகத்தில் அவர்கள் வந்து இறங்கிய இடம் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஹரிஹர புத்திரன், மணிகண்டன் ஆதி முதல் தெய்வம் பூதக்கங்களின் தலைவன் அட்ட திக்கு பலகர்களின் அதிபதி  ஐயன் பந்தி சேனைகளின் அரசன் காரையார் சொரிமுத்தையனார் கோவில். சொரிமுத்தையனாரிடம்  ஐவராஜாவும் மாலையம்மனும்  சிவபெருமான் கூறிய வரத்தை கூறி தங்களுக்கும் அய்யன் அருகே இடம் வேண்டும் என கேட்டனர். அய்யன்  நீங்க இருக்க வேண்டிய இடம் வேறு எனக் கூறி  ஒரு நாழி நிறைய வித்துக்களை கொடுத்து "இந்த வித்துக்கள் எந்த இடத்தில் விதைத்த அன்றே முளைக்கிறதோ அங்கே நிலையம் போட்டுக் கொள்ளுங்கள்" என்றார். ஐவராஜாவும் பெற்று கொண்டார்.அய்யனின் பரிவார தெய்வங்களாகிய சங்கிலி பூதம், முன்னடியான், பட்டவரயான், தளவாய் மாடன், சுடலை மாடன் ,போன்ற 21பந்திசேனைகளையும் உனக்கு துணையாக அனுப்புகிறேன் என்று ஐயன் கூற பரிவார தெய்வங்களோ அய்யனிடம் அய்யனே எங்கள் கண்கள் எப்போதும் அய்யனை தரிசித்தப்படியே இருக்க வேண்டும் பகவானே நாங்க இருக்கும் இடத்தில் உங்களை பார்த்துகொண்டே இருக்க வேண்டும்.  அதனால் நீங்களும் எங்க கூட வரவேண்டும்" என கூறினார்கள். அய்யனாரும் நீங்க முன்னாடி போங்க நான் உங்களுடனே வருவேன் என்றார். ஐவராஜாவும் பரிவாரங்களும் பேச்சிப்பாறை வருகிறார்கள் அங்கு வித்து(விதை) போட்டு பார்க்கிறார்கள் முளைக்கவில்லை,அங்கு அருள் பாலிக்கும் ஐயனாரின் தாயான பேச்சியம்மனும் அவர்கள் கூட வருகிறார். அங்கிருந்து ஒவ்வொரு இடமாக செல்கிறார்கள் வித்து எங்கும் முளைக்கவில்லை, ஐயனாரின் இன்னொரு வடிவமான வள்ளியூர் தென்கரை மகாராஜா கோவிலில் இருந்து வன்னியராஜாவும் அவரது சகோதரர்கள், தங்கை வன்னிச்சியும் அய்யனுக்கு பரிவார தெய்வங்களாக வருகிறார்கள். இப்போது கற்குவேல் அய்யனார் கோயில் இருக்கும் பகுதி செல்வச் செழிப்புடன், இயற்கை வளமுடன் இருக்கிறது. இங்கே சிறிது ஒய்வெடுக்கிறார்கள் . கண் அயர்ந்து நேரத்தில் கை தவறி நாழியில் இருந்து வித்து கிழே விழுகிறது , என்ன அதிசயம்...!  கண் விழித்து பார்த்தால் விழுந்த வித்துக்கள் அத்தனையும் முளைத்துவிட்டன...!!

