க. கணபதிப்பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை
Prof. K. Kanapathipillai
பிறப்புகந்தசாமிப்பிள்ளை கணபதிப்பிள்ளை
(1903-07-02)2 சூலை 1903
புலோலி, பருத்தித்துறை, இலங்கை
இறப்புமே 12, 1968(1968-05-12) (அகவை 64)
தேசியம்இலங்கையர்
துறைதமிழ் மொழி
பணியிடங்கள்இலங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை
கல்வி கற்ற இடங்கள்கலாநிதி (இலண்டன் பல்கலைக்கழகம் (1933-35)

வித்துவான் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (1931-32))

இளங்கலை (இலங்கைப் பல்கலைக்கழகம்)
முனைவர் பட்ட 
மாணவர்கள்
சு. வித்தியானந்தன்
க. கைலாசபதி
கா. சிவத்தம்பி
பொன். பூலோகசிங்கம்
அ. சண்முகதாஸ்
ஆ. வேலுப்பிள்ளை[1]
அறியப்படுவதுதமிழ்ப் பேராசிரியர், தமிழறிஞர், எழுத்தாளர்
தாக்கம் 
செலுத்தியோர்
விபுலாநந்தர்
ரா. பி. சேதுப்பிள்ளை[1]
துணைவர்மனோன்மணி
பிள்ளைகள்ஆண்கள்: (டாக்.) கந்தசாமி, (டாக்.) ஒப்பிலாமணி, பெண்கள்: சௌந்தராம்பிகை, மங்களாம்பிகை, பாலாம்பிகை, அருள்மொழிநங்கை, (டாக்.) வள்ளி

க. கணபதிப்பிள்ளை (2 சூலை 1903 – 12 மே 1968)[2] இலங்கைத் தமிழ்ப் பேராசிரியரும், தமிழறிஞரும், எழுத்தாளரும், தமிழ்க் கல்வெட்டாய்வாளரும்[1][3] ஆவார். ஈழத்துத் தமிழ் நாடக வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

யாழ்ப்பாண மாவட்டம், பருத்தித்துறை, புலோலி கிழக்கில் கந்தசாமிப்பிள்ளை என்பவருக்குப் பிறந்த பேராசிரியர் கணபதிப்பிள்ளை தனது ஆரம்பக் கல்வியை வேலாயுதம் மகா வித்தியாலயம், ஹார்ட்லி கல்லூரி ஆகியவற்றில் பயின்றார்.[4] பருத்தித்துறை ஆரிய திராவிட மகா பண்டிதர் பிரம்மசிறி முத்துக்குமாரசுவாமிக் குருக்களிடம் தமிழும், இசையும் கற்றுக் கொண்டார்.[5]

கணபதிப்பிள்ளை இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் படித்து, 1930 ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக்கழகத்தின் இளங்கலைத் தேர்வில் சங்கத மொழியைச் சிறப்புப் பாடமாகவும், பாளியைத் துணைப் பாடமாகவும் கற்று முதல் வகுப்பில் தேறினார்.[5] இலங்கை அரசின் கீழைத்தேய மொழி ஆய்வுப் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.[5]

தமிழ் மொழியிலும் உயர் கல்வி பெறும் நோக்கோடு சுவாமி விபுலாநந்தர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதலாவது தமிழ்ப் பேராசிரியராக நியமிக்கப்பட்ட போது கணபதிப்பிள்ளையையும் தம்மோடு சிதம்பரத்துக்கு அழைத்துச் சென்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொல்காப்பியம் முதலான தமிழிலக்கண நூல்களையும், சங்க இலக்கியங்களையும் பொன்னோதுவார் மூர்த்திகள், சர்க்கரை இராமசாமிப் புலவர் போன்ற அறிஞர்களிடமும், அரசன் சண்முகனாரின் மாணவர் கந்தசாமியாரிடமும் இரண்டு ஆண்டுகள் கற்று வித்துவான் தேர்வு எழுதினார்.[5]

