மலேசியாவின் அங்காசா விண்வெளித் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசியாவின் அங்காசா விண்வெளித் திட்டம் என்பது 2007ஆம் ஆண்டிற்குள், சோயுஸ் வான்கலத்தின் மூலமாக மலேசியர் ஒருவரை விண்வெளிக்கு அனுப்பி வைக்கும் திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தை 2003ஆம் ஆண்டு, பிரதமர் துன் மகாதீர் முகமது அறிவித்தார். இது ரஷ்யாவுக்கும் மலேசியாவிற்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒரு கூட்டு ஒப்பந்தம் ஆகும். மலேசியாவின் விமானப் படைக்கு சுக்கோய் SU-30MKM ரக விமானங்களைக் கொள்முதல் செய்வதன் மூலம் அந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் நால்வரில் இருவருக்குப் பயிற்சிகளை வழங்குவது; அவர்களில் ஒருவரை 2007 அக்டோபர் மாதம் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு அனுப்புவது; அவற்றுக்கான செலவுகளை ரஷ்ய அரசாங்கம் ஏற்றுக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது. பொருத்தமான விண்வெளி வீரரைத் தேர்வு செய்யும் பொறுப்புகள், மலேசிய தேசிய விண்வெளிக் கழகம், மலேசிய அறிவியல், தொழில்நுட்ப புத்தாக்க அமைச்சு ஆகிய இரு அமைப்புகளிடம் வழங்கப்பட்டன.

இந்தத் திட்டத்தின் வழியாக, முதன்முதலாக விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் ஷேயிக் முஷபர் சுக்கோர். இவர் 2007 அக்டோபர் 10ஆம் தேதி ரஷ்யாவில் இருந்து விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவர் பத்து நாட்கள் விண்வெளியில் இருந்தார். எஸ். வனஜா எனும் தமிழ்ப் பெண்ணும், இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற முதல் மலேசியப் பெண்மணி ஆகும்.