முந்நீர் (சொல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முந்நீர் என்னும் சொல் கடலைக் குறிக்கும்.[1] கடலில் பொழிந்து கடல் வளத்தைப் பெருக்கும் மழைநீர், ஆறு அடித்துக்கொண்டு வரும் மழைநீர், மண்ணிலிருந்து ஊறிவரும் ஊற்றுநீர் ஆகிய மூன்று நீரும் கலந்தது என்னும் கருத்துடன் முந்நீர் என்னும் சொல் உருவாக்கப்பட்டுள்ளது.

முந்நீர் சொல்லாட்சி[தொகு]

முந்நீர் என்னும் சொல்லைக் கையாண்டு சங்கநூல் பாடல்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் இங்குத் தொகுப்பாக வைக்கப்படுகின்றன. முந்நீர் என்னும் சொல் கடலைக் குறிக்கும்.

இரண்டு வகை
  • பருக முடியாத கடல் முந்நீர், பருகும் முந்நீர் இரண்டும் வெவ்வேறு.[2]
உப்பு-அமிழ்தம்
  • முந்நீர் தரும் உப்பை அமிழ்தம் என்பர்.[3]
தன்மை
  • முந்நீர் குளிர்ந்திருக்கும்.[4]
  • முந்நீரின் ஆழம் அளக்க முடியாதது.[5]
  • முந்நீர் நீர்மட்டத்தில் ஏற்றத்தாழ்வு இல்லை.[6]
முந்நீரில் செல்லல்
  • முந்நீரில் செல்லத் திமிலும் [7] நாவாய்க் கப்பல்களும் [8] கலன்-கப்பல்களும் [9] பயன்படுத்தப்பட்டன.
  • முந்நீரில் செல்வோர் மகளிருடன் செல்வதில்லை. முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை [10]
வழிபாடு
  • முந்நீரில் தோன்றும் சுடரை மக்கள் வழிபடுவர்.[11]
  • திருமால் முந்நீர் வண்ணம் கொண்டவன்.[12] திருமால் ‘திரை பாடு அவிந்த முந்நீர் போன்ற வண்ணம் கொண்டவன் [13]
செம்மை
  • அரசன் குடிமக்களுக்கு நீதி வழங்கும்போது முந்நீரின் நடுவில் தோன்றும் ஞாயிறு போல் விளங்குவான்.[14]
  • நெடுஞ்செழியன் அவ்வாறு முறை வழங்கினான்.[15]
விழா
  • பாண்டிய அரசன் நெடியான் முந்நீர் விழாக் கொண்டாடினான்.[16]
  • வைகை நீராட்டு விழா முந்நீர் விழா போல இருந்தது.[17]
முழக்கம்
  • மதுரையில் முரசு முழங்கும் ஒலி முந்நீர் முழக்கம் போல இருந்தது.[18]
பயன்பாடு
  • முந்நீரில் செல்ல உதவுவது காற்று.[19]
  • முந்நீரில் செல்லும் கப்பல்களைக் காற்று கவிழ்க்கும்.[20]
  • முந்நீரில் இரவில் செல்வோர் விளக்குச் சுடருடன் செல்வர்.[21]
  • குட்டுவன் … முந்நீர் முற்றி … பௌவம் நீங்க ஓட்டிய எஃகம் [22]
  • சேரலாதன் முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து இமையத்து … வணங்குவில் பொறித்தான்.[23]
  • மூவேந்தரும் முந்நீரை ஏணி போல் பயன்படுத்தி வாணிகம் செய்து முன்னேறினர்.[24][25]

காதலி கூறுகிறாள்[தொகு]

  • திரை தரும் முந்நீர் வளாகம் எல்லாம் – ஞாயிறே, தேடு என்றேன்.[26]
  • முந்நீர் வெறும் மணலாக இறைப்பேன் … காற்றே! - கதிரே! – என் நலன் உண்டு துறந்தானைக் காட்டாயேல் [27]

விளக்கத் தொடர்கள் - நிலம்[தொகு]

