சப்தர் ஆசுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சப்தர் ஆசுமி
பிறப்பு(1954-04-12)ஏப்ரல் 12, 1954
தில்லி, India
இறப்பு2 சனவரி 1989(1989-01-02) (அகவை 34)
காசியாபாத், இந்தியா
தொழில்எழுத்தாளர் , வீதி நாடகக் கலைஞர் , செயற்பாட்டாளர்
காலம்1973–1989

சப்தர் ஆசுமி (SAFDAR HASHMI 12 ஏப்பிரல் 1954–2 சனவரி 1989) மார்க்சியக் கொள்கையாளர், வீதி நாடகக் கலைஞர், கதை வசனம், இயக்கம் எனப் பல துறைகளில் விளங்கிய செயற்பாட்டாளர்.

இளமைக்காலம்[தொகு]

சப்தர் ஆசுமியின் தந்தையும் இடதுசாரி சிந்தனைகள் கொண்டவர். சப்தர் ஆசுமி தில்லி தூய ஸ்டீபன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து பட்டம் பெற்று முதுகலைக் கல்வியைத் தில்லிப் பல்கலைக் கழகத்தில் படித்தார். கல்லூரியில் படிக்கும்போதே மார்க்சியப் பொதுவுடைமை கட்சியின் மாணவர் அமைப்பில் முனைப்பாக ஈடுபட்டார். மாணவப் பருவத்தில் நாடகக் கலையின் மீது ஆர்வம் கொண்டார். கல்வியை முடித்ததும் மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்து முழு நேரம் கட்சிப் பிரசாரம் செய்தார்.

வீதி நாடகப் பணி[தொகு]

தில்லி, சிரீநகர், கார்வால் போன்ற ஊர்களில் உள்ள கல்லூரிகளில் ஆசிரியர் பணி செய்தார். இந்திரா காந்தி இந்தியாவின் தலைமை அமைச்சராக இருந்தபோது நெருக்கடி நிலை காலத்தில் அரசுக்கு எதிராகப் பரப்புரை செய்ய நாடகத்தைப் பயன்படுத்திக் கொண்டார். நெருக்கடி காலம் முடிந்ததும் அரசுப் பணியிலிருந்து விலகி வீதி நாடகங்கள் அரங்கேற்றுவதில் ஈடுபட்டார்

அந்தக் காலத்தில் நிலவிய மக்கள் பிரச்சினைகளை நாடகங்கள் மூலம் எடுத்துக் காட்டிப் பேசிய சப்தர் அசுமி ஜன நாட்டிய மஞ்ச் என்னும் வீதி நாடகக் குழுவைத் தோற்றுவித்தார் குறுகிய காலத்தில் 24 நாடகங்களை 4000 முறை தொழிலாளர்கள் வாழும் பகுதிகளில் வீதி நாடகங்களாக அரங்கேற்றி மக்களின் பிரச்சினைகளை எடுத்துக்காட்டிப் பரப்புரை செய்தார்.

1989 சனவரி முதல் நாளில் உத்தரப்பிரதேசம் சந்தாபூரில் ஹல்லா போல் என்ற பெயரில் வீதி நாடகத்தை நடத்தினார் சப்தர் ஆசுமி. அந்நாடகத்தை விரும்பாத குண்டர்கள் அங்கு நடித்துக் கொண்டு இருந்த கலைஞர்களைத் தாக்கினர். சப்தர் ஆசுமிக்குத் தலையில் பலத்த அடி விழுந்தது. படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மறுநாள் இறந்து போனார் சப்தரின் ஆசுமியின் படுகொலை இந்தியா முழுவதும் பெரிய அதிர்வையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

சப்தர் ஆசுமியின் மரணத்தையும் ஈகத்தையும் நினைவு கூர்ந்து ஓவியர் எம்.எப் உசேன் தம்முடைய ஓர் ஓவியத்தை சப்தருக்குக் காணிக்கை ஆக்கினார்.

மேற்கோள்[தொகு]

http://www.livemint.com/Leisure/RFXOwLRUUbjkWxwJtX2TqI/Safdar-Hashmi-and-the-art-of-cultural-resistance.html

http://www.sahmat.org/aboutsafdar.html பரணிடப்பட்டது 2015-09-24 at the வந்தவழி இயந்திரம்

http://indiatoday.intoday.in/story/death-of-theatre-activist-safdar-hashmi-sparks-off-solidarity-controversy/1/323420.html

"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்தர்_ஆசுமி&oldid=3243016" இலிருந்து மீள்விக்கப்பட்டது