அந்த இடம் அவர்களுக்கு பிடித்து போக அய்யனும் அங்கேயே ஐவராஜாவுடன் பரிவார தேவதைகளுடன் இருக்கிறார்கள். அப்போது ஆடு, மாடு என செல்வச்செழிப்புடன் இருந்த அந்த பகுதியில் பரமன் குறிச்சியை சேர்ந்த ஐயன் கோனார் வழி சந்ததிகள் , பால் தயிர் விற்க அந்த வழியாக வியாபாரத்திற்கு செல்வது வழக்கம். அப்படி போகும் போது இந்த இடத்திற்கு வந்தவுடன் கால் தடுக்கி அவர்கள் வைத்திருந்த பால் பானையும், தயிர் பானையும் கவிழ்ந்து விடுகிறது. இது என்ன சோதனை என வீட்டுக்கு வருகிறார்கள். மறுநாளும் இவ்வாறே கால் தடுக்கி பால் பானை கவிழ்கிறது.தினமும் அந்த இடத்தில் இப்படி ஆகிறது என கணவரை கூட்டிட்டு வந்து அந்த இடத்தை மண்வெட்டியால் நல்ல திருத்தி வழியை சரி செய்கிறார்கள். அப்படி இருந்தும் மறுநாளும் அதே இடத்தில் அதே போல் பால் பானை கவிழ்கிறது. அந்த பெண்கள் அவரவர் கணவர்களிடம் வந்து கூறுகிறாள். இதற்கு மேல் என்ன செய்ய என யோசனையுடன் அன்றைய பொழுது முடிந்தது. இரவு தூங்குகிறார்கள் நன்கு அயர்ந்து தூங்கியவரின் கனவில் அசிரீரி யாக கேட்டது ஒரு குரல் "உன்னோட நான் இருக்கிறேன்,நான் என்னுடைய பரிவரங்களுடன்இந்த பகுதியில் இருக்கிறேன் எனக்கு கருவேல மரங்களின் நடுவில் நிலையம் போடு. என்னை நம்பி வருபவருக்கு நல்லதே நடக்கும்". என்று கூறியது."இறைவா, ஐயனாரே என் பிழைப்பு நடத்துவதே கஷ்டமா இருக்கு, இதில் உனக்கு எப்படி பூஜை கொடுப்பது" என்றார் அவர். நீ நிலையம் மட்டும் போடு மற்றவை தானாக நடக்கும் என்றது அசரீரி. மறுநாளே ஐயன் கோனாரும் சிறியதாக பீடம் போட்டு வழிபட்டனர் கருவேல மரங்களுக்கு நடுவில் இருந்ததால் கருவேல அய்யனார் என மக்கள் வணங்கினார்கள். அந்த பகுதியில் இருந்த மக்கள் அய்யனை வணங்கி சென்றால் தொட்டது துவங்கியது. கருவேல அய்யனார் கோவில் வந்த பின்பு ஊருக்குள் பஞ்சம் என்பதே இல்லை , (கருவேல அய்யனார் என்பது மருவி கற்குவேல் அய்யனார் ஆயிற்று) கோவிலில் அய்யனுக்கு கொடையாக பொன்னும், பொருளும் குவிகிறது. அய்யனாருக்கு பங்குனி உத்திர நாளில் ஊர் மக்கள் சேர்ந்து வரி பிரித்து கொடை கொடுக்கிறார்கள். இப்படி இருக்கும் போது ஊரின் செல்வச்செழிப்பை அறிந்த கள்வன் ஒருவன் ஊரில் களவாட எண்ணிணான். துடியாய் அய்யனார் காவல் காக்கும் பூமியில் அவரின் பரிவார தெய்வங்களை