இரண்டாம் ஜெய் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெய்ப்பூரின் மன்னன் இரண்டாம் ஜெய் சிங்கின் ஓவியம்

மகாராஜா சவாய் ஜெய் சிங் (நவம்பர் 3, 1688 முதல் செப்டம்பர் 21, 1743 வரை) ஆம்பர் (ஜெய்பூர் இராச்சியம்) அரசை ஆண்ட மன்னன் ஆவான். இவன் கச்வாகர்களின் தலைநகரான ஆம்பரில் பிறந்தான். இவனது தந்தையான மகாராஜா பிஷான் சிங்கின் மரணத்திற்குப் பின் (31 டிசம்பர் 1699), தனது 11வது அகவையில் இவன் ஆம்பரின் அரசனானான். முகலாய பேரரசன் முகம்மது ஷா ஏபிரல் 21, 1721 அன்று இவனுக்கு சராமத்-இ-ராஜாஹா-இ-ஹிந்த் என்ற பட்டத்தையும் மேலும் ஜூன் 2, 1723 அன்று ராஜ் ராஜேஸ்வர், ஸ்ரீ ராஜாதிராஜ் மற்றும் மகாராஜா சவாய் என்ற பட்டங்களையும் சூட்டினார். “சவாய்” என்றால் ஒன்றேகால் என்று பொருள், அதாவது பிற அரசர்களைவிடவும் இவன் (அதிகாரத்தில்) உயர்ந்தவன் என்ற பொருள்பட இப்பட்டம் வழங்கப்பட்டது. இன்றுவரையும் இவனது வழித்தோன்றல்களுக்கும் இப்பட்டங்கள் சேர்க்கப்படுகின்றன. இவ்வரசன் கணிதத்திலும் கட்டிடக்கலையிலும் வானியலிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவன்.

பதவியேற்கையில் நிலவிய சூழல்[தொகு]

தனது முன்னோர் ஆண்ட ஆம்பர் அரியணையில் சவாய் ஜெய் சிங் அமர்ந்தபொழுது அவ்வரசாங்கம் கீழ்நிலையில் இருந்தது, முந்தைய 32 ஆண்டுகளின் கீழ்முக ஆட்சியின் பயனாய் 1000 குதிரைவீரர்களைப் பராமரிக்கத் தேவையான செல்வம் கூட ஏறக்குறையவே இருந்தது, மேலும் அப்பொழுது முகலாய பேரரசன் அவுரங்கசீப்பின் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. முகலாயர்களின் அதிகார மையங்களான தில்லிக்கும் ஆக்ராவிற்கும் அருகில் இருந்த காரணத்தால், ஜெய்ப்பூர் மன்னர்கள் முகலாயர்களைப் பகைத்துக்கொள்ள விரும்பாதவர்களாகவே இருந்தனர். தில்லியின் சுல்தான்களோடு பல ஆண்டுகளாய் கூட்டாளிகளாய் இருந்தும் கூட, அவுரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில், முதலாம் ராம் சிங்கும் அவரைத் தொடர்ந்து வந்த அனைத்து கச்வாகா அரசர்களும் தங்களுக்கு உரிய பட்டங்களும் ஊதியங்களும் தரப்படாமலே இருத்தப்பட்டனர். அவர்களில் முக்கியமானவர்களான முதலாம் ஜெய் சிங்கும் குன்வர் கிஷன் சிங்கும் தக்காணப் படையெடுப்புகளின் பொழுது மருமமான முறையில் இறந்து போயிருந்தனர்.

