வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொகு  

சிறப்புக் கட்டுரை

பயன்பாடு

சிறப்புக் கட்டுரை துனைப் பக்கத்தின் வடிவமைப்பு வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை/வடிவமைப்பு.

Selected articles list

வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை/1

சிலாங்கூர் மலேசியத் தீபகற்பத்தின் மேற்குக் கரையில் உள்ள ஒரு பெரிய மாநிலம் ஆகும். இதற்கு 'டாருல் ஏசான்' அல்லது 'மனத்தூய்மையின் வாழ்விடம்' எனும் அரபுமொழியில் நன்மதிப்பு அடைமொழியும் உண்டு. இந்த மாநிலத்தின் வடக்கே பேராக் மாநிலம் உள்ளது. சிலாங்கூர் மாநிலத்திற்கு தெற்கே நெகிரி செம்பிலான், மலாக்கா மாநிலங்கள் உள்ளன. கிழக்கே பகாங் மாநிலம் உள்ளது. ஆக தெற்கே ஜொகூர் மாநிலம் உள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில் தான் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம், மலேசியக் கூட்டரசு நிர்வாக மையமான புத்ராஜெயா போன்றவை இருக்கின்றன. சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாக ஷா ஆலாம் விளங்குகின்றது. மாநிலத்தின் அரச நகரம் கிள்ளான். மற்றொரு பெரிய புறநகர்ப் பகுதியாக பெட்டாலிங் ஜெயா இருக்கின்றது. பெட்டாலிங் ஜெயாவிற்கு 2006 ஜூன் 20-இல் மாநகர் தகுதி வழங்கப்பட்டது. சீனத் தளபதி செங் ஹோ 1400களில் சிலாங்கூர் மாநிலத்திற்கு வருகை புரிந்துள்ளார். அவர் தன்னுடைய பயணக் குறிப்புகளில் கிள்ளான் ஆறு, சிலாங்கூர் டாராட் எனும் சொற்களைப் பயன்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை/2

குமரிக்கண்டம் என்னும் பெரும் நிலப்பகுதி இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு. தேவநேயப் பாவாணர் முதலானோர் இந்த குமரிக்கண்டத்திலேயே தமிழர்கள் முதன்முதல் தோன்றினர் என எழுதியுள்ளனர். ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய குமரிக்கண்டம் கடல்கோளால் அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின், அறிவியல் முறைப்படி நிறுவப்படாத, கருத்து. குமரிக்கண்டத்தின் தலைநகரான தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்ததென்பதும், அதனை அடுத்து மேலும் இரண்டு சங்கங்கள் இருந்தனவென்பதும் நூற்களின் தகவல்களாகும். கிடைக்கப்பெற்ற நூற்தகவல்களின் மூலம் உறுதியாகக் கூறமுடியாத அளவிற்குக் குமரிக்கண்டம் வெறும் கற்பனைக் கண்டமென்பது பலருடைய கருத்து. இக்குறிப்புகளில் எதுவும் அறிவியல் முறைப்படி நிறுவப்படவோ, மறுக்கப்படவோ இல்லை. இறையனார் அகப்பொருள் உரையில் கூறியுள்ளது உண்மையாக இருப்பின் தமிழர்களின் இலக்கிய காலம் சுமார் கி.மு 10,500 ஆண்டுகள் வரை செல்லும்.



வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை/3

நவூரு தெற்கு பசிபிக்கில் அமைந்துள்ள மைக்குரோனேசியத் தீவு நாடும், உலகின் மிகச்சிறிய குடியரசு நாடும் ஆகும். இதன் மொத்தப் பரப்பளவு 21 கிமீ². இந்நாட்டிற்கு அதிகாரபூர்வத் தலைநகர் எதுவும் இல்லை. இதன் நாடாளுமன்றம் யாரென் நகரில் உள்ளது. வத்திக்கானுக்கு அடுத்ததாக இரண்டாவது மிகக்குறைந்த மக்கள்தொகை கொண்ட நாடாகும். நவூரு மக்கள் ஐஜிபொங் என்ற பெண் தெய்வத்தை வழிபடும் பொலினேசிய மற்றும் மைக்குரோனேசிய கடற்பயணிகளின் வம்சாவழியினராவர். மரபுவழியாக நவூருவில் வாழ்ந்த 12 இனக்குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த அந்நாட்டின் கொடியில் 12 நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. நவுறுவில் நிலவுடைமை முறை சற்று வேறுபாடானது. தீவின் நிலங்கள் அனைத்தும் தனியார்களோ அல்லது குடும்பங்களோ சொந்தமாக வைத்துள்ளன. அரசாங்கமோ அல்லது அல்லது அரசுத் திணைக்களங்களோ எந்த நிலத்தையும் சொந்தமாக வைத்திருக்க முடியாது. நிலம் ஒன்றைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அந்த நிலத்தின் சொந்தக்காரருடன் குத்தகை உடன்பாட்டில் மட்டுமே குறிப்பிட்ட நிலத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஆத்திரேலியாவில் தஞ்சமடையும் அகதிகளுக்கான தடுப்பு முகாம் நிறுவப்பட்டதை அடுத்து, அதன் மூலம் ஆத்திரேலிய அரசின் பெருமளவு நிதியுதவி பெறப்படுகிறது.



வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை/4

பஞ்சாப் பகுதி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் மற்றும் இந்தியாவின் பஞ்சாப், இமாச்சல் பிரதேசம், சண்டிகர், தில்லி ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கிய ஒரு புவியியல் பகுதி. சிந்துவின் கிளை ஆறுகளான ஜீலம், செனாப், ராவி, சட்லெஜ், மற்றும் பியாஸ் ஆகிய “ஐந்து நதிகள்” பாய்வதால் இப்பகுதி பஞ்சாப் என அழைக்கப்படுகிறது.பஞ்சாப் ஒரு நெடிய வரலாற்றையும் செறிந்த பண்பாட்டு மரபையும் கொண்டுள்ளது. பஞ்சாப் மக்கள் பஞ்சாபிகள் என அழைக்கப்படுகின்றனர், அவர்களது மொழி பஞ்சாபி. பஞ்சாப் பகுதியின் 58% பாகிஸ்தானிலும் மீதமுள்ள 42% இந்திய குடியரசிலும் உள்ளது. இந்தோ-ஆரிய மொழி பேசும் மக்களால் நிரம்பியிருக்கும் இந்தப் பகுதியில் சீக்கியர்கள், சமணர்கள், புத்த மதத்தினர், கிரேக்கர்கள், பெர்சியர்கள், அரபு நாட்டினர், துருக்கியர்கள், முகலாயர்கள், ஆப்கானியர்கள், பலோசிகள், இந்துக்கள் மற்றும் பிரிட்டிசார் ஆகியோர் வசிக்கின்றனர்.



வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை/5

சிங்கப்பூர் அல்லது அதிகாரபூர்வமாக சிங்கப்பூர் குடியரசு தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு. மலேசியத் தீபகற்பத்தின் தென் முனையில் அமைந்துள்ளது. ஜொகூர் நீர்ச்சந்தி இதனை மலேசியாவிடமிருந்து பிரிக்கிறது. தெற்கில் சிங்கப்பூர் நீர்ச்சந்தி இந்தோனேசியாவின் ரியாவு தீவுகளைப் பிரிக்கின்றது. மிகக்குறைவான அளவிலேயே மழைக்காடுகள் உள்ளன. ஆனாலும் நிலச்சிரமைப்பு மூலம் மேலதிக நிலங்கள் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ளன. மிகவும் சிறிய பரப்பளவு கொண்ட சிங்கப்பூர், தென்கிழக்காசியாவில் மிகச்சிறிய நாடாகும். ஐக்கிய அமெரிக்கா, நிப்பான், ஐரோப்பா ஆகியவற்றின் 7,000க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் கிளைகளும் 1500 சீன, இந்திய நிறுவனங்களின் கிளைகளும் இங்குள்ளன. இந்தியாவின் இரண்டாவது பெரிய அன்னிய முதலீட்டாளர் சிங்கப்பூராகும்.



வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை/6

மாலைத்தீவுகள் அல்லது மாலைத்தீவுகள் குடியரசு இந்தியப் பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளாலான தீவு நாடாகும். இது இந்தியாவின் இலட்சத்தீவுகளுக்கு தெற்கேயும் இலங்கையிலிருந்து சுமார் 700 கிமீ தென்மேற்காகவும் அமைந்துள்ளது. 90,000 ச.கி.மீ பரப்பளவுள்ள இத்தீவின் மக்கள் தொகை 3 இலட்சத்து 13 ஆயிரத்து 920 ஆகும். மொத்தம் 26 பவளத்தீவுகளில் 1,192 தீவுகள் காணப்படுவதோடு இவற்றில் சுமார் 200 இல் மட்டும் மனித குடியேற்றங்கள் காணப்படுகிறன. தீவுகளால் அமைந்த மாலை போல் காணப்படுவதால் தமிழில் மாலைத்தீவுகள் என்றும் சமஸ்கிருத மொழியில் "மாலத்வீப"(தீவுகளின் மாலை)என்றும் குறிப்பிடப்படுகிறது. வேறு சிலரின் கருத்துப்படி இது "மகால்" என்ற அரபு மொழிச் சொல்லின் மரூஉ ஆகும். சோழர்கள் காலம் வரை அவர்களது ஆட்சியில் இருந்த இந்தத் தீவுகள் பின்னர் சிங்களர்கள் ஆட்சிக்குட்பட்டது. 1153இல் இசுலாம் மதம் இங்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் மாலைத்தீவுகள் 1558 இல் போர்த்துக்கேயரிடமும், 1654 டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியிடமும் பின்பு 1887 முதல் பிரித்தானியரிடமும் அடிமைப்பட்டது. 1965ஆம் ஆண்டு மாலைத்தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. 1968 இல் சுல்தான் ஆட்சியில் இருந்து குடியரசாக மாறியது.



வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை/7

சம்மு காசுமீர் இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு மாநிலம். இது இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது. சம்மு காசுமீர் வடக்கிலும் கிழக்கிலும் சீனாவை எல்லையாகவும், தெற்கில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிங்களை எல்லையாகவும், வடக்கிலும், மேற்கிலும் பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆசாத் காஷ்மீர் பகுதியை எல்லையாகவும் கொண்டுள்ளது. இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மாநிலம் மட்டுமே இந்திய அரசியலமைப்பின் 370 வது குறிப்பின்படி பெருமளவில் மாநில சுயாட்சியை கொண்டுள்ளது. இதன்படி, இந்திய பாராளுமன்றத்தில் இராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம், ஆகிய துறைகளை தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்த சட்டமும் காசுமீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி சம்மு காசுமீர் மாநிலத்தில் செல்லாது. சம்மு காசுமீர் மாநிலத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் ஆளுகையும் உள்ளது.மேலும் இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மாநிலத்தில் மட்டுமே தனிக்கொடியும், தனி அரசியல் சாசனமும் உண்டு. இந்தியாவின் பிற மாநிலங்களைச் சார்ந்த மக்கள் சம்மு காசுமீர் மாநிலத்தில் நிலம் முதலான அசையா சொத்து வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது.



வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை/8

மலேசியா தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு முடியாட்சி நாடு. மலேசியா தீபகற்ப மலேசியா அல்லது மேற்கு மலேசியா என்றும், கிழக்கு மலேசியா என்றும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மலேசியாவை, மலேசிய போர்னியோ என்று அழைப்பதும் உண்டு. மலேசியாவின் நில எல்லைகள் தாய்லாந்து, இந்தோனேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், புரூணை ஆகிய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூர். நடுவண் அரசின் நிர்வாக மையம் புத்ராஜெயாவில் உள்ளது. மலேசியாவின் மக்கள் தொகை 2.5 கோடி. இவர்களில் மலாய் மக்கள் பெரும்பான்மையானவர். இவர்களுக்கு அடுத்து சீனர்களும் இந்தியர்களும் கூடுதலாக வாழ்கின்றனர். பெரும்பான்மையான மலேசிய மக்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறார்கள். மலேசியாவின் உள்கட்டமைப்பு ஆசிய நாடுகளிலேயே மிகவும் மேம்படுத்தப்பட்ட ஒன்றாக விளங்குகிறது. 4.7 மில்லியன் நிலைத்த இட தொலைபேசி இணைப்புகளையும் 30 மில்லியன் நகர்பேசி இணைப்புக்களையும் கொண்டுள்ள இதன் தொலைத்தொடர்பு பிணையம் தென்கிழக்கு ஆசியாவில் சிங்கப்பூருக்கு அடுத்த நிலையில் உள்ளது. மலேசிய நாட்டில் ஏழு பன்னாட்டு வணிகம் புரியும் துறைமுகங்கள் உள்ளன.



வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை/9

அமெரிக்க கன்னித் தீவுகள் கரிபியத்தில் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சியின் கீழுள்ள மண்டலமாகும். இது கன்னித் தீவுக் கூட்டத்தில் சிறிய அண்டிலுசுவில் காற்றுமுகத் தீவுகளில் அமைந்துள்ளது. அமெரிக்கக் கன்னித்தீவுகள் கிமு 100 ஆம் ஆண்டளவில் தென் அமெரிக்காவிலிருந்து வந்த அராவாக் இந்தியர்களால் முதலாவதாக குடியேற்றப்பட்டது. கிமு 1500 முதல் இங்கு அமெரிக்க இந்தியர்கள் வசித்ததற்கான சான்றுகளும் கிடைக்கப்பட்டுள்ளன. 15ம் நூற்றாண்டு வரை இத்தீவுகளில் வசித்து வந்த அராவாக் இந்தியர்களை சிறிய அண்டிலுசுத் தீவுகளிலிருந்து வந்த தீவிர கரிப் இனக் குடிகள் வெளியேற்றினர்கள். வெர்ஜின் தீவுகளைக் கண்ட முதல் ஐரோப்பியர் கிரிஸ்டோபர் கொலம்பஸ். 1493 இல் அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது கடற்பயணத்தின் போது இவர் இத்தீவை அடைந்தார். கொலம்பஸ் இத்தீவிற்கு "புனித ஊர்சுலாவும் அவரது 1000 கன்னியரும்" எனப் பெயரிட்டார். அடுத்துவந்த 300 ஆண்டுகளில் அப்போதைய ஐரோப்பிய வல்லரசுகள் இத்தீவுகளின் ஆட்சியை மாறிமாறிக் கொண்டிருந்தன.



வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை/10

ஆப்பிரிக்காவின் கொம்பு எனப்படும் பகுதி கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள தீபகற்பமாகும். இதன் கடற்கரை அரபிக்கடல் மற்றும் ஏமன் குடாவை எல்லைகளாக கொண்டுள்ளது. சோமாலியா, எரித்திரியா, சிபூட்டி, எத்தியோப்பியா ஆகியவை இப்பகுதியில் உள்ள நாடுகள் ஆகும். இப்பகுதி நிலநடுக் கோடுக்கும் கடக ரேகைக்கும் சம தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள மலைகள் பெரும் பிளவுப் பள்ளத்தாக்கு அமைந்ததால் ஏற்பட்ட நில உயர்வு காரணமாக உருவானதாகும். இப்பகுதிக்கும் உலகின் மற்ற பகுதிகளுக்குமான வணிகத்தில் வடக்கு சோமாலியா சிறப்பு இடத்தை பிடித்திருந்தது. எகிப்தியர்கள், ரோமர்கள், கிரேக்கர்கள், மெசபடோமியர்கள் ஆகியோர் மதிப்பு மிக்க பொருளாக கருதும் சாம்பிராணி, குங்குமதூபம் மற்றும் மசாலா பொருட்களுக்களை வழங்குபவர்களாக சோமாலிய கடலோடிகளும் வணிகர்களும் திகழ்ந்தனர். இடைக்காலத்தில் இப்பகுதியின் வணிகத்தை பல்வேறு அரசுகள் ஆதிக்கம் செலுத்தி கட்டுப்படுத்தின. இப்பகுதியை ஆண்ட அடல் சூல்தானகம் பல இனக்குழுக்கள் கொண்ட முசுலிம் அரசாக திகழ்ந்தது. இது புகழின் உச்சியில் இருந்த போது எத்தியோப்பியா, எரித்திரியா, சிபூட்டி மற்றும் சோமாலியாவின் பெரும் பகுதிகள் இதன் கட்டுப்பாட்டில் இருந்தன.



வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை/11

யால தேசிய வனம் இலங்கையிலுள்ள தேசிய வனங்களுள் ஆகக் கூடிய எண்ணிக்கையான சுற்றுலாப் பயணிகள் செல்வதும் பரப்பளவில் இரண்டாவது பெரியதும் ஆகும். ஐந்து பிரிவுகளைக் கொண்ட இவ்வனத்தில் இரண்டு பிரிவுகளே பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளன. இக்காட்டினை அண்டியதாக வேறு சில காடுகளும் காணப்படுகின்றன. யால தேசிய வனம் இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் உள்ளது. தலைநகர் கொழும்பிலிருந்து 190 மைல் தொலைவில் காணப்படும் இக்காடு மொத்தமாக 979 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டது. இக்காடு அதில் வசிக்கும் ஏராளமான வனவிலங்குகள் தொடர்பில் மிகப் பிரபலமானதாகும். இத்தேசிய வனம் இலங்கை யானைகளினதும் நீரியற் பறவைகளினதும் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. யால தேசிய வனத்தினுள் வாழும் 215 பறவையினங்களுள் ஆறு இனங்கள் இலங்கைக்குத் தனிச் சிறப்பானவையாகும். உலகில் சிறுத்தைகள் செறிவு மிகக் கூடிய இடங்களுள் இதுவும் ஒன்றாகும். 2004 கடற்கோளினால் இவ்வனத்துக்குப் பெருஞ் சேதங்கள் விளைந்ததுடன் இதனை அண்டிய பகுதிகளில் வாழ்ந்த இருநூற்றைம்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2009-இல் இக்காட்டினுட் பகுதிப் பாதுகாப்பு சிறப்பாக்கப்பட்டது முதல் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு கூடியுள்ளது.



வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை/12

இலங்கையின் மலைசார் மழைக்காடுகள் இலங்கையின் மத்திய மலைநாட்டில் கடல் மட்டத்திலிருந்து 1000மீ உயரத்துக்கு மேலாக அமைந்துள்ள சூழலியற் பகுதி உள்ளடக்குகின்ற காடுகள் ஆகும். வளமான உயிர்ப்பல்வகைமையைக் கொண்டுள்ள இப்பகுதி உலக வாழ் உயிரினங்கள் பலவற்றிலும் தனிச் சிறப்பு மிக்க இனங்கள் ஏராளமாக வாழும் இடமாகும். இக்காடுகள் தாழ்நில மழைக்காடுகளிலும் பார்க்க மிக்க குளிர்ச்சியானவையாகும். இதன் காரணமாக, இக்காடுகளில் மேகக் காடுகள் உருவாவதற்குத் தேவையான சூழற் தகைமை காணப்படுகிறது. இலங்கைக்குத் தனிச் சிறப்பான பூக்குந் தாவரங்களில் அரைவாசிக்கும் கூடுதலானவையும் தனிச் சிறப்பான முள்ளந்தண்டுளிகள், இலங்கைக்குத் தனிச் சிறப்பான மரங்கள், புதர்கள், மூலிகைகள் என்பவற்றில் பெரும்பாலானவை இக்காடுகளிலேயே காணக் கிடைக்கின்றன. அவ்வாறே, ஏராளமான ஓர்க்கிட், பாசி, பன்னத் தாவரங்களும் இக்காடுகளில் தனிச் சிறப்பைக் காட்டுகின்றன. இக்காடுகளில் மரங்கள் 10-15மீ உயரம் வளர்கின்றன. இவை இலங்கையின் தாழ்நில மழைக்காடுகளில் காணப்படும் மரங்களைவிட உயரம் மிகக் குறைவானவையாகும். மேலும், இவ்வுயர் நிலக் காடுகள் இலங்கையின் முக்கிய ஆறுகள் பலவற்றிற்கும் நீர்தாங்கு பகுதிகளாகக் காணப்படுகின்றன.



வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை/13

பேராக் என்பது மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்று. இதன் வடக்கே தாய்லாந்தின் யாலா மாநிலம் உள்ளது. பேராக் மாநிலத்திற்கு வட மேற்கே பினாங்கு மாநிலம் உள்ளது. பேராக் மாநிலம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வடக்கே 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்றது. பேராக் மாநிலத்தின் தலைநகர் ஈப்போ. வரலாற்றுச் சான்றுகளின் படி வெள்ளீயம் இங்கு அகழ்ந்து எடுக்கப்பட்டு வந்தது. பேராக் என்றால் மலாய் மொழியில் வெள்ளீயம் என்று பொருள். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் ஈப்போ மிகவும் புகழ் பெற்ற நகரமாக விளங்கியது. அந்தக் காலக் கட்டத்தில் ஆங்கிலேயக் காலனித்துவ ஆட்சியாளர்கள், ஈப்போவை மலேசியாவின் இரண்டாவது தலைநகரமாகத் தரம் மேம்படுத்தி வழி நடத்தினர். வெள்ளீயத்தின் விலை உலகளாவிய அளவில் குறைந்ததன் காரணமாகப் பேராக் மாநிலத்தின் பொருளாதாரம் மிகவும் பாதிப்பு அடைந்தது. அதனால் அதன் பொருளாதார வளர்ச்சியும் தேக்கம் அடைந்தது. ஈப்போவில் வரலாற்றுப் புகழ்மிக்க பல கட்டடங்கள் உள்ளன. அவற்றில் இரயில்வே நிலையம், மாநகர் மன்றம், கிந்தா இந்தியர் விளையாட்டு அரங்கம் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். ஈப்போ நகரத்தின் மக்கள் தொகையில் 70 விழுக்காட்டினர் சீனர்கள் ஆகும். 18 விழுக்காட்டினர் இந்தியர்கள்.



வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை/14

மலாக்கா மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்றும், அதன் மூன்றாவது சிறிய மாநிலமும் ஆகும். இது தீபகற்ப மலேசியாவின் தென் பகுதியில் உள்ளது. இதன் தலைநகரம் மலாக்கா பட்டினம். இந்நகரை 2008 ஆம் ஆண்டில் உலகப் பாரம்பரியத் தளங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்தது. தென் மேற்கே மலாக்கா நீரிணையும் சுமாத்திரா தீவும் இருக்கின்றன. மலாக்கா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாநிலம். 1400ம் ஆண்டு பரமேசுவரா எனும் ஒரு சிற்றரசனால் மலாக்கா நகரம் உருவாக்கம் பெற்றது. இந்தக் காலக் கட்டத்தில் மலாக்கா அரசு மிகவும் வலிமை வாய்ந்த ஒரு பேரரசாக விளங்கியது. தீபகற்ப மலேசியாவின் தென் பகுதி, சுமத்திராவின் வட பகுதி மலாக்காவின் ஆளுமையின் கீழ் வந்தன. 1511 இல் போர்த்துக்கீசர் மலாக்காவைக் கைப்பற்றினர். பின்னர் 1641 இல் டச்சு ஆளுகைக்கும், 1824 இல் பிரித்தானியரின் ஆளுகைக்கும் உள்ளானது. 1948 இல் விடுதலை பெற்று மலாயாக் கூட்டமைப்பில் இணைந்தது. 1400 ஆம் ஆண்டிலிருந்து தொடக்க கால குடியேற்றவாசிகளாக மலாய்க்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மாநிலத்தின் பெரிய சமூகமாகவும் விளங்குகின்றார்கள்.



வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை/15

வெந்நீரூற்று என்பது நீரானது, நீராவியுடன் சேர்ந்து, குறிப்பிட்ட இடைவெளிகளில் கிளர்ந்தெழுந்து, மேல்நோக்கி மிகவும் வேகத்துடன் வெளியேற்றப்படுவதாகும். குறிப்பிட்ட சில நீர்நிலவியல் நிலைமைகளில் மட்டுமே இவ்வாறான வெந்நீரூற்றுகள் காணப்படுவதால் இது ஒரு அரிதான தோற்றப்படாகவே கருதப்படுகிறது. பொதுவாக இவை இயக்கநிலையிலுள்ள எரிமலைகள் இருக்கும் இடங்களில், பாறைக் குழம்புகளுக்கு அண்மையாகவே தோன்றியிருக்கும். நிலநீர் நிலத்தினடியில் கிட்டத்தட்ட 2000 மீட்டர் ஆழத்தில் சூடான பாறைகளைத் தொட்டுச் செல்லும். அப்போது உருவாகும் அழுத்தம் கூடிய கொதிக்கும் நீர் நிலத்துளைகளூடாக சூடான ஆவியுடன் கூடிய நீரை வேகத்துடன் வெளியேற்றும் செயற்பாட்டினால் இவை உருவாகின்றன. வெந்நீரூற்றுப் பகுதியில் ஏற்படும் கனிமப் படிவுகள், அருகில் ஏற்படும் எரிமலை வெடிப்புக்கள், ஏனைய அருகாமையிலுள்ள பீறிட்டு மேலே நீர் பீச்சியடிக்காமல் காணப்படும் வெந்நீரூற்றுக்களின் தாக்கம், மனிதர்களின் குறுக்கீடுகள் போன்றவற்றால், ஒரு வெந்நீரூற்று இடையே நிறுத்தப்படவோ, அல்லது முற்றாக நின்று போகவோ நேரலாம்.



வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை/16

ஈஸ்டர் தீவு என்பது பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கே அமைந்துள்ள பொலினீசியத் தீவாகும். இது சிலியின் ஆளுகைக்கு உட்பட்ட சிறப்பு மண்டலம் ஆகும். ஈஸ்டர் தீவு உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட குடியேற்றத் தீவுகளில் ஒன்றாகும். இது சிலியில் இருந்து 3,600 கிமீ மேற்கே அமைந்துள்ளது. ராப்பானூயி மக்களினால் அமைக்கப்பட்ட மோவாய் (moai) என அழைக்கப்படும் பல நினைவுச் சின்னங்கள் இத்தீவின் சிறப்பாகும். இது உலகப் பாரம்பரியக் களமாகும். மனித முகம் போல் தோற்றமுடைய பிரமாண்டமான நூற்றுக்கணக்கான கற்சிலைகள் தீவெங்கும் காணப்படுகின்றன, உயரம் சராசரியாக 10 மீட்டர், எடை 80 தொன். ஒரு மர்மமான கற்கால நாகரீகத்தின் நினைவாக எஞ்சியிருப்பது மோவய்கள் தவிர ஒன்றுமில்லை. முன்னூறுக்கும் மேற்ப்பட்ட மொவய்கள் பல்வேறு நிலைகளில் இன்றும் காணப்படுகின்றன. மூதாதையர்களின் வாழும் முகங்கள் இதைத்தான் மொவய்கள் குறிக்கின்றது. இந்த மோவய்களுடன் காணப்படுவது மனிதனும் பறவையும் சேர்ந்த ஒரு உருவம் (பறவை மனிதன்).



வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை/17

செரெங்கெட்டி தேசியப் பூங்கா, தான்சானியாவின் செரெங்கெட்டிப் பகுதியில் உள்ள பெரிய தேசியப் பூங்கா ஆகும். இது இங்கு ஆண்டுதோறும் நிகழும் விலங்குகளின் இடப்பெயர்வு தொடர்பில் புகழ் பெற்றது. இந் நிகழ்வின் போது ஒன்றரை மில்லியன் வெண்தாடிக் காட்டுமாடுகளும் (wildebeest), 200,000 வரிக்குதிரைகளும் இடம் பெயர்கின்றன.செரெங்கெட்டி தான்சானியாவின் மிகப் பழைய தேசியப் பூங்காவாகும். இன்றும் இது நாட்டின் சுற்றுலாத்துறையின் முக்கிய அம்சமாக உள்ளது.இப்பூங்கா 14,763 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கியுள்ளது. இதற்குள் புல்வெளிகள், ஐதான மரங்களைக் கொண்ட புற்றரைகள், ஆறுசார்ந்த காடுகள் என்பன அடங்கியுள்ளன. இப்பூங்கா நாட்டின் வட பகுதியில் தான்சானிய - கெனிய எல்லையில் அமைந்துள்ளது. இப் பகுதியில் இது மசாய் மாரா தேசிய ஒதுக்ககத்துடன் தொடர்ச்சியாக உள்ளது. இதன் தென்கிழக்குப் பகுதியில் இங்கோரொங்கோரோ பாதுகாப்புப் பகுதியும், தென்மேற்கில் மாசுவா வேட்டைவிலங்கு ஒதுக்ககமும், மேற்கு எல்லையில் இக்கோரோங்கோ மற்றும் குருமெட்டி வேட்டைவிலங்கு ஒதுக்ககமும் உள்ளன. வடகிழக்கில் லொலியோண்டோ வேட்டைவிலங்குக் கட்டுப்பாட்டுப் பகுதி அமைந்துள்ளது.



வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை/18

கிளிமஞ்சாரோ மலை டான்சானியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான எரிமலை வகையைச் சேர்ந்த மலை. இதுவே ஆப்பிரிக்காக் கண்டத்தில் உள்ள மலைகள் யாவற்றினும் மிக உயர்ந்த மலை. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 5895 மீட்டர் (19,340 அடி) ஆகும். இம்மலையின் மிக உயரமான முகட்டுக்கு 'உகுரு' என்று பெயர். கிளிமஞ்சாரோ மலையில் கிபோ, மாவென்சி, இழ்சிரா ( Kibo, Mawensi, Shira) என மூன்று எரிமலை முகடுகள் உள்ளன. இம்மலை, பல உள்ளடுக்கு கொண்ட எரிமலை வகையைச் சேர்ந்த எரிமலை (பல்லுள்ளடுக்கு எரிமலை, stratovolcano). கிளிமஞ்சாரோ எந்தவொரு மலைத்தொடரையும் சாராத தனிமலை. இமயமலைத் தொடர்களில் உள்ள மலைகளை ஒப்பிடும் பொழுது கிளிமஞ்சாரோவின் உயரம் அதிகம் இல்லை. ஆனால் கிளிமஞ்சாரோதான் உலகில் உள்ள தனிமலைகள் யாவற்றினும் மிக உயரமான மலை ஆகும். இம்மலையில் மிக உயரமான முகட்டு உச்சியாகிய உகுரு கிபோ எரிமலையில் உள்ளது. கிபோ மலையின் உச்சியில் காணப்படும் எரிமலைக் குழி 2.4 கி.மீ (1.5 மைல்) விட்டம் உடையது. உகுரு முகடு ஆப்பிரிக்காவிலேயே உயரமான இடமாகையால், உலகின் ஏழு கொடுமுடிகள் (seven summits) என்று கருதப்படும் உயரான முகடுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.



வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை/19

ஆப்கானித்தான் அல்லது ஆப்கனிசுத்தான் என்னும் நாட்டின் முழுப்பெயர் ஆப்கானித்தான் இசுலாமியக் குடியரசு ஆகும். இந்நாடு நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட நடு ஆசிய நாடாகும். இது சில நேரங்களில் மத்திய கிழக்கு நாடாகவும், தெற்காசியாவின் நாடாகவும் நோக்கப்படுவதுண்டு. மேற்கே, ஈரானை எல்லையாகக் கொண்டுள்ளது. தெற்கிலும் கிழக்கிலும் பாக்கிஸ்தானை எல்லையாக உடையது. வடக்கே துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தாஜிக்ஸ்தான் என்ற நாடுகள் எல்லையாக அமைந்துள்ளன. கிழக்கில் சீனாவை எல்லையாகக் கொண்டுள்ளது. பாகித்தானுடனான இதன் எல்லையின் ஒரு பகுதி இந்தியாவால் உரிமை கோரப்படும் காசுமீரூடாகச் செல்கிறது. இந்தியாவை வர்த்தகம் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களுக்காக மத்திய ஆசியாவுடன் இணைக்கும் பெருவழிப்பாதைகள் ஆப்கானித்தான் வழியேதான் செல்கின்றன. 1747 முதல் 1973 வரை ஆப்கானித்தான் ஒரு முடியாட்சி நாடாகவே இருந்தது; ஆயினும், சில படைத்துறை அதிகாரிகள் இந்நாட்டைக் கைப்பற்றிக் குடியரசாக அறிவித்தனர்.



வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை/20

காவிரி ஆறு இந்தியத் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அது கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது. இதன் நீளம் 800 கிமீ. கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் ரூரல், சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாவும் தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி , தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது. இது பொன்னி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது. கபினி, ஹேமாவதி, ஹாரங்கி , லட்மண தீர்த்தம் , ஆர்க்காவதி , சிம்சா, சொர்ணவதி ஆகியவை கர்நாடக பகுதியில் பாயும் துணை ஆறுகள். பவானி, அமராவதி, நொய்யல் ஆகியன தமிழக பகுதியில் பாயும் துணை ஆறுகள் ஆகும்.



வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை/21

இந்தியா தெற்காசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதியை தன்னுள் அடக்கியுள்ளது. இந்தியப் பெருநிலம் தெற்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே அரபிக் கடல், கிழக்கே வங்காள விரிகுடா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் எல்லை நாடுகளாக மேற்கே பாக்கித்தான், வடக்கே பூட்டான், மக்கள் சீனக் குடியரசு, நேபாளம், கிழக்கே வங்காளதேசம், மியான்மர் ஆகியவை அமைந்துள்ளன. இலங்கை, மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் இந்தியப் பெருங்கடலில் இந்தியப் பெருநிலம், மற்றும் இலட்சத்தீவுகளுக்கு அண்மையில் அமைந்துள்ளன. இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாய்லாந்து, இந்தோனேசியாவின் சுமாத்திரா ஆகியவற்றுடன் அந்தமான் கடலில் கடல் எல்லையைக் கொண்டுள்ளன. பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியா மொத்தம் 7,517 கிமீ (4,700 மைல்) நீளக் கடல் எல்லைக் கொண்டது. நூறு கோடி மக்கள் தொகையைக் கொண்டு உலகின் இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது.



வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை/22

தமிழ்நாடு இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்றாகும். தமிழ்நாடு, தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. இதன் தலைநகராக சென்னை உள்ளது. தமிழ்நாடு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் அமைந்துள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக மேற்கிலும் வடக்கிலும் கேரளா, கருநாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன. புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சுற்றிலும் தமிழ்நாடு மாநிலம் எல்லைகளைக் கொண்டுள்ளது. புவியியல் எல்லைகளாக வடக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நீலமலை வீச்செல்லை, ஆனை மலை வீச்செல்லை, பாலக்காடு கணவாய் ஆகியவையும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தென்கிழக்கில் மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவையும் தெற்கில் இந்தியப் பெருங்கடலும் உள்ளன. தமிழகம் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் சென்னை மாகாணம் என்றும் அழைக்கப்பெற்றது. இதனை தமிழ்நாடு என்று மாற்றக்கோரி போராட்டங்கள் நடைபெற்றன. சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார். பின்னர் மதராசு ஸ்டேட் என்று இருந்த பெயர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.



வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை/23

ஐக்கிய இராச்சியம் (பாரிய பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்), மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். அது காமன்வெல்த் நாடுகள், ஜி8, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ ஆகியவற்றின் ஒரு அங்கமாகும். பொதுவாக ஐக்கிய இராச்சியம் என்றோ UK என்றோ அல்லது (தவறுதலாக) பாரிய பிரிட்டன் என்றோ பிரிட்டன் என்றோ அழைக்கப்படும் ஐக்கிய இராச்சியமானது மொத்தமாக நான்கு பாகங்களைக் கொண்டது. இவற்றில் மூன்று — பண்டைய நாடுகளான இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து ஆகியவை பாரிய பிரிட்டன் தீவில் உள்ளன. நான்காவது பாகமான, அயர்லாந்து தீவிலுள்ள வடக்கு அயர்லாந்து, ஐக்கிய இராச்சியத்தின் ஒரு மாகாணமாகக் கருதப் படுகிறது. வடக்கு அயர்லாந்துக்கும் அயர்லாந்து குடியரசுக்கும் நடுவிலுள்ள எல்லையானது ஐக்கிய இராச்சியத்தின் ஒரே சர்வதேச நில எல்லையாகும். ஐ.இ உலகெங்கும் பற்பல கடல் கடந்த நிலப்பரப்புகளையும்]] கொண்டுள்ளது. பற்பல சார்பு நாடுகளுடன் உறவுகளையும் கொண்டுள்ளது.



வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை/24

இலங்கை இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்து சமுத்திரத்தில் கிட்டத்தட்ட 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் வடகிழக்கே வங்காள விரிகுடா உள்ளது. இது இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து மன்னார் வளைகுடாவினால் துண்டிக்கப்பட்டுள்ள போதும், இதன் அமைவு இந்திய பாறைத்தட்டிலேயே உள்ளது. ஆதாம் பாலம் எனப்படும் நிலத்துண்டம், இலங்கையை இந்தியத் தலைநிலத்துடன் மத்தியகாலம் வரை இணைத்திருந்தது. இது 1480தாம் ஆண்டளவில் ஏற்பட்ட சூறாவளியில் ஊடறுக்கப்பட்டு, தற்போது இடையிடையே சுண்ணாம்புக் கற்பாறை தீவுத்தொடர்களைக் கொண்டவோர் மிகவும் ஆழம் குன்றிய நீர்ப்பரப்பாகவே காணப்படுகிறது. இலங்கை உலகிலுள்ள மிக பழமை வாய்ந்த நிலப்பகுதிகளில் ஒன்றாகும். இந்திய பாறைத்தட்டின் மத்தியில் அமைந்துள்ளதால் எரிமலை, நிலநடுக்கம் போன்றவை இலங்கையை அனேகமாக பாதிப்பதில்லை. இதன் 90% ஆன நிலப்பரப்பு 2 பில்லியன் காலத்துக்கு முந்தைய பாறைதொடர்களில் அமைந்துள்ளது. மேலும் இந்த பாறைதொடர்களின் நடத்திய ஆராச்சிகளின் விளைவாக இந்தியத் துணைக்கண்டம் முன்பு குமரிக்கண்டமெனும் பெரியதொர் தென்நிலக் கண்டத்தின் பாகமாகவிருந்தது அறியப்படுகிறது.



வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை/25

இமயமலை என்பது இந்திய துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். இது ஆசியாவில் அமைந்துள்ளது. இந்நில உலகிலேயே ஒப்பற்ற மிகப்பெரிய, மிகவுயர்ந்த, மாபெரும் மலைத்தொடர் இந்த இமயமலைத் தொடர்தான். இமயமலைத்தொடர் உலகின் சில மிக உயர்ந்த சிகரங்களின் இருப்பிடமாகும். இதில் எவரெஸ்ட் சிகரமும் ஒன்றாகும். எப்பொழுதும் உறைபனி மூடி இருக்கும். இந்திய துணைக்கண்டத்தின் வட எல்லையாக அமைந்துள்ளது. இது மேற்கே காஷ்மீர்-சிங்காங் பகுதி முதல் கிழக்கே திபெத்-அருணாசல பிரதேசம் பகுதி வரை நீண்டு இருக்கிறது. இமயமலைத்தொடரில் நூற்றுக்கு மேற்பட்ட சிகரங்கள் உள்ளன. இதில் சிலவற்றின் உயரம் 7200 மீட்டருக்கு மேலாகும். இதற்கு மாறாக, ஆசியாவுக்கு வெளிய உள்ள மிகப்பெரிய சிகரம் அக்கோன்காகுவா அன்டேஸ் மலைத்தொடரில் உள்ளது. இதன் உயரம் 6961 மீட்டராகும். இமயமலை மூன்று இணையான உப தொடர்களை கொண்டது. இது ஐந்து நாடுகளில் பரவியுள்ளது. அவை பூடான் இந்தியா,நேபாளம்,சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகும். இதில் முதல் மூன்று நாடுகளில் அதிகமான மலைத்தொடர் பரவியுள்ளது. இமயமலை வடக்கே திபத்திய பீடபூமியையும், வடமேற்கே காரகோரம் மற்றும் இந்துக்குஷ் மலைத்தொடரையும் மற்றும் தெற்கே சிந்து-கங்கை சமவெளியையும் எல்லையாக கொண்டுள்ளது. உலகின் சில பெரிய நதிகளான சிந்து, கங்கை, மற்றும் பிரமபுத்திரா உற்பத்தியாகிறது. இந்நதிகளின் மொத்த வடிகால் 60 கோடி மக்களின் இருப்பிடமாகும். இமயமலை தெற்காசிய மக்களின் கலாச்சாரத்தை வடிவமைத்துள்ளது. இமயமலையில் உள்ள பல சிகரங்கள் இந்து மற்றும் புத்த மதங்களில் புனிதமாக கருதப்படுகிறது.



முன்மொழிதல்

இந்த பக்கத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் படிமங்களை இங்கு முன்மொழியவும்.

  1. தற்போது எதுவும் இல்லை.