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வித்துவான் பட்டத்துடன் இலண்டன் சென்று இலண்டன் பல்கலைக்கழகத்தின் கீழைத்தேயக் கலைக்கல்லூரியில் சேர்ந்து, பேராசிரியர் ரேணர் என்பவரிடம் மொழியியல் ஆய்வில் ஈடுபட்டார். ஏழாம் எட்டாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சாசனங்களின் மொழி இலக்கணத்தை விளக்கி தனது கலாநிதிப் (முனைவர்) பட்டத்துக்கான ஆய்வு நூலை எழுதினார். [5]

1936 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்க்கலைக்கழகக் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளராகவும், தமிழ்த் துறைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 1947 ஆம் ஆண்டில் தமிழ்ப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.[6] 1965-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். இவரது முயற்சியால் இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சிறப்புக் கலைத் தேர்வு ஏற்படுத்தப்பட்டது. இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைத் தேர்வையும் தொடங்கி வைத்தார்.[5]

தமிழ்ப் பணி[தொகு]

பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக 29 ஆண்டுகள் பணியாற்றினார். தமிழ்ச்சங்கத்தின் இளங்கதிர் என்ற இதழைத் தொடக்கி அதனைத் தொடர்ந்து நடத்த உதவி செய்தார். தமிழ்ச்சங்கத்துக்கென பல நாடகங்களை எழுதி நெறிப்படுத்தினார். இவற்றுள் உடையார் மிடுக்கு, முருகன் திருகுதாளம், கண்ணன் கூத்து, நாட்டவன் நகர வாழ்க்கை என்பவை நானாடகம் (1940) என்ற தலைப்பில் அச்சில் வெளிவந்தன.[5] இவற்றை விட பொருளோ பொருள், தவறான எண்ணம் ஆகிய நாடகங்கள் இரு நாடகம் (1952) என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழைக் கையாண்டு பல நாடகங்களை எழுதினார். சங்கிலி (1956) என்ற வரலாற்று நாடக நூல் பாடநூல் புத்தகமாக வெளிவந்தது.[5] பூஞ்சோலை (1953), வாழ்க்கையின் விநோதங்கள் (1954) ஆகிய புதின நூல்களையும் எழுதியுள்ளார்.[1]

தனிநாயகம் அடிகளின் முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தொடக்க விழா 1964 சனவரி 7 ஆம் நாள் புது தில்லியில் நடந்தபோது இலங்கையின் சார்பில் பேராசிரியர் கணபதிப்பிள்ளை கலந்துகொண்டார்.[7]

பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை "கலையருவி கணபதிப்பிள்ளை" என்ற பெயரில் த. சண்முகசுந்தரம் என்பவர் எழுதி 1974 இல் வெளியிட்டார்.[1][2]

கல்வெட்டியல் ஆய்வு[தொகு]

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய போது, பிற்காலத்தில் அவர் இலங்கைத் தமிழ்க் கல்வெட்டியல் துறையில் மதிப்புமிக்க பங்களித்துள்ளார்.[1] இலங்கையின் பண்டைய பல தமிழ்க் கல்வெட்டுகளை ஆராய்ந்து, திருத்தி வெளியிடப் போதுமான பயிற்சி பெற்ற கல்வெட்டாய்வாளர்கள் இல்லாத ஒரு காலத்தில், கணபதிப்பிள்ளை முன்வந்து இப்பணிக்குத் தன் பங்களிப்பை வழங்கினார்.[3] மகனை, மொரகாவலை, பாண்டுவஸ்னுவர போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டுக்கள் குறித்து University of Ceylon Review 1960, 1962 இதழில் கட்டுரைகளாக எழுதி வெளியிட்டார். இதன் மூலம் அவர் இத்துறையில் ஒரு புதிய ஆர்வத்தை ஏற்படுத்தி, இப்பணியைத் தொடர தமது மாணவர்களுக்கு ஊக்கம் அளித்தார்.

