திருமந்திரார்த்த அரும்பத விளக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருமந்திரம் என்பது இங்கு வைணவ மந்திரத்தைக் குறிக்கும். இந்த மந்திர வியாக்கியானத்துக்கு 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிள்ளை லோகஞ்சீயர், தொட்டாசிரியர் ஆகியோர் எழுதிய அரும்பத விளக்கங்களே இந்த நூல்.

வைணவத்தில் மூன்று மந்திரங்களை மந்திரத்திரையம் என்பர். அவற்றுள் முதலாவது திருமந்திரம் ஓம் நமோ நாராயணாய என்பது. இதனை அஷ்டாஷரம் [1] என்பர். இதற்கு அரும்பத விளக்கம் கூறுவதே திருமந்திரார்த்த அரும்பத விளக்கம் என்னும் நூல். [2] திருமங்கை ஆழ்வார் "நான் கண்டுகொண்டேன்" எனப் பாடுவது இதனையே. [3] இதன் பொருளை விளக்கிப் பிள்ளை லோகாசாரியார் முமுட்சுகப்படி [4] என்று எழுதினார். இது இவர் எழுதிய அட்ட தச ரகசியங்களில் ஒன்று.

முதல் திருமந்திரார்த்த பகுதிக்கு இந்தப் பிள்ளை லோகாசாரியரின் தம்பி 'அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்' வியாக்கியானம் எழுதியிருக்கிறார். இந்த வியாக்கியானத்துக்கு 'பிள்ளை லோகம் சீயர்' சுருக்கமாகவும், சுத்தமாகவும் தொட்டாசிரியர் சற்று விரிவாகவும், அரும்பத விளக்கம் எழுதியிருக்கிறார்கள். பின்னர் எம்பாவையங்கார் பின்னர் மிக விரிவான மற்றொரு வியாக்கியானம் எழுதினார். இவை யாவும் ஒரு நூலாக அச்சிடப்பட்டுள்ளன. [5]

பல கதைகளை எழுதிச் சேர்த்த பிள்ளை லோகஞ்சீயர் இத் திருமந்திரம் உபதேசிக்கப்பட்ட கதையையும் இவ்வுரையில் கூறியிருக்கிறார். [6] இந்த அரும்பதவுரை சுருக்கமாகவும், சுவையாகவும் உள்ளது.

அடிக்குறிப்பு[தொகு]

  1. எட்டெழுத்து - ஓம் என்பது ஓர் எழுத்து.
  2. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 112. 
  3. வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால்
    பெருந்துயரிடும்பையில் பிறந்து,
    கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு
    அவர்த்தரும் கலவியேகருதி,
    ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால்
    உணர்வெனும் பெரும் பதம் திரிந்து,
    நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
    நாராயணா வென்னும் நாமம். (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் 948)
  4. வீடு பேற்றில் விருப்பம் உள்ளவன் என்பது இதன் பொருள்
  5. 1891 ஆம் ஆண்டுப் பதிப்பு
  6. சர்வேஸ்வரன் > பெரிய-பிராட்டி > சேனைமுதலியார் > சிவப்பன-முகன் > நாதமுனி - என ஒரு தொடர்வரிசையும், பிராட்டி > பிரமா > ரிசிகள் > நாதமுனி - என மற்றொரு வரிசையும் இதில் உள்ளது.