என். எம். சோசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என். எம். சோசி (N. M. Joshi, என். எம். ஜோஷி, 1875 - மே 30, 1955) என்று சுருக்கமாக அழைக்கப் பெறும் நாராயண மல்கர் சோசி (Narayan Malhar Joshi) ஒரு தொழிற்சங்கவாதியாக விளங்கியவர். தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் நலன்களுக்காகவும் பாடுபட்டவர். தொழிலாளர்களுக்காக மருந்தகங்களும் தொழிற்பயிற்சிப் பள்ளிகளும் கூட்டுறவுக் கழகங்களும் உருவாக வழி வகைகளைச் செய்தார்.

பிறப்பும் கல்வியும்[தொகு]

மகாராட்டிர மாநிலம் கொலாபா மாவட்டத்தில் பிறந்தார். புனேயில் நியூ இங்கிலீஷ் பள்ளியிலும் மும்பையில் டெக்கான் கல்லூரியிலும் பயின்றார்.

தொழிற்சங்கப் பணிகளும் பதவிகளும்[தொகு]

1909-ஆம் ஆண்டில் இந்திய ஊழியர்கள் கழகத்தில் சேர்ந்தார், அந்நிறுவனத்தில் 1940 வரை பணி புரிந்தார். 1911 இல் சமூகத் தொண்டு லீகு என்னும் ஒரு தொண்டு அமைப்பை நிறுவினார். அனைத்திந்திய தொழிற்சங்கப் பேராயத்தின் (ஏ ஐ டி யூ சி )பொதுச் செயலாளாராக 1925 முதல் 1929 வரையிலும் மீண்டும் 1940 முதல் 1948 வரையிலும் பதவி வகித்தார். 1921 ஆம் ஆண்டில் சோசி நடுவண் சட்ட மன்றத்திற்கு உறுப்பினராக அமர்த்தப்பட்டார். 1922இல் பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பில் ( ஐ எல் ஓ) நிருவாகக் குழுவில் துணை உறுப்பினராகவும் 1934 இல் உறுப்பினராகவும் இருந்தார். 1931 இல் சோசி ஏ. ஐ. டி. யூ. சி என்னும் அமைப்பிலிருந்து விலகி அனைத்திந்திய தொழிற் சங்கக் கூட்டமைப்பில் சேர்ந்தார். வட்ட மேசை மாநாட்டில் 1930 ஆம் ஆண்டிலும் 1932 ஆம் ஆண்டிலும் கலந்து கொண்டார். 1947 இல் நடுவண் அரசு ஊதியக் குழுவில் உறுப்பினராக அமர்த்தப்பட்டார்.

மறைவு[தொகு]

1955 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் பக்கலில் மும்பையில் மாரடைப்பால் காலமானார். அவர் நினைவைப் போற்றும் வண்ணம் மும்பை நகரின் ஒரு பகுதிக்கு 'எம்.என் சோசி மார்க்' என்று பெயர் சூட்டப் பட்டுள்ளது.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._எம்._சோசி&oldid=3724376" இலிருந்து மீள்விக்கப்பட்டது