வேணு சீனிவாசன் (எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேணு சீனிவாசன்
பிறப்புசெ. வே. சீனிவாசன்
நவம்பர் 25, 1955
காஞ்சிபுரம்,
தமிழ்நாடு,
 இந்தியா.
இருப்பிடம்கல்பாக்கம்,
சென்னை
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்வேணு சீனிவாசன்
கல்விதாவரவியலில் இளநிலைப் பட்டம்
அறியப்படுவதுஎழுத்தாளர்,
நாடக ஆசிரியர்,
நடிகர்
சமயம்இந்து
பெற்றோர்செ. வேணுகோபால் (தந்தை),
செல்லம்மாள் (தாய்)
வாழ்க்கைத்
துணை
எஸ். வி. ராஜேஷ்வரி
பிள்ளைகள்எஸ். வி. குமாரவிஜயன் (மகன்)
உறவினர்கள்சகோதரர்கள் -2, சகோதரி -3
விருதுகள்தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது

வேணு சீனிவாசன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவர் சென்னை, கல்பாக்கம் மருத்துவமனையில் தொழில்நுட்ப ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது பல மருத்துவக் கட்டுரைகள் தமிழில் வெளிவரும் பல மருத்துவ இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. குழந்தை வளர்ப்பு, பெண்கள் உடல்நலம், சிறுவர் இலக்கியம், ஆன்மீகம், அறிவியல் போன்ற துறைகளில் பல நூல்களை எழுதி இருக்கிறார். இவர் எழுதிய “சுற்றுச்சூழல் மாசு விளைவுகளும், விழிப்புணர்வும்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்று இருக்கிறது.

மேடை நாடகங்கள்[தொகு]

இவர் பல மேடை நாடகங்கள் எழுதி, நடித்து இயக்கியிருக்கிறார். இவரது பல நாடகங்கள் கல்பாக்கத்தில் மேடையேற்றம் பெற்றிருக்கின்றன. இவரது “வேடம் மாறிய வேந்தர்கள்” என்ற நாடகம் இதில் சிறப்பு பெற்றது.

வானொலி நாடகங்கள்[தொகு]

அகில இந்திய வானொலியில் இவரது பல சிறுவர் நாடகங்கள் இடம் பெற்றுள்ளது. இந்நாடகங்களில் ரோபோவுக்கு டாடா எனும் நாடகம் “பாப்பா மலர்” எனும் நிகழ்ச்சியில் பல முறை ஒலிபரப்பு செய்யப்பட்டிருக்கிறது. “பாப்பாவுக்கு ஒரு கதை” எனும் நிகழ்ச்சி வழியாகக் குழந்தைகளுக்கான நீதி போதனைக் கதைகள், அறிவியல் கதைகள் போன்றவைகளை வழங்கி இருக்கிறார். இவரது சுற்றுச்சூழல் குறித்த கருத்துக்கள் “சுற்றுச்சூழல் சிந்தனைகள்” என்ற நிகழ்ச்சியில் பல முறை படிக்கப்பட்டிருக்கின்றன.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்[தொகு]

  • இவருடைய பல நாடகங்கள் சென்னை, பொதிகைத் தொலைக்காட்சியில் கண்மணிப் பூங்கா எனும் நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளன.
  • இவருடைய நேர்காணல் கலைஞர் தொலைக்காட்சியின் விருந்தினர் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகியுள்ளது.

பரிசு மற்றும் விருதுகள்[தொகு]

  • குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுவர் நாவலுக்கான போட்டியில் இவரது “மான்தீவு மர்மம்” என்ற சிறுவர் நாவல் பரிசு பெற்றது. (1990)
  • வானொலி நாடக விழாப் போட்டியில் இவரது “ரோபோவுக்கு டாடா” என்ற சிறுவர் நாடகம் பரிசு பெற்றது. (1994)
  • கலைமகள் மாத இதழ் நடத்திய அமரர் ராமரத்தினம் நகைச்சுவைக் குறுநாவல் போட்டியில் இவரது “மாடிக்கு வந்த மலைப்பாம்பு” என்ற நாவல் பரிசு பெற்றது.
  • இவரது “மகாத்மா மாற்றினார்” என்ற சிறுகதை வள்ளியப்பா இலக்கிய வட்டப் பரிசு பெற்றிருக்கிறது. (2004)
  • இவரது “சுற்றுச்சூழல் மாசு விளைவுகளும், விழிப்புணர்வும்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றிருக்கிறது. (2011)