மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்
மலேசிய நாடாளுகன்றம்
மலேசியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு;
தடுப்புக் காவலில் வைத்தல்;
அடிபணியச் செய்வதைத் தடுத்தல்; மலேசியாவின் குறிப்பிட்ட பகுதிகளில் நபர்கள் மற்றும் சொத்துக்களுக்கு எதிரான வன்முறையை ஒடுக்குதல்; மற்றும் அவை தொடர்பான விசயங்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கான சட்டம்.
சான்றுAct 82
நிலப்பரப்பு எல்லைமலேசியா
இயற்றியதுமக்களவை (மலேசியா)
இயற்றப்பட்ட தேதி22 சூன் 1960
இயற்றியதுமேலவை (மலேசியா)
சட்ட வரலாறு
சட்ட முன்வரைவுஉள்நாட்டு பாதுகாப்பு மசோதா 1960
(Internal Security Bill 1960)
அறிமுகப்படுத்தியதுஅப்துல் ரசாக் உசேன், மலேசிய தற்காப்பு அமைச்சர்

மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (இசா) என்பது (மலாய்: Akta Keselamatan Dalam Negeri, ஆங்கிலம்: Internal Security Act) மலேசியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தடுப்புக் காவல் சட்டம் ஆகும்.[1] 1957ஆம் ஆண்டு, பிரித்தானியர்களிடம் இருந்து மலாயா சுதந்திரம் பெற்றதும் இந்தச் சட்டம் இயற்றப்பட்டது. எவ்விதக் குற்றச்சாட்டுகளும் இல்லாமல், தனிமனிதர் ஒருவரைச் சந்தேகத்தின் பேரில், விசாரணை இல்லாமல் இரண்டு ஆண்டுகள் தடுத்து வைக்க இந்தச் சட்டம் வகை செய்கிறது.[2]

இந்தச் சட்டத்தின் கீழ், தொழில்சங்கவாதிகள், மாணவர்த் தலைவர்கள், அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், மனித உரிமைப் போராட்டவாதிகள் போன்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மைய காலங்களில் வலைப் பதிவாளர்களும் ஊடகவியலாளர்களும் தடுத்து வைக்கப்பட்டனர்.[3] 2013 ஆம் ஆண்டு ஜனவரி 31 வரை, 10,883 பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.[4] இவர்களில் பெரும்பாலோர் விடுவிக்கப்பட்டு விட்டனர்.

இந்த உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக, வேறு இரு சட்டங்கள் கொண்டு வரப்படும் என்று பிரதமர் நஜீப் துன் ரசாக் 2011 செப்டம்பர் 15ஆம் தேதி அறிவித்தார்.[5] குற்றச் செயல் பாதுகாப்பு (சிறப்பு காவல் நடவடிக்கைகள்) சட்டம் 2012 எனும் பெயரில் புதிய சட்டம் உருவாக்கப்பட்டு, நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றம் கண்டது. 2012 ஜூன் 18இல் மாமன்னரின் சம்மதத்திற்காகத் தாக்கலும் செய்யப்பட்டது.[6] ஆனால், இது நாள் வரையில் அந்தப் புதியச் சட்டம் அமல்படுத்தப்படவில்லை. அதன் தொடர்பாக, மலேசிய உள்துறை அமைச்சரும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.[7]

வரலாறு[தொகு]

தடுப்புக் காவல் முறையை 1948இல் மலாயாவை ஆட்சி செய்த பிரித்தானியர்கள் நடைமுறைக்கு கொண்டு வந்தனர்.[8] மலாயா அவசரகாலத்தின் போது, மலாயா கம்யூனிஸ்டு கட்சியினர் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிகளை மேற்கொண்டு வந்தனர்.[9] அவர்களை ஒடுக்குவதற்காக, தடுப்புக் காவல் முறை மலாயாவில் அமலுக்கு வந்தது.[10] அன்றைய காலத்தில், அதாவது 1948இல், தடுப்புக் காவல் முறை ஓர் அவசரகாலச் சட்டமாகப் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. அந்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு மூல காரணமாக இருந்தவர் சர். எட்வர்ட் ஜெண்ட் எனும் பிரித்தானிய உயர் ஆணையர் ஆகும்.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் ஒருவரைத் தற்காலிகமாக, ஓர் ஆண்டு காலத்திற்குத் தடுப்பு காவலில் வைக்க முடியும். வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதே அந்தச் சட்டத்தின் தலையாய நோக்கமாக இருந்தது. 1960ஆம் ஆண்டு மலாயாவில் அவசர காலம் முடிவுக்கு வந்தது. 1948ஆம் ஆண்டு மலாயா அவசரகாலச் சட்டமும் நீக்கம் செய்யப்பட்டது.