மீறி களவெடுக்க முடியுமா? முடியாது என அச்சம் கொண்டு கேரளாவில் மிகப்பெரிய மந்திரவாதி ஒருவனிடம் அந்த ஊரிலும்,கோவிலிலும் ஏகப்பட்ட பொன்னும், பொருளும் இருக்கு அதனை நாம் களவெடுக்க உனது உதவி தேவை என கூறுகிறான் கள்வன். தெய்வங்களை கட்டி விட்டு ஊருக்குள் திருட வேண்டும் என மந்திரவாதியிடம் கூறுகிறான். ஒரு அமாவாசை நாளில் சாமியை மாந்திரிகம் மூலம் கட்டி கலயத்தில் அடைக்கிறார்கள். கலயத்தை தாமிரபரணி ஆற்றில் எறிந்து விடுகிறார், தளவாய் மாடனை கலயத்தில் அடைக்க முடியவில்லை. தளவாய் மாடன் பூசாரியின் கனவில் தோன்றி தாமிரபரணி ஆற்றங்கரையில் ஒரு கலயம் ஒதுங்கி இருக்கு அதில் நிறைய பொற்காசுகள் இருக்கு நீ எடுத்துக்கொள் னு சொல்றார் (ஏனேனில் அய்யனார் உத்தரவிட்டால் தான் கள்ளனை பிடிக்கலாம், அய்யனாரை கலயத்தில் இருந்து வெளில எடுக்க, அய்யனார் தான் கலயத்தில் என்றால் பூசாரி பயந்து விடலாம் என எண்ணி அப்படி கூறுகிறார்). பூசாரியும் அவரது மருமகனும் கலயத்தை தேடி செல்கிறார்கள். அந்த மந்திரவாதி கலையத்தில் அடைப்படாத தளவாய் மாடனால் ஆபத்து வரும் என பயந்து அவனை சுற்றி நால் பக்கமும் மந்திர காட்டு போட்டு சற்று ஓய்வு எடுக்க எண்ணி சுந்தரபாண்டி சாஸ்தா கோவில் அருகில் உள்ள ஒரு கல் சாத்திரத்தில் அயர்ந்து தூங்குகிறான் அப்போது தளவாய் ஆகாய மார்க்கமாக ஒரு கல்லை அவன் தலையில் போட்டு கொன்றுவிடுகிறார் , நால் பக்கமும் மந்திர கட்டு போட்டவன் ஆகாயத்தில் போடா மறந்துவிட்டான் அதுதான் விதி...இங்கு கள்வன் சுதந்திரமாக களவெடுக்கிறான் ( இதுவே கள்ளர் வெட்டின் போது களவெடுத்தல் நிகழ்வு). பூசாரியும் அவரது மருமகனும் தாமிரபரணி கரையில் கலயத்தை கண்டனார். சந்தோசத்தில் கலயத்தை கையில் எடுத்து உடைக்கிறார்கள், உடைபடவில்லை. திரும்பவும் உடைக்கிறார்கள், கலயம் உடைபடவில்லை. மாமனுக்கு கை வலிக்க மருமகன் உடைக்க , மருமகன் கை வலிக்க மாமானார் உடைக்க , இப்படி மாறி மாறி உடைத்து பார்க்கிறார்கள், ( கள்ளர் வெட்டு அன்று மதியம் பாடப்படும் வில்லுக்கதையில் "மாமன் சடைய மருமகன் உடைக்க, மருமகன் சடைய மாமன் உடைக்க" னு வரும்). ஒரு கட்டத்தில் கலயம் உடைபடுகிறது. அதிலிருக்கும் அய்யனும் பரிவார தேவதைகளும் ஆக்ரோசமாக வெளி வருகிறார்கள். அய்யனார் அய்யங்காச்சி