மைசூரு தசரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைசூர் தசரா ஊர்வலம்[1]

மைசூரு தசரா (Mysore Dasara) என்பது இந்தியாவின் கருநாடக மாநிலத்தில் நாடஹப்ப (கர்நாடக மாநிலத்தின் பண்டிகை) என்று கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். விஜயதசமி நாளில் மைசூருவின் சாமுண்டேஸ்வரி தேவி மகிஷாசுரனை வெற்றி கொண்ட நாள். மகிஷாசுரன் என்கிற பெயரிலிருந்தே மகிசூர் (பிற்காலத்தில் மைசூரு) வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 2010 ஆம் வருடம் இந்த பண்டிகை தனது 400வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது.[2]

வரலாறு[தொகு]

இந்தப் பண்டிகை விஜயநகரப் பேரரசர்களால் 15ஆம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. பெர்ஷியன் தூதுவர் அப்துர் ரஜாக் இந்த பண்டிகையைப் பற்றி தனது Matla-us-sadain wa Majma-ul-Bahrain (இரண்டு புனித நட்சத்திரக் கூட்டங்களின் எழுச்சியும், இரண்டு கடல்களின் சங்கமமும்) என்ற புத்தகத்தில் மகாநவமி என்ற பெயரில் தசரா கொண்டாட்டங்கள் நடந்தன என்று குறிப்பிடுகிறார். விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு மைசூரை ஆண்டுவந்த ஒடையார் வம்ச அரசர் ராஜ ஒடையார் இந்த தசராவை ஸ்ரீரங்கப்பட்டினத்தில் கொண்டாட ஆரம்பித்தார். தசரா கொண்டாட்டங்களில் 3வது கிருஷ்ணராஜ ஒடையார் காலத்தில் சிறப்பு தர்பார் இடம் பெற்றது. இந்த தர்பார் மைசூரு அரண்மனையில் கூடியது. அரச குடும்பத்தினரும், சிறப்பு விருந்தாளிகளும், அதிகாரிகளும், பொதுமக்களும் இந்த தர்பாரில் பங்குபெற்றனர். சென்ற வருடம் (2013) வரை இந்த வழக்கம் தொடர்ந்தது. மஹாநவமி என்று சொல்லப்படும் ஒன்பதாவது தினம் அரச உடைவாள் யானையின் மேல் ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இந்த ஊர்வலத்தில் யானைகளுடன் கூட ஒட்டகங்களும், குதிரைகளும் இடம் பெறும்.

இந்தக் கொண்டாட்டம் நடைபெறும் பத்து தினங்களிலும் மைசூரு அரண்மனை வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிப்பது பார்க்க பார்க்க திகட்டாத ஒரு காட்சி. இதற்காக ஒரு லட்சம் விளக்குகள் ஒரு கோடி ரூபாய் செலவில் ஏற்றப்படுகின்றன. பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகள் அரண்மனையின் முன் நடைபெறும்.

விஜயதசமியன்று தசரா ஊர்வலம் (ஜம்போ சவாரி) நடைபெறும். தங்க மண்டபத்தில் சாமுண்டேச்வரி தேவி எழுந்தருளப்பட்டு மைசூரு நகரின் பிரதான வீதிகளில் வலம் வருவாள். இந்த தங்க மண்டபத்தின் எடை 750 கிலோ மட்டுமே! இந்த தங்கமண்டபம் அலங்கரிக்கப்பட்ட யானையின் மேல் ஏற்றப்பட்டு ஊர்வலம் வரும். ஊர்வலம் ஆரம்பிப்பதற்கு முன் அரச குடும்பத்தினரும், சிறப்பு விருந்தாளிகளும் தேவியை ஆராதிப்பார்கள்.

நடனக் குழுக்கள், இசைக்குழுக்கள், அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், ஒட்டங்கங்கள் எல்லாம் இந்த ஊர்வலத்தின் அழகைக் கூட்டும். இந்த ஊர்வலம் மைசூரு அரண்மனையிலிருந்து துவங்கி பன்னிமண்டபம் (Banni Mantapam) என்று சொல்லப்படும் இடத்தில் முடிவடையும். இந்த இடத்தில் இருக்கும் பன்னி (வன்னி மரங்கள்) மரங்களுக்கு பூஜை நடக்கும். பாண்டவர்கள் தங்களது அஞ்ஞாதவாசத்தின் போது இந்த மரங்களில் தான் தங்களது ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தார்கள் என்பதால் அரசர்கள் இந்த மரத்தை வழிபடுவது வழக்கத்தில் உள்ளது. அன்று அரசர்கள் செய்த வழிபாடு இன்றும் மைசூரு தசரா பண்டிகையில் தொடருகிறது.

