மு. மு. இஸ்மாயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீதியரசர் மு. மு. இஸ்மாயில்
கம்ப ராமாயணக் கலங்கரை விளக்கம்
பிறப்புஇஸ்மாயில்
(1921-02-08)பெப்ரவரி 8, 1921
நாகூர்
இறப்புசனவரி 17, 2005(2005-01-17) (அகவை 83)
சென்னை
இருப்பிடம்சென்னை
தேசியம்இந்தியர்
கல்விகலை இளவர், சட்ட இளவர்
பணிவழக்குரைஞர்
சட்ட விரிவுரையாளர்
நீதியரசர்
பணியகம்சென்னை உயர்நீதி மன்றம்
அறியப்படுவதுகம்பராமாயண ஆய்வு
பட்டம்டாக்டர்
சமயம்இசுலாம்

மு. மு. இஸ்மாயில் (பெப்ரவரி 8, 1921 – சனவரி 17, 2005) நீதியரசர்; தமிழறிஞர்; எழுத்தாளர்; சென்னை கம்பன் கழகத்தின் நிறுவுகைத் தலைவர்; கம்ப இராமாயண ஆய்வாளர்.

பிறப்பு[தொகு]

மு. மு. இஸ்மாயில் நாகபட்டணம் மாவட்டத்தில் உள்ள நாகூரில் 1921, பிப்ரவரி 8ஆம் நாள் பிறந்தார். ஒன்பது வயதில் தாயையும், பதிமூன்று வயதில் தந்தையையும் இழந்த அவரை உறவினர்கள் வளர்த்தார்கள்.

கல்வி[தொகு]

இஸ்மாயில் நாகூரில் பள்ளிப் படிப்பை நிறைவுசெய்தார். பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை (சிறப்பு) பட்டம் (Bachelor of Arts - Honours)பெற்றார். தொடர்ந்து சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று 1945 ஆம் ஆண்டில் சட்ட இளவர் (Bachelor of Law) பட்டம் பெற்றார். கல்லூரியில் தன் பேராசிரியர் கே. சுவாமிநாதனுடன் ஏற்பட்ட உறவால், இஸ்மாயிலுக்கு காந்தியத்தில் ஈடுபாடு ஏற்பட்டது.

பணி[தொகு]

தன்னுடைய ஆரம்ப காலத்தில் சென்னை விவேகானந்த கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[1][2]

வழக்குரைஞர்[தொகு]

இஸ்மாயில் சட்டக் கல்வியில் பட்டம் பெற்றதும் சென்னை வழக்குரைஞர் சங்கத்தில் பதிவு செய்துகொண்டார். 1946 ஆம் ஆண்டு முதல் 1959 ஆம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகத் தொழில் புரிந்தார்.

தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர்[தொகு]

1959 ஆம் ஆண்டு முதல் 1967 சனவரி வரை தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞராகப் பணியாற்றினார்.

சட்ட விரிவுரையாளர்[தொகு]

இஸ்மாயில் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக தொழில் புரிந்தபொழுதே பகுதி நேர சட்ட விரிவுரையாளராக 1946 ஆம் ஆண்டு முதல் 1951ஆம் ஆண்டு வரை சென்னை விவேகானந்தர் கல்லூரியிலும் 1951ஆம் ஆண்டு முதல் 1959ஆம் ஆண்டு வரை சென்னை சட்டக் கல்லூரியிலும் பணியாற்றினார்.

கூடுதல் நீதிபதி[தொகு]

இஸ்மாயில் 1967 பிப்ரவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தில்லி உயர்நீதி மன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு பணியாற்றினார்.

நீதிபதி[தொகு]

1967 நவம்பர் முதல் 1979 நவம்பர் 5 வரை சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றினார்.

தலைமை நீதிபதி[தொகு]

இஸ்மாயில் 1979 நவம்பர் 6 ஆம் சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1981 ஆம் ஆண்டும் சூலை மாதத்தில் மு. மு. இஸ்மாயிலைக் கலந்தாலோசிக்காமலேயே வேறு மாநிலத்திற்கு மாற்றினார். அதனைக் கண்டித்து 1981 சூலை 8 ஆம் நாள் தன் பதவியைத் துறந்தார்.

தற்காலிக ஆளுநர்[தொகு]

1980 அக்டோபர் 27 ஆம் நாள் முதல் நவம்பர் 4 ஆம் நாள் வரை இஸ்மாயில் தமிழ்நாட்டின் தற்காலிக ஆளுநராகப் பணியாற்றினார்.

சட்டக்கமிசன் தலைவர்[தொகு]

2005 ஆம் ஆண்டில் சட்டக் கமிசன் தலைவராகப் பணியாற்றினார்.