பதவியேற்று ஆறு மாதங்கள் கழிந்த நிலையில் ஜெய் சிங்கைத் தனது தக்காண போர்களில் பணிபுரியுமாறு அவுரங்கசீப் ஆணையிட்டான். ஆனால் அவ்வாணைக்குப் பதிலளிப்பதில் ஜெய் சிங் ஓராண்டு காலம் தாழ்ந்துவிட்டான். இதற்கான காரணங்களில் ஒன்று தனது மன்சப்பிற்கு (பதவிக்கு) மீறிய அளவில் ஒரு பெரிய படையை உருவாக்குமாறு ஜெய்சிங் ஆணையிடப்பட்டிருந்தது. மேலும், 1701 மார்ச்சு மாதத்தில் சியோப்பூரின் அரசனான ராஜா உத்தம் ராம் காவரின் மருமான் உதித் சிங்கின் மகளைத் திருமணம் செய்துகொள்வதைப் பற்றியும் ஜெய் சிங் முடிவுசெய்ய வேண்டியிருந்தது. ஜெய் சிங் ஆகத்து 3, 1701 அன்று புர்ஹான்பூரை அடைந்தான் ஆனால் கனத்த மழை காரணமாய் அவனால் மேற்கொண்டு முன்னேற இயலவில்லை. செப்டம்பர் 13, 1701 அன்று அவனது பதவியும் ஊதியமும் (500 அளவு) குறைக்கப்பட்டன. கெல்னா முற்றுகையின் பொழுது (1702) இவன் காட்டிய போர்த்திறத்திற்குப் பரிசாய் இவனது முந்தைய பதவி மீண்டும் வழங்கப்பட்டு மேலும் ”சவாய்” என்ற பட்டமும் வழங்கப்பட்டது. அவுரங்கசீப்பின் பேரன் பிதார் பக்கத் சவாய் ஜெய் சிங்கை மால்வா மாகாணத்தின் ஆளுனராக நியமித்தபொழுது (1704) அவுரங்கசீப் மிகுந்த சினத்துடன் அதனை ஜெய்சு நிஸ்டு (செல்லாதது அல்லது இசுலாத்திற்கு எதிரானது) என்று ரத்து செய்தான்.

சமூகம் கலை மற்றும் அறிவியல் பங்களிப்புகள்[தொகு]

பலநூற்றாண்டுகள் வழக்கற்று இருந்த அசுவமேதம் (1716) மற்றும் வாஜபேயம் (1734) போன்ற வேத யாகங்களை மீண்டும் நடத்திய முதல் இந்து அரசன் என்ற பெருமை சவாய் ஜெய் சிங்கிற்கு உரியதாகும், இரண்டு வேள்விகளின் பொழுதும் பெருந்தொகைகள் யாசகமாக வழங்கப்பட்டன. வைணவத்தின் நிம்பருக்க சம்பிரதாயத்தில் தீட்சை பெற்ற இவன் சமற்கிருத படிப்பையும் பெருமளவில் ஊக்குவித்தான், சதி சடங்கை ஒழித்தல் மற்றும் ராஜபுத்திர திருமணச் சடங்குகளில் பெருஞ்செலவுக்குக் காரணமன சடங்குகளை நிறுத்துதல் போன்ற இந்து சமுதாய சீர்திருத்தங்களையும் செய்துள்ளான். அவுரங்கசீப்பினால் ஹிந்து மக்கள்மீது விதிக்கப்பட்டிருந்த, மக்களால் வெறுக்கப்பட்ட, ஜசியா வரி இவனது வற்புறுத்தலின் பயனாகவே 1720-இல் பேரரசன் முகம்மது ஷாவினால் நீக்கப்பட்டது. கயாவில் ஹிந்துக்கள் மீது விதிக்கப்பட்ட யாத்திரை வரியும் ஜெய் சிங்கின் முயற்சியாலேயே 1728-இல் நீக்கப்பட்டது.