படைகளிடம் ஊருக்குள் களவெடுக்கும் கள்ளனை உயிரோடு பிடித்து வரச்சொல்லி கட்டளையிடுகிறார் . பரிவார தெய்வங்களும் ஆதாளி போட்டு செல்கின்றன. அய்யங்காச்சி படைகளை கண்டு பயந்து கள்ளன் தப்பிக்க ஒடுகிறான் . கள்ளனை பிடித்து சங்கிலி போட்டு முன்னடி சாமியியும் பட்டவராயனும் கூட்டிட்டு வராங்க. அய்யனார் முன்னாடி நிறுத்துகிறார்கள், இது போன்ற தவறு இனி நடக்க கூடாது என கள்ளனை சிரச்சேதம் செய்ய கட்டளை இடுகிறார் அய்யனார், காவல் தெய்வம் சுடலைமாடன் நான் கொல்கிறேன் என்று ஆவேசமாக சொல்கிறார்.அய்யனார் மகனே நீ கோபாகரன் ஆவேசமானவன் "நீ சென்றால் மக்கள் கூடும் இடத்தில் உயிர்சேதம் ஏற்பட்டுவிடலாம் ". அதனால் உன்னைப் போல் வீரமும், அதே நேரம் பொறுமையும் நிறைந்த வன்னிய ராஜா வை கூப்பிடுங்கனு சொல்றார். (இந்த நிகழ்வு தான் இப்போதும் கள்ளர் வெட்டின் போது அய்யனார் சந்நிதியில் இருந்து மேள தாளத்துடன் சென்ற அழைத்த பின்பு தான் வன்னியராஜா வருவார்), வன்னியராஜா வருகிறார்,அய்யனார் வன்னியராஜா விடம் அரிவாளை கொடுத்து கள்ளனை சிரச்சேதம் செய்து வா என உத்தரவிடுகிறார். வன்னிய ராஜா பேச்சியம்மனிடமும், பெரியாண்டவரிடமும், ஆசி வாங்கிய பின் கள்ளனை வதம்செய்ய செல்கிறார். கள்ளனை கோவிலின் மேற்புறம் சங்கிலி போட்டு கொண்டு போறாங்க, கள்ளன் தப்பிக்க முயலுகிறான், கட்டு காவல் தாண்டி ஓடுகிறான் கள்ளன், கள்ளனை விரட்டி சென்று அருவாளால் வெட்டி தலை தனி முண்டம் தனியாக செய்து விடுகிறார் வன்னியராஜா. அய்யனாரின் அரிவாளால் வெட்டப்பட்ட கள்வனின் ஆத்மா புனிதம் அடைகிறது. கள்ளனின் ரத்தம் விழுந்த இடம் புனிதமாக கருதப்படுகிறது. அய்யனார் கள்ளனின் ஆத்மாவிற்கு ஆசி வழங்கி இன்று முதல் கோவிலுக்கு என்னை தரிசிக்க வருபவருக்கு நீயும் தெய்வமாக நின்று ஆசி வழங்குவாய் என்றும், கோவிலுக்குள்ளே கள்ளனுக்கும் இடம் கொடுத்தார். கள்ளனை தரிசிக்கும் போது கள்ளனுக்கு நேர்ந்த கதையை நினைத்து நம் மனதில் உள்ள கள்ள எண்ணங்கள் நீங்கி நல்ல மனம் அடைய வேண்டி அவருக்கு அய்யனார் சந்நிதி குடுத்து கள்ளர் சாமி ஆடி வர ஆசி அருளினார் அவரே கள்ளர் சாமி.இதுவே வருடா வருடம் கள்ளர் வெட்டு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.கள்ள மனம் உள்ளவரும் கள்ளர்வெட்டு கண்டுவிட்டால் மனம் திருந்தி விடுவார்கள்.

