சா. தருமாம்பாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரந்தை எஸ். தர்மாம்பாள் என அழைக்கப்பட்ட சா. தருமாம்பாள் (இயற்பெயர்: சரஸ்வதி, 23, ஆகத்து 1890 – 20 மே 1959) என்பவர் தமிழக மருத்துவர். நீதிக் கட்சியின் முன்னணிச் செயற்பாட்டாளராகவும், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றில் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவர். சமூகச் சீர்திருத்தம், பெண்ணுரிமை, இந்தித் திணிப்பு எதிர்ப்பு ஆகியவற்றில் நாட்டம் கொண்டு ஈடுபட்ட பெண்மணி ஆவார்.

இளமைக் காலம்[தொகு]

இவர் தஞ்சாவூர் மாவட்டம், கரந்தையில் வாழ்ந்த சாமிநாதன் செட்டியார் மற்றும் பாப்பம்மாள் இணையருக்கு மகளாக 1890 ஆகத்து 23 அன்று[1] திருவையாறில் பிறந்தார். இளமையிலேயே தாய் தந்தையை இழந்தவரை இலக்குமி என்பவர் வளர்த்தார். இவர் நாடகத்தில் ஈடுபாடும் நாட்டமும் கொண்டவர். எனவே சிறந்த நாடக நடிகரான குடியேற்றம் முனுசாமி நாயுடு என்பவரை விரும்பித் திருமணம் செய்து கொண்டார். தனி முயற்சியினால் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் எழுதவும் பேசவும் கற்றுக் கொண்டார். அவையன்றி ஆங்கிலம், மலையாளம் மொழிகளிலும் பேசக் கற்றுக் கொண்டார். பின்னர் சித்த மருத்துவத்தைப் பயின்று மருத்துவர் ஆனார். சென்னை, தங்கசாலை தெரு 330 எண் கொண்ட வீட்டின் மாடியில் தங்கி சித்த மருத்துவராக பணியாற்றி சித்தானந்த வைத்திய சாலையை நடத்திவந்தார். மருத்துவப் பணியோடு ஏழை மக்களுக்கும் உதவிகள் பல செய்தார்.

பொதுப் பணிகள்[தொகு]

வாழ வழி தெரியாமல் வாடிய பெண்களுக்கு வேலைகள் பெற்றுத் தந்தார். கல்வி கற்கவும் கற்ற பின் நல்ல வேலைகள் பெறவும் ஏழைகளுக்கு உதவி செய்தார். விதவைகளுக்கு மறுமணம் செய்து வைத்தார். சாதி மறுப்புத் திருமணங்களும் செய்து வைத்தார்.

பெண்கள் மாநாடு[தொகு]

இவர் சமூகசேவையில் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றியவர். விதவைகள் மறுமணம், கலப்பு மணம், பெண் கல்வி என இம்மூன்றிற்கும் தன் வாழ்வையே அர்ப்பணித்தவர், 1938 நவம்பர் 13 ஆம் நாள், சென்னையில், தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டை நடத்தினார். மறைமலை அடிகளாரின் மகள் திருவரங்க நீலாம்பிகை அம்மையாரை அழைத்து, இம்மாநாட்டிற்குத் தலைமையேற்க வைத்தார்.

இம்மாநாட்டிலேயே, அம்மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் ஈ. வெ. இராமசாமிக்குப் பெரியார் என்னும் பட்டம் வழங்கப்பட்டது.[2]

துக்க வாரம்[தொகு]

அக்காலத்தில் பள்ளிகளில் மற்ற ஆசிரியர்களை க் காட்டிலும் தமிழாசிரியர்களுக்கு மட்டும், குறைவான ஊதியம் வழங்க்கபட்டுவந்தது. 7, நவம்பர், 1947 1940 அன்று திரு. வி. க தலைமையில் சென்னை முத்தையா உயர்நிலைப் பள்ளியில் தென்னிந்திய தமிழாசிரியர்கள் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் ஆங்கில ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்துக்கு இணையாக தமிழாசிரியர்களுக்கும் ஊதியம் வழங்கவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தை ஆதரித்து தருமாம்பாள் பேசினார்.[1] ஆனால் அரசு செவி சாய்க்காவில்லை. இதனையடுத்து துக்க வாரம் என்ற போராட்டத்தை நடத்துவதாக தருமாம்பாள் அறிவித்தார்.[1] இதனையடுத்து அன்றைய கல்வி அமைச்சர் தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார் தமிழாசிரியர்களுக்கும், மற்ற ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க உத்தரவிட்டார்.

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்[தொகு]

1938இல் கட்டாய இந்தியைத் தமிழ் நாட்டு அரசு கொண்டு வந்த நிலையில் பெரியார் ஈ. வெ. இராமசாமி அதைக் கடுமையாக எதிர்த்தார். தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு முடிந்த மறுநாள் கட்டாய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தருமாம்பாள் தலைமையில் பெண்கள் போராட்டக் களத்தில் இறங்கினார்; போராட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை தியாஜிக்கல் உயர்நிலைப் பள்ளி முன் மறியலில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் தருமாம்பாள், மூவாலூர் இராமாமிர்தம் அம்மையார், மலர் முகத்தம்மையார், திருவாரூர் பட்டு அம்மாள், தருமாம்பாள் மருமகள் சீதம்மாள் (தன் குழந்தைகளான 3 வயது நச்சினார்க்கினியன், 1 வயது மங்கயற்கரசி) ஆகியோர் கைதாகி சிறைக்கு சென்றார். இந்தித் திணிப்பைக் கண்டித்து திருச்சிராப்பள்ளியிலிருந்து நடைப் பயணம் மேற்கொண்டு வந்த 100 பேர் கொண்ட தமிழர் படையைச் சென்னையில் பல எதிர்ப்புகளுக்கு இடையே வரவேற்றார்.

நீதிக்கட்சியில் ஈடுபாடு[தொகு]

தஞ்சை மாவட்டத்தில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் தலைமைப் பதவிக்குப் போட்டி கடுமையாக இருந்த நிலையில் தருமாம்பாள் ஈடுபட்டு பட்டுக்கோட்டை அழகிரிசாமி துணையுடன் சமாதானம் பேசி நீதிக் கட்சியில் பிளவு ஏற்படுவதைத் தடுத்தார்.

இல்லத்தைக் கொடையாக அளித்தல்[தொகு]

தஞ்சாவூர் மாவட்டம் கருந்தட்டாங்குடியில் இருந்த அவரது வீட்டை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துக்கு கொடையாக அளித்தார்.[3]

நினைவு கூர்தல்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "தங்கச்சாலைத் தலைவி". இந்து தமிழ் திசை. பார்க்கப்பட்ட நாள் 20 ஆகத்து 2023.
  2. https://commons.wikimedia.org/wiki/File%3AKudiyarasu.jpg
  3. மரு. க. சோமாஸ்கந்தன் (ஆகத்து 2018). "வீரத் தமிழன்னை டாக்டர் எஸ். தருமாம்பாள்". சிந்தனையாளன். 
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-06-18. பார்க்கப்பட்ட நாள் 2017-06-18.
  • சுயமரியாதை இயக்க வீராங்கனைகள், பாசறை முரசு, மே-சூன் 2015

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சா._தருமாம்பாள்&oldid=3856219" இலிருந்து மீள்விக்கப்பட்டது