சங்ககால நீச்சல் பந்தாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்ககாலத்தில் ஆடப்பட்ட நீச்சல் பந்தாட்டம் ஒரு திளைப்பு விளையாட்டு. நீர்ப் பந்தாட்டம் அன்று. நீராடும் காதலர் ஒருவர்மீது ஒருவர் பந்தை வீசிக்கொண்டனர். பூநீர் பெய் வட்டம் என்று அந்தப் பந்து கூறப்படுகிறது. பலவகை வண்ண நீர்களைத் தனித்தனிப் பந்துகளில் அடைத்து ஒருவர்மீது ஒருவர் வீசிக்கொள்வர். பந்து வீச்சு மோதியதும் உடையும் தன்மை உடையதாக இருக்கும். உடைந்ததும் உள்ளிருக்கும் வண்ணநீர் பந்து பட்டவர்மீது ஒழுகும். அதைக் கண்டு மகிழ்வர். [1] [2] [3]

இக்காலத்தில் ஹோலிப் பண்டிகையின்போது வட இந்தியாவில் வண்ணப் பொடிகளைத் தூவி விளையாடுவர். தமிழ்நாட்டில் தேர்த்திருவிழா முடிந்ததும் சாமியைக் குடி விடும் நாளில் மஞ்சள் நீரை முறைமாமன், முறைமாமன் மகள் முதலானோர் மீது ஊற்றி விளையாடும் வழக்கம் இன்றும் உண்டு. இது இந்தப் பண்டைய விளையாட்டோடு ஒப்பு நோக்கத்தக்கது.

அடிக்குறிப்பு[தொகு]

  1. தாழ் நீர் இமிழ் சுனை நாப்பண் குளித்து, அவண்
    மீ நீர் நிவந்த விறலிழை, 'கேள்வனை
    வேய் நீர் அழுந்து தன் கையின் விடுக' என,
    பூ நீர் பெய் வட்டம் எறிய, புணை பெறாது
    அரு நிலை நீரின் அவள் துயர் கண்டு,
    கொழுநன் மகிழ் தூங்கி, கொய் பூம் புனல் வீழ்ந்து,
    தழுவும் தகை வகைத்து தண் பரங்குன்று. (பரிபாடல் 21)
  2. கண் ஆரும் சாயற் கழித் துரப்போரை
    வண்ண நீர் கரந்த வட்டு விட்டு எறிவோரும், (பரிபாடல் 11)
  3. உறைத்தும் செறுத்தும் உணர்த்துவானைப்
    புல்லாது ஊடிப் புலந்து நின்றவள்
    பூ எழில் வண்ண நீர் பூரித்த வட்டு எறிய, (பரிபாடல் 12)