தேரி உருவான கதை,

        அதே ஊரில் இடையர் குலத்தைச் சேர்ந்த பேச்சித்தாய் என்ற விதவைப் பெண் ஒருவர் இருந்தார்.   ஊரில்  கிணறும்  இருந்தது. ஊர் மக்கள் அதை குடிநீருக்கு பயன்படுத்துவது வழக்கம். இந்த கைப் பெண்ணும் யார் கண்ணிலும் படாமல்  (கைம்பெண்களை பார்த்தாலே அபசகுணமாக கருதப்பட்ட காலம் அது) அதிகாலையிலே  அந்த கிணற்றில் குடிதண்ணீர் எடுத்து வருவாள். மன்னரின் ஆட்சிக்குட்பட்டபகுதியில் தோட்டத்தில் மாமரம் ஒன்று உண்டு, மாமரத்தில்  ஒரு நாளைக்கு ஒரு பழமே பழுக்கும், அந்த பழம் மன்னருக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம்.,  ஒருநாள் அப்படி பழுத்த பழம் ஒன்று கைம்பெண்ணுக்கு தெரியாமலே அவரது குடத்தில் விழுந்தது. அவளும் கவனிக்காமல் வீட்டில் வைத்து விட்டு அன்றாட வேலைகளை செய்தார், அரசனின் பணியாட்கள் மாம்பழத்தை பறிக்க சென்று மாம்பழம் இல்லாததால் ஊரேல்லாம் அனைத்து வீடுகளிலும் தேடுகிறார்கள். கடைசியாக கைம்பெண் வீட்டில் தேடி அவள் குடத்தில் இருந்து பழத்தை எடுக்கிறார்கள். பழத்தை அரசனிடம்  கொடுத்து விட்டு, ஒரு கைம்பெண் பழத்தை திருடி வைத்திருந்ததாக கூறுகிறார்கள். பணியாட்களின் பேச்சை நம்பிய அரசன் அவளை கைது செய்து வருமாறு கட்டளை இடுகிறார்.அந்த பெண்ணை அரசனிடம் வலுக்கட்டாயமாக அழைத்து செல்கிறார்கள். அரசவையில் அவள் பழம் எப்படி வந்தது என்று தெரியவில்லை என அழுது கூறுகிறாள். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அரசரோ நம்பவில்லை. அவளை சுண்ணாம்பு களவாயில் வைத்து நீத்த சொல்கிறார்.இறக்கும் தருவாயில் அவள் நீதி நெறியை நிலைநாட்டி இங்கு குடி கொண்டிருக்கும் கற்குவேல் ஐயனாரே! நீரே சாட்சி தவறான நீதி வழங்கிய இந்த மன்னனின் பூமி மண் மாரி பொழிந்து மண்ணாக போகட்டும், நீதி அரசன் உமக்கு மட்டும் சொளவு அளவு இடம் பூங்காவாகட்டும் என்று அய்யனை நோக்கி கூறினாள்.  அந்த அபலை பெண்ணின் சாபம் பலித்தது.  அந்த மன்னனின் இடம் முழுவதும் மண் மாரி பொழிகிறது, மழை இல்லாமல் பூமி வறண்டது அந்த பெண் தன் நம் கோவிலில் சேலைக்காரி அம்மனாக அருள் பாலிக்கிறாள் .விவசாயத்தையும், ஆடு மாடுகளையும் நம்பி வாழ்ந்த மக்கள் வாழ வழியின்றி தவித்தனர், குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் தாங்கள் வாழ்ந்த பூமியை விட்டு இடம் பெயர ஆரம்பித்தனர்.ஊரை விட்டு போகலாம் ஆனா குல தெய்வத்தை விட்டு போக முடியுமா?. நம்ம போன பிறகு யார் கோவிலுக்கு பூஜை செய்வார்கள் என நினைத்து, ஏழாயிரம் பண்ணை  சார்ந்த பிள்ளைமார் சமுதாய பூசாரிகளை  அழைத்து (அவரது வம்சா வழியினரே கள்ளர் எனும் இளநீரை தேரிக்கு இன்றளவும் கொண்டு வருகிறார்கள்). அவரிடம் கோவில் சாவியை கொடுத்து கோவிலில் பூஜை செய்து கொள்ளுங்கள்,   கோவிலுக்கு வரும் வருமானத்தில் உங்களுக்கும் சம்பளம் எடுத்துக்கொள்ளுங்கள் எங்கள் ஆண்டவனுக்கும் நித்தமும் நித்திய பூஜை செய்து கோவிலை பராமரித்து காத்து வாருங்கள் என்றனர். நாங்கள் கார்த்திகை மாதம் கள்ளர் வெட்டுக்கு வரும் போது சாவியை வாங்கி கொள்கிறோம் என்றனர் அவர்கள்வாரிசுகள் தான்  இன்றளவும் கோவிலில் பூஜை செய்கிறார்கள் .  (இந்த சம்பிரதாயமும் இப்போதும் கடைபிடிக்கபடுகிறது  கள்ளர் வெட்டு முடிந்து அனைத்து சாமிக்கும் படைப்பு போட்டு கிளம்பும் போது பட்டவராயன் பட்டறைகாரர்கள் சாவியை பூசாரிகளிடம் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது) . அங்கிருந்து வெளியூர்களுக்கு பிழைப்பு தேடிச் சென்றவர்கள் தான் இன்று பட்டரைக்காரர்கள், ஒவ்வொரு ஆண்டும்  ஒவ்வொரு சாமிக்கும் அந்தந்த பட்டரைக்காரர்களே படையல் போடுவது, பூஜை செய்வது, கள்ளர் வெட்டு அரிவாள், தாம்பு கயிறு எனும் பாசக்கயிறு கொண்டு வருவது என சம்பிரதாய முறைப்படி இன்றளவும் செய்கிறார்கள்.  


