அலங்கார உபகார மாதா திருத்தலம் கன்னியாகுமரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புனித அலங்கார உபகார மாதா திருத்தலம் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த கத்தோலிக்க ஆலயமாகும். இது ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இத்திருத்தலம் 100 ஆண்டுகள் பழைமையானது. அன்னை மரியாளுக்கு அர்பணிக்கப்பட்ட ஆலயம் என்ற சிறப்பு வாய்ந்தது. 153 அடி உயர கோபுரம் 153 அடி நீளம் கொண்ட ஆலயம் ஜெபமாலை மணிகளின் எண்ணிக்கையான 153 என்பதை அடிப்படையாகக்கொண்டு அமைக்கப்பட்டு அதன் உச்சியில் பொற்சிலுவையால் அலங்கரிக்கப்பட்டுள்ளது இவ்வாலயத்தின் சிறப்பம்சமாகும்.

வரலாறு[தொகு]

இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவரான புனித தோமர் 1ஆம் நூற்றாண்டில் கன்னியாகுமரி வருகை தந்தார். கன்னியாகுமரி வாழ் மக்கள் கிறித்தவ மறையைத் தழுவினர். ஆனால் இவர்கள் மத்தியில் ஆன்மீகப் பணி புரியவும், வழிபாடுகள் நிறைவேற்றவும் குருக்கள் எவருமே இருக்கவில்லை. 15ஆம் நூற்றாண்டில் கன்னியாகுமரியில் தூய புனித சூசையப்பர் ஆலயம் போர்த்துகிசிய ஆளுகையின் கீழ் இருந்தது. நெருப்பில் இந்த ஆலயம் அழிந்தது. 1496, 1526 ஆண்டு கல்வெட்டுக்கள் கன்னியாகுமரியில் பரதவர்கள் கத்தோலிக்க மறையைத் தழுவியிருந்தனர் என்பதற்கான அடையாளங்களாக உள்ளன.

கன்னியாகுமரியில் 16ஆம் நூற்றாண்டில் மகிழ்ச்சி மாதா ஆலயம் இருந்தது. இந்த ஆலயமே கன்னியாகுமரி வாழ் பரதவ குலகிறிஸ்தவர்களுக்கு பங்கு ஆலயமாக விளங்கிற்று.

1542-ம் ஆண்டு புனித பிரான்சிசு சவேரியார் கன்னியாகுமரி மகிழ்ச்சி மாதா குடிசைக் கோவிலுக்கு வருகை தந்தார், திருப்பலியும் நிறைவேற்றினர். புனித சவேரியார் முத்துக்குளித்துறை கிராமங்கள் தோறும் மணியடித்தபடி சென்று அங்கு ஆட்கள் கூடியதும் அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றிய செய்திகளைக் கூறியும் நோயாளிகளைச் சந்தித்தும் வந்தார். 1544ஆம் வருடம் பிரான்சிஸ் மன்சில (francis mansilasu) இறைப்பணி செய்துவந்தார். 1548 ஆம் வருடம் வடுகப்படையினர் கன்னியாகுமரியை முற்றுகையிட்டு சூறையாடினர். அச்சமயத்தில் பிரான்சிசு சவேரியார் கன்னியாகுமரி கிறித்தவர்களுடன் பாறையில் தங்கி இறைப்பணியைச் செய்துவந்தார். 1548ஆம் வருடம் இயேசு சபையின் மறைப்பரப்பு தளமாக இருந்தது.

1700 ஆம் வருடம், மகிழ்ச்சி மாதா குடிசைக் கோவில் தூய அலங்கார மாதா ஆலயமாக மாற்றினர். இந்த ஆலயம் உரோமை கட்டிடக்கலையில் கட்டப்பட்டது. தங்கப் பீடம் உருவக்கப்பட்டது. இந்த தங்கப் பீடத்தில் அலங்கார மாதாவின் அற்புத சுருபத்தை வைத்தனர். 1798 மாதாவின் தங்கதேர் உருவாக்கப்பட்டது. 1833 இல் புனித சூசையப்பர் தங்கதேர் உருவக்கப்பட்டது.

திருத்தலமாக அறிவிக்கப்படல்[தொகு]

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலயம் திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1544-ம் ஆண்டு தூய பிரான்சிசு சவேரியார் கன்னியாகுமரி மகிழ்ச்சி மாதா ஆலயத்துக்கு வருகை தந்தார். பழமைவாய்ந்த இந்த ஆலயத்தில் சவேரியார் திருப்பண்டம் அடங்கிய கதிர் பாத்திரம் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல, 7 புனிதர்களின் திருப்பண்டம் அடங்கிய வெள்ளிப் பாத்திரமும் வைக்கப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு அற்புதங்கள் நடைபெற்று வருகின்றன[சான்று தேவை]. உள்நாட்டிலிருந்து மட்டுமன்றி பல்வேறு நாடுகளிலிருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். உள்ளூரில் இருந்து இந்து, முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தோரும் வருகின்றனர். இந்நிலையில், திருச்சபை சட்டத்தின் கீழ் 2011 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சனிக்கிழமை காலை நடைபெற்ற தேதி திருவிழா திருப்பலியில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் இந்த ஆலயத்தைத் திருத்தலமாக அறிவித்துள்ளார்[1].

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]