குடும்பம்[தொகு]

பேராசிரியர் கணபதிப்பிள்ளை மட்டக்களப்பைச் சேர்ந்த மனோன்மணி என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு டாக்டர் கந்தசாமிப்பிள்ளை, டாக்டர் ஒப்பிலாமணிப்பிள்ளை என இரு ஆண்களும், சௌந்தராம்பிகை, மங்களாம்பிகை, பாலாம்பிகை, அருள்மொழிநங்கை, டாக்டர் வள்ளி என ஐந்து பெண்களும் உள்ளனர்.[3][8]

நினைவுப் பரிசுகள்[தொகு]

பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் நினைவாக கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஆண்டுதோறும் சிறந்த புனைவு நூலுக்கான பரிசை வழங்கி வருகிறது.[9]

எழுதிய நூல்கள்[தொகு]

  • பூஞ்சோலை (புதினம்)
  • வாழ்க்கையின் விநோதங்கள் (புதினம்)
  • நீரர மகளிர் (புதினம்)
  • Creativity or Life's Postures
  • This Baffling Existence
  • Vipulananda A Literary Biography
  • A Study of the Language of the Tamil Inscriptions of the 7th and the 8th Centuries A.D
  • இலங்கை வாழ் தமிழர் வரலாறு
  • ஈழத்து வாழ்வும் வளமும்
  • கணபதிப்பிள்ளை நாடகத்திரட்டு
  • கற்பின் கொழுந்து
  • காதலி ஆற்றுப்படை (கவிதை)
  • தூவுதும் மலரே (கவிதை)
  • நாவலர் வழிக்கோர் காவலர்
  • பேராசிரியர் கணபதிப்பிள்ளை நாடகத்திரட்டு
  • முருக வழிபாடும் கதிர்காமம் பாதயாத்திரையும்

நாடகங்கள்[தொகு]

  • சங்கிலி (நாடகம்)
  • நானாடகம் (1940)
  • இருநாடகம் (1952)
  • மாணிக்கமாலை (நாடகம்)
  • உடையார் மிடுக்கு
  • நாட்டவன் நகர வாழ்க்கை
  • முருகன் திருகுதாளம்
  • கண்ணன் கூத்து
  • பொருளோ பொருள்
  • தவறான எண்ணம்
  • சுந்தரம் எங்கே
  • துரோகிகள்

ஆய்வுக் கட்டுரைகள்[தொகு]

  • Jaffna dialect of Tamil - a phonological study in Indian Linguistics - Turner Jubilee Volume, Pune, India (1958)
  • Words in Jaffna dialect of Tamil - University of Ceylon Review, Vol XXIII, Vol I No 2. Peradeniya (1965)

மேற்கோள்கள்[தொகு]

தளத்தில்
க. கணபதிப்பிள்ளை எழுதிய
நூல்கள் உள்ளன.
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 கா. சிவத்தம்பி (முன்னுரை) (பெப்ரவரி 1996). "ஈழத்து வாழ்வும் வளமும்". பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. 2.0 2.1 த. சண்முகசுந்தரம் (1974). "கலையருவி கணபதிப்பிள்ளை சில நினைவுகள்". பார்க்கப்பட்ட நாள் 15 ஏப்பிரல் 2022.
  3. 3.0 3.1 3.2 கா. சிவத்தம்பி (முன்னுரை) (14 சனவரி 2004). "A Study of the Language of the Tamil Inscriptions of the 7th and the 8th Centuries A.D Share/Save/Bookmark". குமரன் பதிப்பகம். pp. xiv. பார்க்கப்பட்ட நாள் 2 அக்டோபர் 2015.
  4. ச. ஆறுமுகம் (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon. 
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 வித்தியானந்தன், சு. (1968). "பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையும் இலங்கைப் பல்கலைக் கழகமும்". இளங்கதிர். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "Department of Tamil". University of Peradeniya. Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2 அக்டோபர் 2015.
  7. பேராசிரியர் சு. வித்தியானந்தன். "Fourth International Conference Seminar of Tamil Studies January 1974 Jaffna" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2 அக்டோபர் 2015.
  8. கணபதிப்பிள்ளை, வள்ளி. "Citizenship and Statelessness in Sri Lanka: The Case of the Tamil Estate Workers". Anthem South Asean Studies. பார்க்கப்பட்ட நாள் 30 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. "தமிழ் இலக்கியத் தோட்ட இயல் விருதுகள்". பார்க்கப்பட்ட நாள் 2 அக்டோபர் 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._கணபதிப்பிள்ளை&oldid=3843806" இலிருந்து மீள்விக்கப்பட்டது