விளக்கொளி அணிவகுப்பு[தொகு]

தசரா கொண்டாட்டங்களின் இறுதி நிகழ்ச்சியாக விளக்கொளி அணிவகுப்பு பன்னிமண்ட அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் லேசர் காட்சிகள், கரணங்கள் போடுபவர்களின் சாகசங்கள், மோட்டார் சைக்கிள் சாகசங்கள் மற்றும் குதிரையேற்றம் ஆகியவை இடம் பெறும். விளக்கொளி அணிவகுப்பு நிகழ்ச்சியின் போது அரசர் குதிரையேற்ற உடையில் குதிரை மீதமர்ந்து வந்து இராணுவ மரியாதையை ஏற்றுக் கொள்வார். இந்த நிகழ்ச்சி துவங்கும் சமயம் இரவுப் பொழுது வந்துவிடுமாதலால் நிறைய விளக்குகள் ஏற்றுவார்கள். அரசர் தனது இராணுவ பலத்தை தனது எதிரிகளுக்குத் தெரியப்படுத்தவும், மக்களிடையே ‘இத்தனை பலமுடைய நான் உங்கள் ராஜா; உங்களைக் காப்பாற்றும் பொறுப்பு என்னுடையது’ என்ற ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தவுமே இந்த அணிவகுப்பு நடைபெறுகிறது.

இந்த வருடம் மைசூரு தசரா நடைபெறுமா என்பது இன்னும் சந்தேகமாகவே இருந்து வருகிறது. மாநில அரசு நிச்சயம் நடக்கும் என்று சொன்னாலும், மைசூரு அரண்மனையைச் சேர்ந்தவர்கள் நிச்சயம் தசரா பூஜை உண்டு என்று சொன்னாலும் எப்போதும் போல சோபையுடன் இந்த வருடம் நடக்காது என்றே சொல்ல வேண்டும்.

தசராக் கொண்டாட்டங்களில் தர்பார் ஒரு பகுதிதான் என்றாலும் பொதுமக்களுக்கு அரசரை அரியணையில் பார்ப்பது மிகவும் பிடித்த விஷயம். என்னதான் சுதந்திரம் கிடைத்து, குடியரசாக நாடு மாறிவிட்டாலும், இன்னும் அரசர்களுக்கும், அரச குடும்பங்களுக்கும் இந்தியாவில் மிகப்பெரிய மரியாதை இருக்கிறது

மைசூர் இராச்சியத்தின் அரசர் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் 2013-இல் இயற்கை எய்திய பின்னர் 2015-இல் பட்டத்திற்கு வந்த யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் தர்பாரில் அமர்ந்து காட்சியளிப்பது கண்ணுக்கினிய காட்சியாகும்.

தலக்காடு சாபம்[தொகு]

விஜயநகரத்தின் தளபதி ஸ்ரீரங்கராயனிடமிருந்து ஸ்ரீரங்கப்பட்டினத்தை 1610 ஆம் ஆண்டு அன்றைய மைசூரு மகராஜா ராஜ ஒடையார் கைப்பற்றினார். ஸ்ரீரங்கராயனின் மனைவி அலமேலம்மா ஆதிரங்கனின் ஆலய நகைகளை எடுத்துக் கொண்டு தலைமறைவானபோது, ராஜ ஒடையார் அவரைப் பிடிக்க தனது படை வீரர்களை அனுப்புகிறார். அவர்களிடமிருந்து தப்ப அலமேலம்மா தலக்காடு நோக்கி ஓடிவருகிறார். அங்கு மாலங்கி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, தப்ப முடியாத அலமேலம்மா, ‘தலகாடு மணல் மூடி போகட்டும்; மாலங்கி நதி மடுவாகட்டும்; ஒடையார் பரம்பரை வாரிசற்றுப் போகட்டும்’ என்று சாபமிட்டு விட்டு நதியில் குதித்து விடுகிறார்.

இப்போதும் தலக்காடு மணல் மூடித்தான் இருக்கிறது. மாலங்கி நதியில் நீர் வரத்து இல்லை. இந்த இரண்டு சாபங்களும் பலித்தது போலவே ஒடையார் பரம்பரையிலும் நேர் வாரிசு என்பது இல்லை. ஸ்ரீகண்டதத்தாவின் அந்திமக் கிரியைகளை அவரது சகோதரி மகன் காந்தராஜ் அர்ஸ் செய்தார். அவரே ஒடையார் பரம்பரையின் அடுத்த வாரிசாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறது.

தசரா கொண்டாட்டங்களை நடத்த அரசியார் ப்ரமோதா தேவி சம்மதித்துவிட்டார்; ஆனால் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பங்குபெற மாட்டார்கள்; அரண்மனையில் எந்த கொண்டாட்டமும் நடப்பதையும் அவர் விரும்பவில்லை என்று அண்மைய செய்திகள் கூறுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைசூரு_தசரா&oldid=3656328" இலிருந்து மீள்விக்கப்பட்டது