  • இருள் நிற முந்நீர் வளைஇய உலகம் [28]
  • மாசு இல் வான் பரந்த முந்நீர்த் தொன்னிலம் [29]
  • விரிதிரை முந்நீர் மண்திணிக் கிடக்கை [30]
  • முழங்கு இரு முந்நீர்த் திரை [31]
  • முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா - குதிரை நடைக்கு [32]
  • முந்நீர் உடுத்த வியன் உலகு [33]
  • முந்நீர் வரைப்பகம் [34]
  • வெண்திரை முந்நீர் வளைஇய உலகம் [35]
  • இரு முந்நீர்த் துருத்தி [36]
  • திரை பொரு முந்நீர்க் கடல் [37]

விளக்கத் தொடர்கள் – கடல்[தொகு]

  • முழங்கு முந்நீர் … ஞாலம் [38]
  • இரு முந்நீர் … பௌவம் [39]
  • ஒலி முந்நீர் [40]
  • இரங்கும் முந்நீர் … ஊர் [41]

மேற்கோள் குறிப்பு[தொகு]

  1. :நளி இரு முந்நீர் ஏணி ஆக,
    வளி இடை வழங்கா வானம் சூடிய
    மண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர்,
    முரசு முழங்கு தானை மூவர் - புறநானூறு 35
  2. முந்நீர் உண்டு முந்நீர்ப் பாயுந்து புறநானூறு 24
  3. முந்நீர் பயந்த … வெண்கல் அமிழ்தம் அகநானூறு 207
  4. நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி புறநானூறு 66
  5. இரு முந்நீர்க் குட்டம் புறநானூறு 20
  6. கொளக் குறைபடாமையின் முந்நீர் அனையை பதிற்றுப்பத்து 90
  7. கரை பொரு முந்நீர்த் திமில் புறநானூறு 303
  8. முந்நீர் வழங்கும் நாவாய் புறநானூறு 13
  9. நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின் கலித்தொகை 5
  10. தொல்காப்பியம் 3-37-1
  11. முந்நீர் மீமிசை பலர் தொழத் தோன்றிய சுடர் நற்றிணை 283
  12. முந்நீர் வண்ணன் பிறங்கடை (தொண்டைமான்) பெரும்பாணாற்றுப்படை 30
  13. பரிபாடல் 4
  14. முந்நீர் நாப்பண் பகல் செய்யும் மண்டிலம் போல் முறை செய்தான் (தொண்டைமான்) பெரும்பாணாற்றுப்படை 441
  15. முந்நீர் நாப்பண் ஞாயிறு போல நெடுஞ்செழியன் விளங்கினான். மதுரைக்காஞ்சி 768
  16. முந்நீர் விழவின் நெடியோன் புறநானூறு 9
  17. கரை பொருது இரங்கும் முந்நீர் போல – வைகையில் விழாக் கொண்டாடினர். மதுரைக்காஞ்சி 425
  18. மா கால் எடுத்த முந்நீர் போல – மதுரையில் முரசு முழக்கம் கேட்டது மதுரைக்காஞ்சி 361
  19. என் காதலர் விலங்கு இரு முந்நீர்க் காலில் செல்லார். எங்கே போனார்? குறுந்தொகை 130
  20. நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின் கலித்தொகை 5
  21. முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல புறநானூறு 60
  22. அகநானூறு 212
  23. அகநானூறு 127
  24. முந்நீர் ஏணி விறல் கெழு மூவர் புறநானூறு 137
  25. நளி இரு முந்நீர் ஏணியாக புறநானூறு 35
  26. கலித்தொகை 146
  27. கலித்தொகை 144
  28. திருமுருகாற்றுப்படை 293
  29. கலித்தொகை 103
  30. அகநானூறு 379
  31. அகநானூறு 338
  32. அகநானூறு 104
  33. புறநானூறு 382
  34. புறநானூறு 363
  35. பதிற்றுப்பத்து 31
  36. பதிற்றுப்பத்து 20
  37. புறநானூறு 154
  38. புறநானூறு 18
  39. மதுரைக்காஞ்சி 75, 235,
  40. மதுரைக்காஞ்சி 2
  41. அகநானூறு 400
"https://ta.wikipedia.org/w/index.php?title=முந்நீர்_(சொல்)&oldid=3388560" இலிருந்து மீள்விக்கப்பட்டது