அருள்நிறை மரியம்மை காவியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருள்நிறை மரியம்மை காவியம் என்னும் கிறித்தவக் காப்பிய நூலை துரை. மாலிறையன் என்னும் புலவர் பாடியுள்ளார். இவர் புதுச்சேரியைச் சேர்ந்தவர். இந்நூல் 1996ஆம் ஆண்டு முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது.

நூலின் அமைப்பு[தொகு]

இக்காப்பிய நூலில் மூன்று காண்டங்கள் உள்ளன. அவை உருக்காட்சிக் காண்டம், திருக்காட்சிக் காண்டம், அருட்காட்சிக் காண்டம் என்பன ஆகும். இவற்றுள் முதலாவதாகிய உருக்காட்சிக் காண்டம் பதினைந்து படலங்களைப் பெற்றுள்ளது. அடுத்து வருகின்ற திருக்காட்சிக் காண்டம் பதினேழு படலங்களில் அமைந்துள்ளது. அருட்காட்சிக் காண்டம் இருபத்தைந்து படலங்களைக் கொண்டுள்ளது.

விருத்தப் பாவால் அமைந்து இக்காவியத்தில் 4745 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

நூலின் மூலங்கள்[தொகு]

இந்நூலுக்கு மூலங்களாக திருவிவிலியம் மற்றும் வேறுபல ஆங்கில நூல்கள் உள்ளன. உலகப் படைப்பு முதல் சூசையப்பர் மறைவுவரை உருக்காட்சிக் காண்டத்திலும், இயேசு சோதிக்கப்பட்டது முதல் சாவினின்று உயிர்பெற்றெழுந்தது வரையிலான நிகழ்வுகள் திருக்காட்சிக் காண்டத்திலும், உலகின் பல இடங்களில் அன்னை மரியா நல்கிய அருங்காட்சிகள் அருட்காட்சிக் காண்டத்திலும் விவரிக்கப்படுகின்றன.

சிறப்புப் பண்பு[தொகு]

காப்பியத்தலைவியாம் அன்னை மரியா, கடவுளின் மைந்தனை இவ்வுலகிற்கு ஈன்றளித்த கன்னித் தாய் என்பதாலும், பெண்களுள் பேறுபெற்றவர் என்பதாலும், அதற்கேற்ப கிறித்தவ சமயக் கோட்பாடுகளுக்கு உட்பட்டே நூலாசிரியர் காப்பியத்தை யாத்துள்ளார்.

ஆதாரம்[தொகு]

இர.ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).