தில்லியில் உள்ள சவாய் ஜெய் சிங் கட்டிய ஜந்தர் மந்தர் வானாய்வகம்

தில்லி, மதுரா (ஆக்ரா மாகாணத்தில் உள்ளது), பனாரஸ் (காசி), உஜ்ஜைனி (மால்வா மாகாணத்தின் தலைநகர்) மற்றும் தனது சொந்த தலைநகரான ஜெய்ப்பூர் ஆகிய ஐந்து இடங்களில் ஜெய் சிங் ஐந்து விண்வெளி ஆய்வுக்கூடங்களைக் கட்டினான். ஜெய்ப்பூரில் இருக்கும் ஆய்வுக்கூடம் மட்டும் இன்றளவும் உள்ளது. இந்திய வானியல் அறிவை முதன்மையாகக் கொண்டு கட்டப்பட்ட இந்த ஆய்வுக்கூடங்கள் கிரகணங்கள் மற்றும் அவை போன்ற பிற விண்வெளி நிகழ்வுகளைத் துல்லியமாக கணிக்க பயன்படுத்தப்பட்டன. அக்காலகட்டத்தில் இவ்வாய்வுக்கூடங்களுக்குப் பார்வையிட வந்த ஐரோப்பிய வானியல் அறிஞர்களின் திறத்தைவிடவும் சிறந்தனவாய் இருந்தன இவ்வாய்வுக்கூடங்களில் பயன்படுத்தப்பட்ட கருவிகளும் முறைகளும். ”ஜந்தர் மந்தர்” என்று அழைக்கப்பட்ட இவ்வாய்வகங்களில் ராம் யந்தரா, ஜெய் பிரகாஷ், சாம்ராட் யந்தரா, திகம்சா யந்தரா மற்றும் நரிவலய யந்தரா போன்ற பொறிகள் அமைந்திருந்தன.

ஜெய் சிங்கின் மிகப் பெரிய சாதனை ஜெய்ப்பூர் நகரை கட்டியதே ஆகும் (இந்நகரம் உண்மையில் ஜெய்நகரம் என்று அழைக்கப்பட்டது, சமற்கிருதத்தில் இதன் பொருள் ‘வெற்றியின் நகரம்’ என்பதாகும், பின்னர் 20ம் நூற்றாண்டில் பிரித்தானியரால் ‘இளஞ்சிவப்பு நகரம்’ என்று அழைக்கப்பட்டது), திட்டமிட்டுக் கட்டப்பட்ட இந்நகரமே பின்னர் ராஜஸ்தானின் தலைநகரானது. இப்புதிய தலைநகரின் கட்டுமானம் 1725 வாக்கிலேயே தொடங்கிவிட்டிருப்பினும், 1727-இல்தான் முறைப்படியான அடிக்கால் நாட்டு விழா நடத்தப்பட்டது. 1733-இல் ஜெய்ப்பூர் கச்வாகர்களின் தலைநகராக ஆம்பூரின் இடத்தைப் பிடித்துக்கொண்டது. அகழ்வாய்வுகளில் காணப்படும் கி.மு. 3000 ஆண்டு காலத்திய ஹிந்து நகர அமைப்பில் கட்டப்பட்ட இந்நகரம், பண்டைய வடமொழிக் கட்டுமான நூல்களில் (சில்ப சூத்திரங்கள்) வல்லுனரான வித்யாதர் என்ற பிராமணரால் வடிவமைக்கப்பட்டது ஆகும். பெரிய உறுதியான மதில்களும், தேவையான படைக்கலன்களோடு கூடிய 17,000 படைவீரர்களும் கொண்டு திகழ்ந்த இந்த புதிய நகரத்தின் பாதுகாப்பில் நலமாய் இருக்க விரும்பி இந்தியா முழுவதிலிருந்தும் பல்வேறு வியாபாரிகள் இங்கு குடியமர்ந்தனர்.

இவ்வரசன் ஜான் நேப்பியர் போன்றவர்களின் நூல்களையும் மொழிபெயர்த்துள்ளான். இது போன்ற பல்வகை சாதனைகள் காரணமாய் சவாய் இரண்டாம் ஜெய் சிங் இன்றளவும் 18-ம் நூற்றாண்டின் மிக்க அறிவிற்சிறந்த இந்திய அரசனாக நினைவுகொள்ளப்படுகிறான்.

மன்னர் இரண்டாம் ஜெய் சிங் நிறுவிய கட்டிடங்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_ஜெய்_சிங்&oldid=3565159" இலிருந்து மீள்விக்கப்பட்டது