ஐவராஜா விற்கு ஏன் முதல் பூஜை,

           கள்ளர் வெட்டு திருவிழா தொடங்கும்போது ஐவராஜாவிற்கே முதல் பூஜை போடப்படுகிறது. கார்த்திகை 27 ஐவராஜா பூஜையுடன் தான் திருவிழா ஆரம்பமாகும்காரணம் கோவிலில்  அய்யனார் முதன்மை தெய்வமாக இருந்தால் கூட ஐவராஜா மூலமாகத்தான் ஐயனார் பாபாநாசம் மலை விட்டு இங்கு வந்து கற்குவேல் ஐய்யனாக காட்சி தருகிறார் மாலையம்மனும் ஐவராஜாவும் கேட்டுக் கொண்டதால் தான் சொரிமுத்தைய்யன்  கோவிலில் இருந்து வந்து அய்யனார் இங்கு அருள் பாலிக்கிறார் என்பதாலும், நல்லாட்சி நடத்திய ஐவராஜா வை கௌரவபடுத்தும் விதமாகவும் அவர் மாமன்னனாக இருந்தாதலும் ஐயனார்க்கு அடுத்து அவருக்கே முதல் பூஜை. பாளையங்கோட்டையை சார்ந்த ஐவராஜா, மாலையம்மன் , பட்டறைக்காரர்கள்   பிச்சையா கோனார் வம்சா வழியினர் மாலையம்மனுக்கு சாத்தப்படும் சேலை கொண்டு ஐவராஜாவிற்கு பரிவட்டம் கட்டி வில்லு மேடையில் சாமி அடுக்கிறார் வில்லு கதையில் ராஜா போருக்கு செல்லும் போது எழுந்து நின்று அடுக்கிறார் சாமியாடி அரசவையில் இருக்கும் போது உக்கார்ந்து அடுக்கிறார் . ராஜா தோரணையுடனே வில்லுப்பாட்டுக்கு ஏற்றவாறு சாமி ஆடுவார் வில்லு மேடையில் ராஜா போல் பரிவட்டம் கட்டி ஐவராஜா கோமராதடி இருந்து ஆடுவது இந்த உண்மை வரலாறை பிரதிபலிப்பதாகவே இருக்கும்...

அதுபோல பாளையம்கோட்டை பேச்சியம்மன் பட்டறைகாரர்கள் செல்லையா கோனார் வாம்சா வழியினர் கள்ளர்வெட்டுக்கு வன்னியராஜா புறப்படும்போது பேச்சியம்மன் சார்பாக பரிவட்டம் கட்டி மஞ்சனை பூசி பூ மாலை போட்டு வெற்றியோடு வா மகனே என ஆசி வழங்கி அனுப்புகின்றனர் அதே போல் கள்ளர் சாமியும் ஆத்தா நீ வழியனுப்பு நான் போய் வருகிறேன் என கண்ணீர் மல்க ஆசி வேண்டி நிற்க அவருக்கும் பரிவட்டம் கட்டி திருநீரு பூசி மாலை போட்டு வழியனுப்பி வைக்கிறார்கள்....

