முளைப்பாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முளைப்பாரி

முளைப்பாரி என்னும் அரிய தொழில்நுட்பத்தை இப்போதுள்ள விவசாயிகள் துச்சமாக எண்ணியதன் விளைவுதான் இன்று பல ஆயிரம் பாரம்பரிய விதைகளை இழந்துவிட்டோம். மரபணுமாற்ற அல்லது மானிய விதை என்று வீரியமில்லா சொத்தை விதைகளை வாங்கி, விதை திணிப்பை ஏற்றுக் கொண்டதின் விளைவே விவசாயம் உச்சி முகர்வதாக இல்லை. வருடாவருடம் விவசாயிகள் கொத்துக் கொத்தாக செத்து மடிகிறார்கள். எல்லாவற்றிற்கும் காரணம் முளைப்பாரி தொழில்நுட்பத்தை நாம் கைவிட்டதுதான். விவசாயிகள் பருவம் பார்த்து விவசாயம் செய்து அறுவடை செய்யும் நேரத்தில் முதலில் அடுத்த போகத்திற்கான தரமான விதைகளை தன்னுடைய நிலத்திலேயே தேர்வு செய்ய காலம்காலமாக கடைபிடித்த தொழில்நுட்பம் முளைப்பாரி.

விதைகளை தேர்வு செய்வதிலேயே பல நுட்பங்களை கடைப்பிடிப்பார்கள். நோய்தாக்குதல் இல்லாத தரமான பயிர்களில் இருந்து நன்றாக விளைந்த விதைகளை தேர்வு செய்வார்கள். அவ்வாறு தேர்வு செய்த நெல்,தானிய விதைகளை குதிர்களிலும்,கோட்டை கட்டியும்,சணல் அல்லது துணி சாக்குகளிலும் கொட்டி வைத்து பாதுகாப்பார்கள். அந்த விதைகளை பூச்சி தாக்குதலில் இருந்து காப்பாற்ற ஒவ்வொரு அமாவாசையன்றும் பனி மற்றும் வெயிலில் காய வைத்து, அவற்றுடன் வேம்பு, மஞ்சள், நொச்சி, வசம்பு மற்றும் பல மூலிகைகள் சேர்த்து பாதுகாப்பார்கள். அவ்வாறு பாதுகாத்த விதைகளை அடுத்தப் பருவத்தில் விதைப்பதற்கு முன் விதைகளின் முளைப்புத் திறனை சோதனை செய்த பிறகே விதைப்பது தமிழர்களின் பண்ணெடுங்கால வழக்கமாக இருந்திருக்கிறது. அப்படி நம் முன்னோர்கள் குழுவாக சேர்ந்து கூட்டு முயற்சியாக செய்ததுதான் முளைப்பாரி திருவிழாவாகும்.

பெரும்பாலும் மாசி,பங்குனி,சித்திரை மாதங்களில் கோடை சாகுபடிக்கான விதைகளை முளைப்பாரி சோதனை செய்து கோடை சாகுபடி மேற்கொள்வார்கள். இன்னும் சில பகுதிகளில் விதைக்கும் காலத்திற்கு முன்னர் சோதிப்பார்கள். வளர்பிறை நாட்களில் விதைகளை பாவி, ஒன்பதாம் நாள் ஊர்வலம் எடுத்து சென்று காட்சிப்படுத்துவார்கள். பின்னர் 10 ம் நாள் ஓடும் தண்ணீரில் கரைப்பார்கள். அந்த தொழில்நுட்பம்தான் காலப்போக்கில் மக்களின் பார்வையிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக முளைப்பாரி திருவிழாவாகவும், திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களின்போது பெண்கள் முளைப்பாரி சட்டிக்களை தூக்கி சுற்றும் நிகழ்வாகவும் தமிழர்களால் கொண்டாடப்பட்டது.

கிராமங்களில் உள்ள நாட்டுப்புற பெண் தெய்வங்களுக்கு முளைப்பாரி இட்டு பொங்கல் வைத்து கொண்டாடப்படும். பெண்கள் வளமையின் குறியீடாக திகழ்வதால்,விதை முதல் ஜல்லிக்கட்டு காளை, முளைப்பாரி தேர்வு, பாதுகாப்பு வரை பெண்கள் வசம் தமிழர்களால் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. வளர்பிறை காலங்களில் காப்புக்கட்டி முளைப்பாரிக்கான வேலை தொடங்கப்படும். அதற்கு குறியீடாக வீட்டின் நிலைப்பகுதியில் வேப்ப இலை தோரணம் கட்டி ஊருக்கு, 'இந்த வீட்டில் முளைப்பாரி போட்டுள்ளார்கள்' என்று அறிவிப்பு செய்யபட்டிருக்கிறது. முளைப்பாரி போடுவதற்கு மண்பானை,பனை,மூங்கில் கூடைகள் எடுத்து ஆறு அல்லது குளத்தில் வண்டல் மண் எடுத்து வந்து அதனுடன் மக்கிய எடுக்கிலையை சேர்த்து,முளைப்பாரி சட்டி தயார் செய்யப்படும். பின் பாதுகாத்த விதைகளை சாணப்பால் அல்லது பஞ்சகவ்யம் போன்றவற்றில் ஊற வைத்து, விதை நேர்த்தி செய்திருக்கிறார்கள். பின் அந்த விதையை சணல் சாக்கில் வைக்கோல் சேர்த்து இரவில் முளைக்கட்டப்படும். முளைக்கட்டிய பின் விதைகளை மண் கலவைகள் நிரம்பிய தொட்டியில் விதைப்பார்கள். அதிக சூரிய ஒளிப்படாத இடங்களில் வைக்கப்பட்டு காலை,மாலை நேரங்களில் தண்ணீர் தெளிப்பார்கள். முளைப்பாரி போட்ட வீடுளில் மாமிசம் சமைப்பதில்லை. அனைவரும் சுத்தமாக இருக்க அறிவுறுத்தப்படுவார்கள். அந்நாட்களில் வெளிநபர் யாரையும் வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை.

