வலைவாசல்:அறிவியல்/சிறப்புக் கட்டுரை/12

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சவ்வூடு பரவல் அல்லது பிரசாரணம் (Osmosis) எனப்படுவது நீரழுத்தம் கூடிய கரைசல் (கரையத்தின் செறிவு குறைந்த கரைசல்) ஒன்றிலிருந்து, நீரழுத்தம் குறைந்த கரைசல் (கரையத்தின் செறிவு கூடிய கரைசல்) ஒன்றிற்கு தேர்ந்து உட்புகவிடும் மென்சவ்வு (semi-permeable membrane) ஒன்றின் ஊடாக நீர் மூலக்கூறுகள் பரவல் ஆகும். இது கரையம் அல்லது கரைபொருளை (solute) உட்செல்ல விடாது, கரைப்பானை (solvent) மட்டுமே தேர்ந்து உட்செல்ல விடும் மென்சவ்வினூடாக, கரைப்பானானது, சக்திப் பிரயோகமின்றி பரவும் (passive diffusion) ஒரு இயற்பியல் தொழிற்பாடாகும். இந்த சவ்வூடு பரவலின்போது வெளியேறும் சக்தியானது வேறு தொழிற்பாடுகளில் பயன்படுத்தப் படலாம்.சவ்வூடு பரவல் மூலம் இருவேறு செறிவுடைய கரைசல்களின் (solution) இடையே கரைப்பான் மூலக்கூறுகள் பரவுவதால், இரு கரைசல்களின் செறிவும் சமநிலைக்கு கொண்டு வரப்படும். இயல்பாக நிகழக் கூடிய இவ்வகை கரைப்பானின் பரவலைத் தடுக்க கொடுக்க வேண்டிய அமுக்கமே சவ்வூடு பரவல் அமுக்கம் எனப்படும்.உயிரினங்களில் இருக்கும் இவ்வகை சவ்வுகள் மாப்பொருள் (polysaccharides) போன்ற பெரிய மூலக் கூறுகளை ஊடுசெல்ல விடாதவையாகவும், நீர், மேலும் ஏற்றங்களற்ற சிறிய மூலக் கூறுகளை உட்செல்ல விடுபனவையாகவும் இருக்கின்றன.