உதயத்தூர், இளையநைனார்குளம் ஐயகோனார் வாரிசுகள் கள்ளர்வெட்டுக்கு அருவாளும் பாச கயிறும் கொண்டு வருகிறார்கள் மாசன கோனார் மகன் முத்தையா கோனார் அதிக முறை கள்ளர் வெட்டு வெட்டியவர் ( 50 ஆண்டுகளுக்கு மேல் ) தற்போது அவரது மகன் கள்ளர்வெட்டுக்கு அருவாள் கொண்டு போய் வெட்டுக்கிறார்....இதுபோல் ஒவொரு பட்டறை காரர்களுக்கும் பல சாம்பிராதயங்களும் கடமைகளும் உரிமைகளும் நம் கோவிலில் உள்ளது.....

தற்போது நம் கோவில் மிக வேகமாக வளர்ந்து இயற்கை எழில் கொஞ்ச மிக அழகாக மண்டபமும் கோபுரமும் சந்நிதிகளுமாய் ஜொலிக்கிறது பல இன மக்களுக்கு காவல் தெய்வமாய் நம் தர்ம சாஸ்தா கற்குவேல் ஐயனார் அருள் பாலிக்கிறார் குறிப்பாக நாடார் சமுதாய மக்கள் கோவிலுக்கு செய்யும் திருப்பணிகள் அளப்பறியது அவர்களது சீரிய இறை தொண்டல் கோவில் இப்போது சீரமிகுந்து கட்சியளிக்கிறது.... இறை தொண்டு செய்வோர் அய்யனார் அருள் பெற்று நலமாகவும் வளமாகவும் வாழ்கின்றனர்....

இந்த தல வரலாற்றில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் நீங்கள் கார்த்திகை மாதம் முதல் தேதியில் இருந்து 30வரை கோவிலில் நடக்கும் வில்லுப்பாட்டை கேளுங்கள் (கோவில் மண்டபத்தில் உள்ள வில்லுபட்டறையில்).இதுவே கற்குவேல் ஐயனார் கோவிலின் உண்மை வரலாறும் கோவில் படாரைகாரர்கள் வைத்திருக்கும் வில்லுப்பட்டு கதையிலும் கோவிலில் கார்த்திகை மாதம் முழுவதும் படிக்கும் வில்லுப்பாட்டு கதையிலும் சொல்லும் உண்மை வரலாறு...இதற்கு ஆதரமாக ஐவராஜா பரிவட்டம் கட்டி ஆடுவதும் கள்ளர்வெட்டுக்கு பயன் படுத்தும் அருவாயும் ( இப்போது பயன்படுத்தும் அருவாள் 300 ஆண்டுக்கு மேல் பயன்படுத்தப்பட்டது இதுபோல் பயன்படுத்தப்பட்டு பழையதான பல அருவாள்கள் இருக்கின்றன அவை காலம் கடந்து கள்ளர்வெட்டு வரலாறை கூறுகின்றன ), பாச கயிறும், கள்ளர்வெட்டுக்கு அடுத்த நாள் செய்யும் படைப்பு பூஜையும் அமைந்துள்ளன....கோவிலுக்கு செல்லும் நம்மில் பலருக்கு இந்த சடங்கு சாம்பிர்க்தயங்கள் தெரிவதில்லை அய்யனார் கோவில் வரலாறை தெரியாதோர் அறியும் வண்ணம் செய்வதே இந்த பதிவின் நோக்கம்.

வந்தோரை எல்லாம் வளமோடு வாழ வைப்பார் கற்குவேலய்யன் .

