தீர்த்தத்தொட்டி சித்திர புத்திர நாயனார் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்திர புத்திர நாயனார் சிலை

தீர்த்தத்தொட்டி சித்திர புத்திர நாயனார் கோயில் தமிழ்நாடு தேனி மாவட்டம் தீர்த்தத் தொட்டியில் அமைந்திருக்கும் சித்திர குப்தருக்கான கோவிலாகும்.[1][2] தமிழ்நாட்டில் சித்திர புத்திர நாயனாருக்கு அமைக்கப்பட்டுள்ள ஒரு சில கோயில்களில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சித்திர புத்திர நாயனார் கோயிலுக்கு அடுத்து இரண்டாவது சிறப்பு மிக்க கோயில் இது.

தல புராணம்[தொகு]

தீர்த்தத் தொட்டிக்கு அருகே இருக்கும் ஊரான கோடாங்கிப்பட்டியைச் சேர்ந்த ஒருவரின் கனவில் சித்திரகுப்தன் தோன்றினார். அவ்வாறு தோன்றியவர் தனக்கான கோயிலொன்றை கட்டி வழிபடுமாறு கூறினார். அதன் காரணமாக இக்கோவில் இங்கு எழுப்ப பட்டுள்ளது.

விழாக்கள்[தொகு]

  • அனைத்து மாதங்களிலும் சித்திரை நட்சத்திர நாளில் சிறப்பு வழிபாடு
  • சித்திரை மாதத்தில் வருகின்ற சித்ரா பௌர்ணமி நாளி்ல் சிறப்பு வழிபாடு மற்றும் விழா

சித்திர புத்திரன்[தொகு]

சிவன்,உயிரினங்கள் செய்யும் அனைத்துச் செயல்களையும் பராமரிப்பு செய்ய எண்ணினார். இந்தப் பணியை யாரிடம் ஒப்படைப்பது என்று எண்ணியபடி சக்திதேவியைப் பார்க்கிறார். அவர் ஒரு சித்திரம் வரைகிறார். அந்த சித்திரத்திற்கு சிவனும் சக்தியும் சேர்ந்து உயிரளிக்கின்றனர். அதிலிருந்து தோன்றியவர்தான் சித்திர புத்திரர். அதன் பின்பு இவர் தேவலோகத்தின் தலைவன் இந்திரன், அவரது மனைவி இந்திராணியால் வளர்க்கப்பட்டார். அதன் பிறகு சிவன் அனைத்து ஜீவராசிகளின் செயல்கள் குறித்து கணக்குகள் எழுதி அதைப் பராமரிக்கும் பணியை இவரிடம் ஒப்படைத்தார் என்கிறது இந்து சமய புராணங்கள். சித்திர புத்திரன் என்கிற பெயரை விட சித்திர குப்தன் என்கிற பெயரே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சித்திரம் என்றால் "ஆச்சரியமானது", "குப்தம்" என்றால் "ரகசியம்" என்று பொருள். இவர் எப்படிப்பட்ட ரகசியத்தையும் கண்டறிந்து கணக்கெழுதி விடும் திறனுடையவர். இதனால் இவருடைய கணக்குகள் எழுதும் முறை ஆச்சரியமானது பிறருக்குத் தெரியாதது எனும் பொருளில் இவரை "சித்திரகுப்தன்" என்றே அழைக்கின்றனர்.

வழிபாடு[தொகு]

  • இக்கோயிலில் தினமும் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை கோயில் திறந்திருக்கிறது. இந்நேரங்களில் பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து வணங்கிச் செல்கின்றனர்.

அமைவிடம்[தொகு]

மதுரை - கொச்சி தேசியநெடுஞ்சாலையில் தேனியிலிருந்து போடிநாயக்கனூர் செல்லும் வழியில் 9 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.maalaimalar.com/2013/03/21151743/chitra-putra-nayanar-temple.html பரணிடப்பட்டது 2015-05-05 at the வந்தவழி இயந்திரம் சித்திர புத்திர நாயனார் கோவில் மாலைமலர்
  2. http://m.dinakaran.com/aDetail.asp?Nid=2465 பரணிடப்பட்டது 2015-01-23 at the வந்தவழி இயந்திரம் சித்திரகுப்தனிடம் ரகசியம் செல்லாது தினகரன் 2013-12-11

வெளி இணைப்புகள்[தொகு]