பரமார்த்த தரிசனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரமார்த்த தரிசனம் [1] என்னும் நூல் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பட்டனார் எனபவரால் இயற்றப்பட்டது. இந்த நூலுக்கு அதன் ஆசிரியர் பரமாரத்த தரிசனம் எனப் பெயர் சூட்டியிருப்பினும் நூல்களில் இதன் பெயர் பகவத் கீதை என்றே அச்சிப்பட்டுள்ளது. வடமோழிப் பகவத் கீதையின் தமிழ் மொழிபெயர்ப்புகளில் காலத்தால் முந்திய நூல் இது. [2] [3] இந்த நூலுக்கு இதே நூற்றாண்டில் தோன்றிய உரைநூலும் ஒன்று உண்டு.

நூலின் பாங்கு[தொகு]

  • வடமொழி நூலின் அத்தியாய முறைமையை அப்படியே பின்பற்றுகிறது.
  • எனினும் நல்ல தமிழ்-நடையில் உள்ளது.
  • வருணனைக்கு அதிக இடம் தரப்பட்டுள்ளது.
  • கொச்சகக் கலிப்பா, கலிவிருத்தம் முதலான யாப்புப் பாடல்கள் இதில் உள்ளன.
  • பல்வேறு சந்தப் பாடல்களும் உள்ளன.

பாடல் - எடுத்துக்காட்டு [4][தொகு]

1

தீக் குலாம் வேலினாய் தவத்தின் செய்கைதான்
வாக்கினால் பேசுதல் மனத்தின் ஆக்குதல்
ஆக்கையின் இயற்றுதலாய் இருப்பது
நோக்கினான் இவற்றினை நுனித்துக் கூறிவாம்.

2

தெளிவு இல் நெஞ்சைத் தெளியப் பிடித்தலும்
களி செயும் உளத்தைக் களி மாற்று என்றலும்
குளிர்வு இலாமை உளத்தில் கொளாமையும்
எளிதில் மானத மாதவம் என்பதே.

3

தலைமை அந்தணர் தேவர் குரவர் பால்
மலைதல் இன்றி வழிபடு வாழ்க்கையும்
கொலை துறத்தலும் காமம் குறைத்தலும்
தலைவ, காயத் தவம் எனப்பட்டதே

விசுவ ரூப தரிசனத்தில் வரும் 9 பாடல்கள் "உனை வேறு அறியேன் அடியனே" என முடிகின்றன. அவற்றில் ஒரு பாடல்:

ஏகா அழகே இகழா உருவே எனது ஆவிப்
பாகா இமையோர் மருகா அமுதே பழையோனே
நீ கால் நிலன் நீர் உள வேறு எவையும் தெரிகில்லா
ஆகாயமுமே உனையே அறியேன் அடியேனே.

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1970, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 279. 
  2. இந்த நூலால் வடமொழிக்குப் பெருமையே தவிர, தமிழுக்கு எந்தப் பெருமையும் இல்லை எனக் கருதி வைணவர்கள் இதனைத் தொடவில்லை. எனினும் வடமோழி அறியாத வேதாந்த மார்க்கத்தவர் சிலர் இதனை ஆட்சிக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள்.
  3. வேதாந்திகள் என்போர் வைணவ ஆசாரிய பரம்பரை (வடகலை) வழிமரபினர்
  4. பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரமார்த்த_தரிசனம்&oldid=1485124" இலிருந்து மீள்விக்கப்பட்டது