நகுசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நகுசன் (Nahusha, சமக்கிருதம்: नहुष) என்பவன் அத்தினாபுரத்தை தலைநகராகக்கொண்டு குரு நாட்டை ஆண்ட சந்திர குல அரசன். இவனின் தந்தை பெயர் ஆயு (ஆயுசு). பாட்டன் பெயர் புரூரவன். மகன் பெயர் யதி மற்றும் யயாதி. யதி துறவியானார். யயாதி அரசாண்டார்.

தேவ லோக இந்திர பதவி அடைய வேண்டி நகுசன் நூறு அசுவமேத யாகங்கள் செய்து முடித்த பின்பு, அவனை தேவ லோகத்திற்கு அழைத்துச் செல்ல பல்லக்குடன் சப்த ரிசிகள் வந்தனர். சப்த ரிசிகள் நகுசனை பல்லக்கில் ஏற்றி தேவலோகம் அழைத்து செல்கையில், நகுசன் முனிவர்களைப் பார்த்து, பல்லக்கை வேகமாக தூக்கிச் சென்றால் உங்கள் கால்கள் வலிக்கும் எனவே மெதுவாக செல்லுங்கள் என்று பணிவாக கேட்டுக்கொண்டான். அதற்கு முனிவர்கள், நாங்கள் வழக்கமான வேகத்துடன்தான் பல்லக்கை சுமந்து செல்கிறோம் என்றனர்.

நகுசனின் பல்லாக்கு தேவலோகத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், அங்கு நின்று கொண்டு இருந்த இந்திராணியை பார்த்தவுடன் அவள் மேல் ஏற்பட்ட காம வேட்கை மிகுதியால், விரைவில் இந்திராணியை அடையும் நோக்கில், பல்லக்கை வேகமாக சுமந்து செல்லுங்கள் என்று முனிவர்களை விரைவுப்படுத்தினான். முனிவர்களும் நாங்கள் வழக்கமான வேகத்தில்தான் பல்லாக்கை சுமந்து செல்கிறோம் என்றனர்.

சப்தரிசிகளில் குள்ளமான முனிவரான அகத்தியர் தான் பல்லக்கு மெதுவாக செல்லக்காரணம் என்று கருதிய நகுசன், அகத்திய முனிவரைப் பார்த்து சர்ப்ப, சர்ப்ப என்று (சமசுகிருதம் மொழியில் வேகமாக, வேகமாக என்ற பொருளும் உண்டு) என்று கூவிக்கொண்டு தன் கையில் இருந்த குச்சியால் அகத்திய முனிவரை நகுசன் அடித்தான். இந்திராணியின் மீது கொண்ட மையல் காரணமாக தன்னை அடித்த நகுசனை, பூவுலகத்தில் மலைப்பாம்பாக விழக்கடவாய் என சாபமிட்டார். நகுசன் பூவுலகில் பல்லாண்டுகள் மலைப்பாம்பாக வாழ்ந்து, தவமிருந்து மீண்டும் மனித உருவமடைந்து பின்னர் சொர்க்க லோகத்தை அடைந்தான்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D

இதனையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நகுசன்&oldid=3910997" இலிருந்து மீள்விக்கப்பட்டது