சென்னை கம்பன் கழகம்[தொகு]

மு. மு. இஸ்மாயிலுக்கு இளமையிலிருந்தே கம்பராமாயணத்தில் ஈடுபாடு இருந்தது. நாளடைவில் அவ்வீடுபாடு புலமையாக மலர்ந்தது. அதன் விளைவாக 1975 ஆம் ஆண்டில் "தினமணி" முன்னாள் ஆசிரியர் ஏ. என். சிவராமன், கம்பன் அடிப்பொடி சா. கணேசன், பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் சி. எம். அழகர்சாமி, பழ. பழனியப்பன் ஆகிய நண்பர்களின் துணையோடு சென்னையில் கம்பன் கழகத்தை உருவாக்கினார். தொடக்க நாள் முதல் தனது மரணம் வரை அவ்வமைப்பின் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.

எழுத்துப்பணி[தொகு]

வ.எண் ஆண்டு நூல் வகை பதிப்பகம் குறிப்பு
01 1945 மெளலானா ஆஜாத் வாழ்க்கை வரலாறு
02 அல்லாவுக்கு ஆயிரம் நாமங்கள் சமயம்
03 இனிக்கும் இராஜநாயகம் சொற்பொழிவு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உள்ள
ஏவி.எம்.ஜாபர்தீன் – நூர்ஜஹான்
அறக்கட்டளைச் சொற்பொழிவு
04 1957 தமிழ்க் கலைக்களஞ்சியம் தொகுதி 1 [3] சில கட்டுரைகள் தமிழ் வளர்ச்சிக் கழகம் கலைக்களஞ்சிய கட்டுரையாளர்களில் ஒருவராக இருந்து கட்டுரைகள் எழுதியுள்ளார்
05 1978 மும்மடங்கு பொலிந்தன திறனாய்வு வானதி பதிப்பகம்
06 1985 கம்பன் கண்ட சமரசம் திறனாய்வு வானதி பதிப்பகம்
07 1987 உந்தும் உவகை திறனாய்வு வானதி பதிப்பகம்
08 1980 இலக்கிய மலர்கள் திறனாய்வு வானதி பதிப்பகம்
09 1992 ஒரு மறக்க முடியாத அனுபவம் திறனாய்வு வானதி பதிப்பகம் கல்கியில் 1985 திசம்பர் 8 இதழில்
தொடங்கி தொடர வெளிவந்தவை
10 கம்பன் கண்ட ராமன் திறனாய்வு வானதி பதிப்பகம்
11 செவிநுகர் கனிகள் திறனாய்வு வானதி பதிப்பகம்
12 வள்ளலின் வள்ளல் வரலாறு
13 பழைய மன்றாடி திறனாய்வு வானதி பதிப்பகம்
14 மூன்று வினாக்கள் திறனாய்வு வானதி பதிப்பகம்
15 நினைவுச்சுடர்
16 தாயினும்…
17 உலகப் போக்கு
18 நயத்தக்க நாகரிகம்

இலக்கிய ஈடுபாடு[தொகு]

சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் பொது நிகழ்ச்சிகளில் பலமுறை ஸ்ரீராமகிஷ்ணர், சுவாமி விவேகானந்தர் பற்றி சொற்பொழிவு செய்திருக்கிறார்.அண்ணா சுப்ரமண்யம் மொழிபெயர்த்த உபநிஷத நூல்கள் இவருக்குப் பிடித்தவை. வேதாந்த கேசரி மற்றும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் பத்திரிக்கைகளின் ஆயுள் சந்தாதாரராக இருந்தவர்.[1]

வெளிநாட்டுப் பயணம்[தொகு]

இஸ்மாயில் ஹாங்காங் நாட்டின் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் அழைப்பின்பேரில் 1970 ஆம் ஆண்டு ஹாங்காங் சென்று வந்தார்.

விருதுகள்[தொகு]

மு. மு. இஸ்மாயிலுக்கு அவரது தமிழ்த் தொண்டினை பாராட்டி பல்வேறு அமைப்புகள் பட்டங்களையும் விருதுகளையும் வழங்கினர். அவை வருமாறு:

வ.எண் ஆண்டு விருது அமைப்பு
01 1978 கம்பராமாயண கலங்கரை விளக்கம் நெல்லை கம்பன் கழகம்
02 1979 டாக்டர் அண்ணாமலை பல்கலைக் கழகம்
03 1989 பால் ஹாரிஸ் பெல்லோஷிப் மதுரை ரோட்டரி சங்கம்
04 இயல் செல்வம்
04 சேவா ரத்தினம்
06 1991 இராம ரத்தினம் சென்னை நாரத கான சபா
07 1992 கலைமாமணி தமிழ்நாடு அரசு
08 1997 ராமானுஜர் விருது ஆழ்வார் ஆய்வு மையம்

மறைவு[தொகு]

மு. மு. இஸ்மாயில் 2005 சனவரி 17ஆம் நாள் திங்கட் கிழமை சென்னையில் காலமானார்.

சான்றடைவு[தொகு]

  1. 1.0 1.1 நாங்கள் கண்ட சுவாமி தபஸ்யானந்தர்; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 234
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-07-17. பார்க்கப்பட்ட நாள் 2014-06-24.
  3. விக்கிமூலம், கலைக்களஞ்சியம் 1, முதல் தொகுதி கட்டுரையாளர்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._மு._இஸ்மாயில்&oldid=3567830" இலிருந்து மீள்விக்கப்பட்டது