தமிழ் எண்களின் பெயர் விளக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் எண்களுக்கு பெயரிட்டது எப்படி என்பதற்கு சில விளக்கங்கள் சொல்லப்பட்டுள்ளன.

முனைவர். கா.மீனாட்சிசுந்தரம் விளக்கம்[தொகு]

முனைவர் கா.மீனாட்சிசுந்தரம் எழுதிய “அகராதிக்கப்பால்” எனும் நூலில் (மங்கை நூலகம் வெளியீடு- 1980-இரண்டாம் பதிப்பு) பக்கம் 92-93 ல் கால் மற்றும் அரை எனும் எண்களுக்கான விளக்கமளித்துள்ளார்.

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அவரவர் கைச்சான் அளவில் எட்டுச் சான் இருப்பர். “எறும்புக்கும் தன் கையால் தன்னுடல் எண் சான்” என்பது பழமொழி .

“அடி முதல் முழங்கால் வரை இரண்டு சான்கள், அதாவது எட்டுச் சான் உடலில் எட்டில் இரண்டு பங்கு. எட்டில் இரண்டு பின்னத்தைச் சுருக்கினால் நான்கில் ஒன்றாகிறது. உடனே “கால்” எனப் பெயரிட்டான். அடி முதல் இடுப்பு வரை நான்கு சான்கள். எட்டில் நான்கு அரையாயிற்று. எனவே இடுப்பை “அரை” என்று பெயரிட்டான்.” என்று கால் மற்றும் அரை எண்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

தேவநேயப் பாணர் விளக்கம்[தொகு]

தேவநேயப் பாவாணர் எழுதிய “தமிழ் வரலாறு” எனும் நூலில் (கழகப் பதிப்பு - 1990- இரண்டாம் பதிப்பு) பக்கம் 176- முதல் 181 வரை ஒன்று முதல் பத்து வரையிலான எண்கள் மற்றும் நூறு, ஆயிரம், இலக்கம், கோடி ஆகியவைகளுக்கும் விளக்கமளித்துள்ளார்.

ஒன்று

ஒல் - ஒன் - ஒன்று - ஒல்லுதல் -பொருந்துதல்
ஒன்று சேர்தல் என்பதால் "ஒன்று" என்றானது.
ஒல் ஓர் ஒரு (பெயரெச்சம்)

இரண்டு

ஈர் - இர் - இரது - இரண்டு - ஈர்தல் - ஒன்றை இரண்டாக அறுத்தல்
ஈர், இர், இரு (பெயரெச்சம்)

மூன்று

முப்பட்டையான மூக்கின் பெயரினின்று தோன்றியிருக்கலாம்.
மூசு - மூகு மூ (மூது) மூறு - மூன்று
மூ (பெயரெச்சம்)

நான்கு

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்கிற நால்வகை நிலத்தொகைப் பிறப்பு, ஞாலம் நானிலம் எனப்படுதல் காண்க.
நால் - நால்கு - நான்கு
நால் - நான்கு
நால் (பெயரெச்சம்)

ஐந்து

கை - ஐ (ஐது) - ஐந்து - அஞ்சு
கை = ஐந்து, கையில் ஐந்து விரல்களிருப்பதால் ஐந்தென்னும் எண்ணைக் குறித்தது. வறட்டி விற்கும் பெண்டிர் ஒவ்வொரு ஐந்தையும் ஒவ்வொரு கை என்பர், கை எனும் சொல்லின் மெய் நீக்கமே ஐ.
கை - ஐ (பெயரெச்சம்)

ஆறு

ஆறு = வழி, நெறி மதம், பண்டைத் தமிழகத்தில் ஐந்திணைச் சிறு தெய்வ வணக்கமும், கடவுள் வழிபாடும் சேர்ந்து அறுவகை ஆறாய் இருந்ததினால் ஆறென்னும் மதப் பெயர் ஆறென்னும் எண்ணைக் குறிக்கலாயிற்று.
ஆறு - அறு (பெயரெச்சம்)

