பித்தன் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பித்தன் தமிழில் வெளிவந்த கட்சி சார்பற்ற மாத இதழ். இளைஞர்களால் நடத்தப்பட்ட வனமலர்ச் சங்கத்தால், சங்கம் ஆரம்பித்து நான்காண்டுகளுக்குப் பின்னர் 1928 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் (கார்த்திகை மாதம்) ஆரம்பிக்கப்பட்ட இதழ். [1]

பித்தன் இதழில் கா.மு.இராமசாமி ஆசிரியராகப் பணிபுரிந்தார். ம.ப.பெரியசாமி வனமலர்ச் சங்கத்திற்காக இதழை வெளியிட்டார். ஆரம்பகாலத்தில் இராயப்பேட்டை சாது அச்சுக் கூடத்தில் இதழ் அச்சிடப்பட்டது. இவ்விதழுக்காக எழுதியோர்: ச.து.சுப்பிரமணிய யோகி, பெரியசாமித்தூரன், சு.கோதண்டராமன், சா.குருசாமி, வ.அழகப்பன், ஓ.வி.அளகேசன் முதலானோர். [1]

இதன் கணக்கு ஆய்வராக சி.சுப்பிரமணியம் விளங்கினார். இவர் பிற்காலத்தில் சென்னை மாகாண நிதி அமைச்சராகவும் இந்திய நிதி அமைச்சராகவும் பணியாற்றியவர். [1]

குழந்தைத் திருமணக் கொடுமைகள், குழந்தை விதவைகள், மதுவிலக்கு, மதுவின் கொடுமைகள், கல்வியின் தேவை, அந்நியத் துணிக்கு எதிர்ப்பு, திருமணத்தில் சிக்கனம் என்று பல முற்போக்குச் சமுதாயச் சிந்தனைகளையும் அந்நியர் ஆட்சிக்கு எதிரான கருத்துக்களையும் கொண்ட இதழாக வெளிவந்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு;பாகம் 1; சாந்தா பதிப்பகம்;பக்கம் 228-255
"https://ta.wikipedia.org/w/index.php?title=பித்தன்_(இதழ்)&oldid=1749381" இலிருந்து மீள்விக்கப்பட்டது