குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் நூலின் மதுரைக் காண்டத்தில் வருகின்ற எழாவது படலமாகும். இப்படலத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வர் திருமண விருந்தில் மீனாட்சிக்கு ஏற்பட்ட கர்வத்தினை சிவபெருமான் குண்டோதரன் என்ற தனது பூதகனத்தினை வைத்து தீர்த்தமை இடம்பெற்றுள்ளது.

படலச் சுருக்கம்[தொகு]

சுந்தரர் மீனாட்சி திருமண விருந்து[தொகு]

சுந்தரர் மீனாட்சி திருமணம் மதுரையில் நடந்தது. அதன் பின் லட்சக்கணக்கான மக்கள் சாப்பிட்ட பின்னும் மடப்பள்ளியில் உணவு அப்படியே இருந்தது. மணமகளான மீனாட்சியிடம் அரண்மனை ஆட்கள் இதைப் பற்றி கூறினார்கள்.

மீனாட்சியின் கர்வம்[தொகு]

மீனாட்சிக்கு இத்தனை மக்கள் உண்டபின்னும் தன் அரண்மனை உணவு தீராமல் இருப்பது கண்டு, கர்வம் வந்தது. சுந்தரேசரிடம் மணமகன் வீட்டில் சாப்பிடாமல் யாரேனும் உள்ளார்களா? என்று மீனாட்சி வினவினார்.

குண்டோதரன் பசி[தொகு]

சுந்தரேசர் தனது பூதகணங்களை அழைத்து உணவருந்தாதவர் யாரென வினவினார். குண்டோதரன் என்ற பூதம் மட்டும் திருமண வேலைகளில் மூழ்கியிருந்தமையால் உணவருந்தாமல் இருந்தார். அதை அறிந்த சிவபெருமான் குண்டோதரனை உணவருந்தி விட்டு வரும்படி கூறினார். அத்துடன் வடவைத்தீ எனும் பசியை உண்டாக்கினார்.

மீனாட்சியின் புரிதல்[தொகு]

மடப்பள்ளியில் உள்ள அனைத்து உணவுகளையும் குண்டோதரன் உண்டார். அதன் பிறகும் பசி அடங்கவில்லை. மீண்டும் சமையல் செய்து உணவிட்டனர், அதையும் குண்டோதரன் உண்டார். இதையறிந்த மீனாட்சி சுந்தரேசரின் லீலை என்பதை அறிந்தார். ஈசனை சரணடைந்தார்.[1]

குண்டோதரன் பசியாற்றல்[தொகு]

குண்டோதரனின் பசியை நீக்க சுந்தரர் அன்னப்பூரணியை அழைத்தார். குண்டோதரனின் பசியடங்கியது, ஆனால் நீர் நிலைகள் அனைத்திலும் உள்ள நீரைக் குடித்தாலும், தாகம் மட்டும் அடங்கவில்லை. இதனால் சிவபெருமான் தனது ஜடாமுடியில் இருந்த கங்கையை குண்டோதரனின் தாகம் தீர்க்குமாறு கூறினார். மதுரையில் நதியாக ஓடிய கங்கையை வைகை என்று அழைக்கின்றனர். இதுபற்றி அன்னக் குழியும் வைகையும் அழைத்த படலம் என்பதில் செய்தியுள்ளது.

காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=2287 குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்