அனைவரும் வருக அய்யன் அருள்i பெருக......🙏

மூலவர்[தொகு]

இத்தலத்தில் குடிகொண்டிருக்கும் மூலவரான அய்யனார் கருவேல என்ற மரம் இருந்த பகுதியில் தோன்றியதாகக் கூறுவர். கரு வேல அய்யன், கற்கு வேலப்பன், கருக்குவாலை அய்யன், கற்குவேல் அய்யனார் என்ற பல பெயர்களில் அவர் அழைக்கப்படுகிறார்.[3] மூலவர் பூர்ணம், பொற்கமலம் என்ற இரு தேவியருடன் அமர்ந்த நிலையில் உள்ளார். பிற தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.[2]

திருவிழாக்கள்[தொகு]

இக்கோயிலில் பலவகையான திருவிழாக்கள் நடைபெற்றுவருகின்றன. அவற்றுள் பின்வருவன முக்கியமானவையாகும்.

கள்ளர் வெட்டுத் திருவிழா[தொகு]

கள்ளர் வெட்டுத் திருவிழா தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தின் கடைசி ஐந்து நாட்களும் மார்கழி மாதத்தின் முதலாம் நாளும் ஆக ஆறு நாட்கள் தொடர்ச்சியாகக் கொண்டாடப்படுவது. ஆறாம் நாளன்று நடைபெறுகின்ற கள்ளர் வெட்டுத் திருநாள்தான் மிகப் பிரசித்திப் பெற்றது. கள்ளர் வெட்டு அன்று காலையில் பால்குடம் எடுத்தல், அதன்பின் தாமிரபரணி நதியின் தீர்த்தம் யானை மீது வெள்ளிக் குடத்தில் கொண்டு வருதல், அதனைத் தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம், மதியம் 12 மணிக்குச் சிறப்பு ஆராதனை நடைபெறுகிறது.[4] அன்று மாலை 4 மணிக்குக் 'கள்ளர் வெட்டு' நடைபெறும்போது இளநீர் இங்குக் கள்ளராக உருவகப்படுத்தப்படுகிறது. கோவிலின் பின்புறமுள்ள செம்மண் தேரியில் இந்த இளநீர் கள்ளராக வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட இளநீரில் இருந்து மண்ணில் விழும் நீர் புனிதமாகக் கருதப்படுகிறது.நீர் பட்ட மண்ணை பக்தர்கள் எடுத்துச் சென்று தங்கள் விளைநிலங்களில் தூவுகிறார்கள். கல்லாப் பெட்டியில் வைத்துக் கொள்கிறார்கள். மகசூல் கூடும், வியாபாரம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். [5]

பங்குனி உத்திரம்[தொகு]

பங்குனி உத்திர திருவிழாவும் இங்கு அதி விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. மாவிளக்கு பூசை, திருவிளக்கு பூசைகளைத் தொடர்ந்து தாமிரபரணி ஆற்றிலிருந்து தீர்த்தம் கொண்டுவரப்படும். தொடர்ந்து சிறப்பு வழிபாடு, ஆராதனை நடத்தப்படுகிறது- [6]

குடமுழுக்கு[தொகு]

இக்கோயிலின் குடமுழுக்கு 1 செப்டம்பர் 2022இல் நடைபெற்றது. [7] இதற்கு முன்பாக 31 அக்டோபர் 2008இல் குடமுழுக்கு ஆனதாகக் கல்வெட்டு உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. கற்குவேல் அய்யனார் கோவில் மண்ணால் செழிக்கிறது வியாபாரம், நக்கீரன், 1 பிப்ரவரி 2011[தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 "Arulmigu Karkuvel Ayyanar Temple". Archived from the original on 2015-12-08. பார்க்கப்பட்ட நாள் 2015-11-23.
  3. அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயில், தினமலர் கோயில்கள்
  4. தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு திருவிழா, தினத்தந்தி, 8 டிசம்பர் 2015
  5. தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயில் கள்ளர் வெட்டு திருவிழா, தினமணி, 17 டிசம்பர் 2009
  6. தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா, தினமலர், 21 மார்ச் 2013
  7. கற்குவேல் அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா, தினத்தந்தி 29 ஆகஸ்டு 2022