தமிழ்நாடு அரசு அதிகாரிகள் நியமன வழக்கு 2015

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு அரசு அதிகாரிகள் நியமன வழக்கு 2015 என்பது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 2001 - 2001ஆம் ஆண்டில் தொகுதி 1-க்கான துணை ஆட்சியர், காவல் துறை துணை கண்காணிப்பாளர், மாவட்ட பத்திரப் பதிவாளர் உள்ளிட்ட அலுவலர்களை தேர்ந்தெடுக்க நடத்திய போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 91 பேர்களுக்கு, தமிழக அரசு பதவி நியமனம் வழங்கியது குறித்த வழக்காகும்.

வரலாறு[தொகு]

தொகுதி 1-க்கான காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 2000–2001–ம் ஆண்டில் நடத்திய போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 91 பேர்களுக்கு துணை ஆட்சியர் போன்ற அரசு உயர்பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 2005ஆம் ஆண்டில் பணி நியமனம் வழங்கப்பட்டது. அந்த தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி நடராஜன் என்பவர் 2005–ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 91 பேரில் 83 பேர்கள் தேர்ச்சி பெற்றது செல்லாது என்றும், உடனடியாக அவர்களை அரசுப் பதவிகளில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது.[1]

இந்த தீர்ப்பை எதிர்த்து பாதிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

இடைக்கால உத்தரவு[தொகு]

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் மாற்றம் கோரி பாதிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பாக புதிய மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கில் தொடர்புடைய 83 அதிகாரிகளும் தொடர்ந்து தமிழக அரசுப் பதவியில் நீடிக்கலாம் என்று இடைக்கால உத்தரவை வழங்கியது.

இந்திய ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் ஆய்வறிக்கை[தொகு]

இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் தேர்ந்தேடுக்கப்பட்ட 91 பேரில், 15 பேர் வேறு பணிகளுக்கு சென்றுவிட்டனர், மூன்று பேர் மரணமடைந்து விட்டனர், ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மறு மதிப்பீட்டில் எட்டு பேர் மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தனர், எஞ்சியவர்கள் 65 பேர் மட்டுமே இவ்வழக்கில் தொடர்புடைய அரசு அதிகாரிகள்.

இந்த வழக்கு தொடர்பான 65 பேரின் விடைத்தாள்களை ஆய்வு செய்து விரிவான அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி[2]ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் வழக்கு குறித்த 65 பேரின் விடைத்தாள்களை ஆய்வு செய்து அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 6 மே 2015 அன்று இந்த அறிக்கையை அனைத்து தரப்பினருக்கும் வழங்கவும், அதன் மீது ஏதேனும் மறுப்பு இருப்பின் அதனைக் குறித்து நான்கு வாரங்களுக்குள் எழுத்து மூலமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்திரவிட்டது.

உச்ச நீதிமன்ற அமர்வு விசாரனை[தொகு]

ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் தாக்கல் செய்த அறிக்கையை விசாரிக்க, நீதியரசர்கள் அனில் ஆர். தவே மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

தமிழக அரசின் வாதம்[தொகு]

ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் 65 அதிகாரிகளின் வினாத்தாள்களை விரிவாக ஆய்வு செய்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், இந்த தேர்வில் எந்த வித முறைகேடுகள் நடைபெறவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளதால், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வழங்கியுள்ள தீர்ப்பை மறு ஆய்வு செய்து, மனுதாரர்களான தமிழக அதிகாரிகளின் பணி நியமனத்தை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு வாதிட்டது.

எதிர் தரப்பு வாதம்[தொகு]

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் தேர்வுக்கான விதிமுறைகள் குறித்து மிகவும் தெளிவாக வரையறுத்து உள்ளது. இதனை கருத்தில் கொள்ளாமல் தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள்களில் அடையாள குறியீடு இட்டது, பென்சில் மற்றும் ஸ்கெட்ச் பேனா போன்றவற்றில் எழுதியது போன்ற விதிமுறை மீறல்களை செய்து உள்ளனர். விடைத்தாள்களை திருத்துபவர்களுக்கு தங்களை எளிதாக அடையாளம் காட்டுவதற்காகவே இவ்வாறு செய்து இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. விதிமுறை மீறல்களில் ஈடுபட்டால் தேர்ச்சி ரத்து செய்யப்படும் என்று தேர்வாணையத்தில் இணைய தளத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளதால், முறைகேட்டில் ஈடுபட்டதாக இவர்களுடைய பணிநியமனத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது சரிதான் என பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் வாதிட்டார்.

தீர்ப்பு[தொகு]

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் 17 செப்டம்பர் 2015 அன்று தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 83 TN Officers in Big Trouble After SC Order
  2. "UPSC asked to probe TNPSC answer sheet row". Archived from the original on 2015-07-31. பார்க்கப்பட்ட நாள் 2015-09-18.
  3. டிஎன்பிஎஸ்சி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]