மேலும் பெண்கள் மாதவிடாய் காலங்கலில் முளைப்பாரியின் அருகில் அனுமதிக்கப்படுவதில்லை. அந்த நேரங்களில் அவர்களின் உடம்பில் இருந்து அதிகப்படியான வெப்பம் மற்றும் தேவையில்லாத கழிவுகள் வெளியேறுவதால், அது பச்சிளம் குழந்தை போல் உள்ள முளைப்பாரியின் வளர்ச்சியை பாதிக்கும் என்று அனுமதிக்காமல் இருந்திருக்கிறார்கள். காலப்போக்கில்தான் அது பெண்களை இழிவுபடுத்தும் தீட்டு என்று திசைமாறிவிட்டது. முளைப்பாரி போட்ட மறுநாளில் இருந்து வீட்டின் முன்பு வட்டமாக நின்று கொண்டு பெண்கள் கும்மியடிப்பார்கள். இந்த கும்மி ஓசை எழுப்புவது போல் முளைப்பாரியும் முளைத்து வெளிவரும் என்று நம்பிக்கை. அதில் இருந்து ஒன்பதாம் நாளில் இவ்வாறு பாதுகாத்த முளைப்பாரியை ஊர் பொது இடத்தில் வைப்பார்கள். அப்போது ஊரின் அனுபவ விவசாயிகள், யாருடைய விதையின் முளைப்பாரி வீரியமாக வளர்ந்துள்ளதோ, அவருடைய முளைப்பாரியை சுட்டிக்காட்டி அனைவருக்கும் சிறந்த விதையாக அடையாளம் காட்டுவார்கள். அந்த விதை அந்த வருடத்தின் ஊரின் செழிப்பை நிர்ணயிக்கும் குறீயீடாக இருக்கும். அப்படி செழிப்பான விதை முளைப்பாரியை செய்து காட்ட ஒவ்வொரு விவசாயியும் அடுத்தடுத்த வருடங்களில் ஆர்வம் காட்டுவர்.

பின் அந்த முளைப்பாரிகளை சுற்றி வட்டமாக பெண்கள் நின்று பாடலுடன் கும்மி கொட்டுவர். இன்னொரு பக்கம், அனைவரும் பார்க்கும் வண்ணம் ஒயிலாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம், புலியாட்டம் என்று பாரம்பரிய கலைகளை சிறுவர்களும், இளைஞர்களும் செய்து காட்டுவர். அந்த முளைப்பாரியை தூக்கியபடி இதே ஆரவாரத்துடன் ஊர் முழுக்க சுற்றி வருவார்கள். பின் ஊரே ஒன்றுகூடி பொங்கல் வைத்து, கொழுக்கட்டை, மாவிளக்கு, துள்ளுமாவு, இளநீர், பானகம், நீர்மோர், வேப்பிலை கரகம் வைத்து பெண் தெய்வத்திற்கு படைப்பர். இந்த சடங்கினால் கோடை காலங்களில் ஏற்படும் அம்மை போன்ற நோய்கள் தொற்றாமல் தடுக்கப்படும். பின்பு பத்தாம் நாளில் இந்த முளைப்பாரியை ஓடும் நீரில் கரைத்து, பயிர் போகும் இடமெல்லாம் செழிக்க பாட்டுடன் வழியனுப்பி வைத்து திருவிழாவை முடித்து வைப்பார்கள். இந்த முளைப்பாரி கரைப்பு நிகழ்வானது விவசாயிகளுக்கு துணை புரியும் நீர்நிலைகளின் அவசியத்தை நினைவில் நிறுத்துவதற்காக நடத்தப்படுகிறது. இப்படி வழிபாடு,திருவிழாவில் மட்டுமட்டுமல்லாது முளைப்பாரி அவசியத்தை அனைவரும் அறிந்தே இருக்க வேண்டும் என்பதற்காக திருமணம் உள்ளிட்ட முக்கிய சுப நிகழ்வுகளிலும் முளைப்பாரி வைபோகத்தை தவறாமல் இடம்பெற செய்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். கோவலன், கண்ணகி திருமணத்தின்போது தானிய முளைப்பாரி கொண்ட குடங்களை பெண்கள் ஏந்தி வந்தததை சிலப்பதிகாரம், 'விரித்தபாலிகை முளைக்குட நிரையினர்' என்று சுட்டுகிறது.

இப்படி,விதைநேர்த்தியின் முக்கிய அங்கமாக இருந்த முளைப்பாரி திருவிழாவையும் யாரும் இப்போது நடத்துவதில்லை. திருமண சுபநிகழ்ச்சிகளிலும் யாரும் முளைப்பாரி சட்டிகளை ஏந்தி சுற்றுவதில்லை. அதனால்தான்,நமது பாரம்பரிய விதைகளை நாம் இழந்து, இன்று ஹைபிரிட் விதைகளை முளைக்க வைத்து, அதை உண்டு ஹைஸ்பீடில் மேலே போகிறோம். நமது முன்னோர்கள் கண்டறிந்த அதிசய அட்சய விதைநேர்த்தி தொழில்நுட்பமான முளைப்பாரி நிகழ்வை மறுபடியும் செயல்படுத்து, பாரம்பரிய விதைகளை மீட்டெடுப்போம். புதையும் நமது விவசாயிகளின் வாழ்வை தெம்பூட்டுவோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முளைப்பாரி&oldid=3073925" இலிருந்து மீள்விக்கப்பட்டது