ஏழு

எழு - எழுவு, எழுவுதல் இசைக் கருவியினின்று ஒலியெழச் செய்தல், இன்னிசை ஏழாதலால் அது எழுதலைக் குறிக்கும் சொல்லினின்று ஏழ் என்னும் எண்ணுப் பெயர் தோன்றிற்று.
எழு ஏழ் ஏழு
எழு (பெயரெச்சம்)

எட்டு

தமிழில் எல்லை என்னுஞ் சொல் இடவரம்பையும் திசையையும் குறிக்கும். எல்லை என்பதற்கு ஒரு பொருள் மறுசொல் எண் என்பதாம். நேர்த்திசை நான்கும், கோணத்திசை நான்குமாகத் திசை எட்டாதலின் திசையைக் குறிக்கும் எண் என்னுஞ் சொல் எட்டு எனும் எண்ணுப் பெயரைத் தோற்றுவித்தது.
எண் - எட்டு
எண் (பெயரெச்சம்)

தொண்டு(ஒன்பது)

தொள் - தொண்டு = தொளை.
தொண்டு - தொண்டி = தொளை.
மாந்தன் உடம்பில் ஒன்பது தொளையிருந்தால் தொளைப் பெயர் அதன் தொகைப் பெயராயிற்று. தொண்டு வழக்கற அஃதிருந்த இடத்திற்குத் தொண்பது (90) தொன்பதாகி ஒன்பதாகியது

பத்து

பல் = பல
பல் - பது - பத்து - பஃது

நூறு

நுறு - நூறு = பொடி,
நுறு - நுறுங்கு - நொறுங்கு
நூறு (பொடி) எண்ண முடியாதிருப்பதால் அதன் முடியாதிருப்பதால் அதன் முதற் பெருந்தொகையைக் குறித்தது.
நூறு -நீறு

ஆயிரம்

அயிர்- நுண் மணல்
அயிர் அயிரம் ஆயிரம்
ஆற்று மணலும் கடற்கரை மணலும் ஏராளமாய் இருப்பதால் மணற்பெயரும் ஒரு பெருந்தொகைப் பெயராயிற்று.

இலக்கம்

இலக்கு = குறி
இலக்கு - இலக்கம் = குறி
எண்குறி, எண், பேரெண்.

கோடி

குடி - குடுமி = உச்சி, தலையுச்சி, ஆடவர் தலை மயிர்க்கற்றை, பறவைச்சூட்டு, மகுடம், மாடவுச்சி, மலையுச்சி, நுனி, குடு - கொடு,
கொடுமுடி - மலையுச்சி,
கொடு - கோடி = நுனிமுனை, கடைசி, எல்லை, முடிமாலை
கோடம் = எல்லை, கடைக் கோடி எனும் வழக்கை நோக்குக. தெருக்கோடி, விற்கோடி என்பனவும் முனையைக் குறித்தல் காண்க.
கோடகம் - முடிவகை
கோடி கடைசி எண்ணாதலால் அப்பெயர் கொண்டது.

வெங்கடாச்சலத்தின் விளக்கம்[தொகு]

மூலம் - தொல்காப்பியமும் கணித வாய்ப்பாடு இலக்கணமும்[1]

  1. கும்பம் - ஆயிரம் கோடி
  2. கணிதம் - பத்தாயிரங்கோடி
  3. தாமரை - கோடானுகோடி
  4. சங்கம் - பத்துகொடானுகோடி
  5. வாரணம் - பத்து கோடானுகோடி
  6. பரதம் - லட்சம் கோடானுகோடி

ஆதாரம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. நன்னன்நாடு எனும் ஏட்டில் பொறிஞர் வெங்கடச்சலம் வேறொரு புனைபெயரில் எழுதிய கட்டுரை

வெளி இணைப்புகள்[தொகு]