வியாபம் முறைகேடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வியாபம் முறைகேடு (Vyapam scam) என்பது, இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையிலும் அரசு பணியிடங்களை நிரப்புவதிலும் நடந்த முறைகேட்டினைக் குறிக்கும். மத்தியப்பிரதேசத்தில் மருத்துவம், உயர் தொழில்நுட்பக் கல்வி, ஆசிரியர் மற்றும் அரசுத் துறை பணியாளர்கள் தேர்வு நடத்துவது மத்திய பிரதேச தொழில்முறைத் தேர்வாணையம் ஆகும்[1] (Madhya Pradesh Professional Examination Board – MPPEB). இவ்வாணயத்தின் பெயர்ச் சுருக்கம் இந்தியில் “வியாபம்” என்பதால் இம்முறைகேடு வியாபம் முறைகேடு என அழைக்கப்படுகிறது.(VYAPAM- VYAVSAYIK PAREEKSHA MANDAL).

இம்முறைகேடு வியாபம் நடத்தும் போட்டித் தேர்வுகளின் மூலம் முறை கேடான வழியில் தகுதியற்றவர்கள் பணம் கொடுத்தோ அல்லது வேறு குறுக்கு வழிகளில், அரசுப் பணி, பொறியியலாளர் பணி, அல்லது மருத்துவப் பணிகளில் இடம் பிடித்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டினைப் பற்றியதாகும்.

வியாபம் முறைகேடுகள் குறித்து 2007-ஆம் ஆண்டில் மேற்கொண்ட விசாரணையில் நுழைவுத் தேர்வுகளிலும், நியமனங்களிலும் நடைபெற்ற முறைகேடுகளில், மாநில ஆளுநர் அலுவலகம், அரசுத் துறைகள், மற்றும் இதர அமைப்புகளும் வியாபம் முறைகேட்டில் துணை நின்று 2,000 கோடி ரூபாய்க்கு மேல் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக காவல் துறை கண்டறிந்துள்ளது.

2013ஆம் ஆண்டு முதல் மாநில சிறப்பு காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வரும் இந்த வழக்கில் இது வரை 2100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 491 பேர் தலைமைறவைாக உள்ளனர். 47 பேர் இதுவரை மர்ம முறையில் இறந்துள்ளனர். வியாபம் ஊழல் விசாரணையில் ஈடுபட்டவர்கள் மற்றும் குற்றஞ்சாற்றப்பட்டவர்களில் 46 பேர் கடந்த ஐந்து ஆண்டுகளில் உயிரிழந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள்[தொகு]

வியாபம் முறைகேட்டில் கைது செய்யப்பட்ட 1800 பேரில் முன்னாள் மாநில கல்வி அமைச்சர் லட்சுமி காந்த் ஷர்மா, இந்திய காவல் பணி அதிகாரி ஆர்.கே ஷிவாரே, ஜெகதீஷ் சாகர், மருத்துவர் வினோத் பண்டாரி மற்றும் சுரங்க அதிபர் சுதீர் சர்மா ஆகியோர் முக்கியமானவர்கள்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள்[தொகு]

வியாபம் முறைகேட்டில் மாநில ஆளுனர் ராம் நரேஷ் யாதவ், மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் அவரது மனைவி சாதனா, உமா பாரதி[2] தொடர்புடையவர்கள் என இடித்துரைப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வியாபம் ஊழல் காரணமாக மத்திய பிரதேச கவர்னரை பதவி நீக்கம் செய்யக் கோரும் இடித்துரைப்பாளர்கள்களின் மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. [3][4]வியாபம் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மாநில உயர்நீதிமன்றத்திற்கு சிவராஜ் சவுகான் பரிந்துரைத்துள்ளார்.[5]

கால வரிசை[தொகு]

  • வியாபம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ.,யிடம் ஒப்படைபடைக்கும்படியும், உச்சநீதிமன்றமே இவ்வழக்கை விசாரிக்கும் என்பதால், மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் இவ்வழக்கை தொடர்ந்து விசாரணை நடத்ததேவையில்லை என்று 9 சூலை 2015 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.[6].[7]உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பால் மாநில ஆளுனர் ராம் நரேஷ் யாதவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.[8]
  • வியாபம் வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெகதீஷ் சாகர் என்பவரின் 4.8 ஏக்கர் நிலம், ரூ.3.3 கோடி ரொக்கம், நகைகள், 4 சொகுசு கார்கள் உள்ளிட்ட சாகரின் 14 சொத்துகளை அமலாக்கப்பிரிவு முடக்கியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ஜெகதீஷ் சாகர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.[9]
  • வியாபம் முறைகேடுதொடர்பான அனைத்து புகார் மனுக்களை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.[10]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வியாபம்_முறைகேடு&oldid=2187944" இலிருந்து மீள்விக்கப்பட்டது