பரிசோதனை உளவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்கெம் உண்ட்
Wilhelm Wundt
பரிசோதனை உளவியலின் தந்தை[1][2]

பரிசோதனை உளவியல் (Experimental psychology) என்பது உளவியல் ஆய்வுக்கு சோதனை முறைகளைப் பயன்படுத்துபவர்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளையும் அவற்றின் கொள்கை முதலானவற்றில் அடிப்படையாக அமையும் செயல்முறைகளையும் குறிக்கிறது. சோதனை உளவியல் என்ற பெயராலும் இதை அழைக்கலாம். உணர்வும் உள்ளுணர்தலும், நினைவாற்றல், அறிதிறன், கற்றல், இயல்பூக்கம், உணர்ச்சி, வளர்ச்சி செயல்முறைகள், சமூக உளவியல், நரம்பியல் தளமூலக்கூறுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பிரிவுகளை ஆய்வு செய்ய பரிசோதனை உளவியலாளர்கள் மனித பங்கேற்பாளர்களையும் விலங்குகளையும் பயன்படுத்துகின்றனர் [3].

வரலாறு[தொகு]

வில்கெம் உண்ட்[தொகு]

19 ஆம் நூற்றாண்டில் செருமானியப் பேராசிரியர் வில்கெம் உண்ட் கணிதவியல் மற்றும் சோதனையியல் அணுகுமுறையை அறிமுகப்படுத்தியபோது பரிசோதனை உளவியல் ஒரு நவீன கல்வித் துறையாக வெளிப்பட்டது. உண்ட் செருமனியின் லீப்யிக் நகரில் முதல் உளவியல் ஆய்வகத்தை நிறுவினார் [4]. எர்மன் எபிங்காசு மற்றும் எட்வர்ட் டிச்செனர் உள்ளிட்ட பிற பரிசோதனை உளவியலாளர்களின் சோதனை முறைகளில் அவர்களின் அகநோக்கு உள்ளடங்கியிருந்தது.

சார்லசு பெல்[தொகு]

சார்லசு பெல்

சார்லசு பெல் ஒரு பிரித்தானிய உடலியல் நிபுணர் ஆவார். இவரின் முக்கிய பங்களிப்பு நரம்பு மண்டலம் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி ஆகும். முயல்கள் பற்றிய தனது ஆராய்ச்சியை சுருக்கமாக ஒரு துண்டு பிரசுரமாக இவர் எழுதினார். உணர்வு நரம்புகள் பின்புறத்திலுள்ள முதுகெலும்பு வேர்களின் மேல்புறத்தில் நுழைகின்றன என்றும் இயக்க நரம்புகள் முதுகெலும்பின் முன்புற வேர்களின் கிழ்ப்பகுதியிலிருந்து வெளிப்படுகின்றன என்றும் தனது ஆராய்ச்சியின் முடிவை தொகுத்தளித்தார். பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு பிரெஞ்சு உடலியல் நிபுணர் ஃபிராங்கோயிசு மாகெண்டி பெல்லின் ஆராய்ச்சியை அறியாமல் அதே கண்டுபிடிப்புகளை வெளியிட்டார். பெல் தனது ஆராய்ச்சியை முறைப்படி வெளியிடாத காரணத்தால் மேற்கண்ட இந்த கண்டுபிடிப்பு பெல்-மாகெண்டி விதி என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அதிர்வுகள் அல்லது மனநிலையை நரம்புகள் பரப்புகின்றன என்ற நம்பிக்கையை பெல்லின் கண்டுபிடிப்பு பொய்யாக்கியது.

எர்னசுட்டு எயின்ரிச் வெபர்[தொகு]

எர்னசுட்டு எயின்ரிச் வெபர்
(Ernst Heinrich Weber)
1795-1878[5]

வெபர் ஒரு செருமானிய மருத்துவர் ஆவார். இவர் பரிசோதனை உளவியலின் நிறுவனர்களில் ஒருவராக புகழப்படுகிறார். தொடுதல் மற்றும் இயக்கவியல் உணர்வு ஆகியன வெபரின் ஆர்வங்களாக இருந்தன. புலன்கள் சார்ந்த உணர்வுகளின் வேறுபாடுகள் தொடர்பின் பரிந்துரையே தவிர அவை முழுமையானவை அல்ல என்ற கண்டுபிடிப்பு சோதனை உளவியல் துறையில் வெபரின் மறக்கமுடியாத பங்களிப்பு ஆகும். வெபரின் விதி இந்த சார்பியலை வெளிப்படுத்துகிறது. உணரவியலும் வேறுபாடு என்பது தொடர்ந்து நிகழும் தூண்டுதல் மட்டத்தின் நிலையான விகிதமாகும். வெபர் விதி இதை ஒரு சமன்பாடாகக் கூறுகிறது.

சமன்பாட்டிலுள்ள தூண்டலின் அசல் சக்தியைக் குறிக்கிறது. வேறுபாடு உணரப்படுவதற்கு கூடுதலாக தேவைப்படும் சக்தியை குறிக்கிறது. k ஒரு மாறிலியாகும். எனவே k மாறாமல் இருக்கவேண்டுமெனில் கண்டிப்பாக அதிகரிக்கின்ற சக்தியளவிற்கு அதிகரித்தாகவேண்டும். வெபரின் விதி உளவியல் வரலாற்றில் முதலாவது அளந்தறியும் விதியாகக் கருதப்படுகிறது [6].

குசுதாவ் பெச்னர்[தொகு]

குசுதாவ் பெச்னர்
1801–1887

1860 ஆம் ஆண்டு குசுதாவ் பெச்னர் வெளியிட்ட அடிப்படை உளவியற்பியல் என்ற நூலே பரிசோதனை உளவியலின் முதலாவது நூல் எனக்கருதப்படுகிறது [7]. வெபர் ஓர் உளவியலாளர் அல்ல என்பதால் சில வரலாற்றாசிரியர்கள் பெச்னர் வெளியீடுதான் பரிசோதனை உளவியலின் தொடக்கம் என்று குறிப்பிடுகின்றனர். வெபரின் உளவியலுக்கான ஆராய்ச்சி முக்கியத்துவத்தை பெச்னர் உணர்ந்தார். மனம்-உடல் இடையிலான உறவு குறித்த விஞ்ஞான ஆய்வை நிறுவுவதில் பெச்னர் ஆழ்ந்த ஆர்வம் கொண்டிருந்தார். இதுவே உளவியற்பியல் என அறியப்பட்டது. பெச்னர் ஆராய்ச்சியின் பெரும்பகுதி உளவியற்பியலின் வரம்புகள் மற்றும் உணரவியலும் வேறுபாடுகளை அளவிடுவதில் கவனம் செலுத்தியது, உளவியற்பியலின் வரம்புகளை கண்டறியும் முறை, நிலையான தூண்டல் முறை மற்றும் அவற்றை சரிகட்டும் முறை ஆகியவற்றை பெச்னர் கண்டுபிடித்தார், அவை இன்றும் பயன்பாட்டில் உள்ளன.

ஆய்வு குறிக்கோள்கள்[தொகு]

  1. ஆராயப்பெறும் நடத்தையின் வேறுபாடுகளையும், அளவுகளையும் கண்டுபிடித்தல்
  2. அந்நடத்தையின் வேறுபாடுகளைத் தூண்டல், துலங்கல் உறவுகளை ஆய்ந்து கண்டறிதல்
  3. ஆராயப்பட்ட பல்வேறு கூறுகள், ஒன்றையொன்று சார்ந்து, தங்களுக்குள்ளே எத்தகைய பாதிப்புகளை உருவாக்குகின்றன என்பதை ஆராய்தல்

இக்கூறுகளைத் தனித்தனியாகவோ, வகைப்படுத்தி குழுக்களாகவோ ஆராயலாம். இந்த ஆராய்ச்சி முறைகள் நடத்தையின் பல பகுதிகளில் பயன்படுத்துவது எளிதாய் இருக்கவில்லை. புலன், நினைவு , கற்றல், மறிவினை, அறிவுத்திறன், சிறப்பு, இயற்கைத்திறமை ஆகிய சில பகுதிகள் இந்த ஆராய்ச்சி முடிவுகளுக்கு ஏற்றனவாக உள. ஆனால் ஆளுமை, கவனம், உணர்ச்சி, உள்ளக் கிளர்ச்சி, உயர்ந்த சிந்தனைச் செயல்கள், இச்சைச் செயல்கள் ஆகியவைபற்றி இந்த ஆராய்ச்சி முறைகளைப் பயன்படுத்திப் பயனடைந்திருந்த போதிலும், முற்றிலும் ஏற்றனவாக இல்லை. இப்பொருள்களைப்பற்றிச் சோதனை முறையைக் கையாள்வதைவிட, 'சிகிச்சைச் சான்று' முறையைக் கையாள்வது மிகுந்த பலன் தருகின்றது. துல்லியமாக அறியக்கூடிய அளவு அலகுகள் இல்லாமை மற்றோர் பெருங்குறையாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Wilhelm Maximilian Wundt" in Stanford Encyclopedia of Philosophy.
  2. Tom Butler-Bowdon: 50 Psychology Classics. Nicholas Brealey Publishing 2007. ISBN 1857884736. p. 2.
  3. Pashler, H. (Ed)(2002) Stevens' Handbook of Experimental Psychology; New York: Wiley
  4. Khaleefa, Omar (1999). "Who Is the Founder of Psychophysics and Experimental Psychology?". American Journal of Islamic Social Sciences 16: 2. 
  5. https://www.britannica.com/biography/Ernst-Heinrich-Weber
  6. Hergenhahn, B.R. (2009) An Introduction to the History of Psychology. Cengage Learning.
  7. Fraisse, P, Piaget, J, & Reuchlin, M. (1963). Experimental psychology: its scope and method. 1. History and method. New York: Basic Books.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிசோதனை_உளவியல்&oldid=3781582" இலிருந்து மீள்விக்கப்பட்டது