அனைத்துலக மனித உரிமைக் கழகம்[தொகு]

ஆனால், மலாயா அவசரகாலச் சட்டத்திற்குப் பதிலாக, 1960ஆம் ஆண்டு மலேசிய அரசியலமைப்பின் 149வது விதியின்படி, புதிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இருப்பினும், மலாயா அவசரகாலச் சட்டத்திற்கு இணையான தடுப்புக் காவல் முறை மட்டும், இதுநாள் வரையிலும் தக்க வைக்கப்பட்டுள்ளது. அனைத்துலக மனித உரிமைக் கழகத்தின் கண்டனத்திற்கும் உள்ளாகி வருகிறது.[11]

மலாயாவின் அவசரகாலத்தின் போதும், அதன் பின்னரும் கம்யூனிச செயல்பாடுகளை முற்றிலும் தவிர்ப்பதே, உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்று வலியுறுத்தப்பட்டது. உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் மிகைப்படியான அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படமாட்டாது என்று மலேசியாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் உறுதியாகவும் திடமாகவும் வாக்குறுதி அளித்து இருந்தார்.[12]

கமுந்திங் தடுப்பு மையம்[தொகு]

அரசியல்வாதிகள் பலர் கைது செய்யப்பட்டு கமுந்திங் தடுப்பு மையம், சுங்கை ரெங்கம் தடுப்பு முகாம்களில் காவலில் வைக்கப்பட்டனர். இந்தக் கைது நடவடிக்கைகள், பொதுமக்களிடையே பலமான அதிருப்திகளையும், மனக்கசப்புகளையும் ஏற்படுத்தி வந்தன. ஆளும் கட்சியின் அரசியல் நிலைத் தன்மையில் குறை காண்பவர்களின் மீது அந்தச் சட்டம் எகிறிப் பாய்ந்தது.[13]

மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம், ஒரு நடுநிலையான மக்களாட்சிக்கு உகந்தது அல்ல என்றும், அது தவறாகப் பயன்படுத்தப் படுகிறது என்றும், பரவலான அதிருப்திகள், நெடுநாட்களாகப் பொதுமக்களிடம் நீறு பூத்த நெருப்புகளாய்க் கனன்று வருகின்றன.[14]

சட்டத்தில் திருத்தம்[தொகு]

மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்தி அமைப்பதில், அரசாங்கம் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக, மலேசியாவின் உள்துறை அமைச்சராக இருக்கும் டத்தோ ஸ்ரீ இசாமுடின் உசேன் கூறியுள்ளார். அந்தத் திருத்தகத்தில் ஐந்து முக்கிய கூறுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
அந்த ஐந்து கூறுகள்:

  • தடுப்புக் காவலின் கால அளவு
  • காவலில் வைக்கப்பட்டுள்ளோருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் வழங்கப்படும் உரிமைகளும் சிகிச்சைகளும்
  • உள்துறை அமைச்சருக்கான அதிகாரங்கள்
  • அரசியல் காரணங்களுக்காக உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் பயன்பாடு
  • விசாரணயின்றி தடுத்து வைக்கப்படுவது[15]

உள்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை[தொகு]

உள்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைப்புகள்:

  • மலேசிய அரசுத் தலைமை வழக்குரைஞர்க் கழகம்
  • மலேசிய வழக்குரைஞர்கள் மன்றம்
  • பாரிசான் நேசனல் ஆதரவாளர்கள் மன்றம்
  • மலேசிய மகளிர்க் கழகங்களின் தேசிய மன்றம்
  • தேசியக் குடியியல் பணியகம்

அந்தப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் அரசாங்கம் அது தொடர்பாக ஓர் அறிக்கையை வெளியிட்டது. விசாரணயின்றி தடுத்து வைக்கப்படும் முறை அகற்றப்பட மாட்டாது என்று அறிவித்தது.[16]

மேற்கோள்கள்[தொகு]

  1. ISA took effect on August 1, 1960 with the solemn promise that it would only be used solely against communists.
  2. "The legislation allows for the detention of any person without trial for any number of consecutive periods not exceeding 2 years each". Archived from the original on 2013-01-13. பார்க்கப்பட்ட நாள் 2013-02-07.
  3. Abolish ISA next week or face protest.
  4. its inception in the 1960, Nazri said a total of 10,883 people had been detained under the ISA.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. The Internal Security Act (ISA) 1960 will be abolished and two new laws will be introduced to safeguard peace and order, Prime Minister Datuk Seri Najib Tun Razak said.
  6. "The man behind this dark episode in our history was none other than Tun Dr Mahathir Mohamad, the fourth Prime Minister of Malaysia". Archived from the original on 2013-11-08. பார்க்கப்பட்ட நாள் 2013-02-07.
  7. "SECURITY OFFENCES (SPECIAL MEASURES) ACT 2012". Archived from the original on 2016-04-27. பார்க்கப்பட்ட நாள் 2013-02-07.
  8. "The communists started to realise that their policy of terrorizing supplies from the local population was just breeding hostility". Archived from the original on 2011-12-25. பார்க்கப்பட்ட நாள் 2013-02-07.
  9. The Emergency officially ended 31 July 1960.[தொடர்பிழந்த இணைப்பு]
  10. "The Malayan Emergency was declared on 18 June 1948, after three estate managers were murdered in Perak, northern Malaya". Archived from the original on 3 மே 2008. பார்க்கப்பட்ட நாள் 7 பிப்ரவரி 2013. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  11. The Article 149 Special Powers Against Subversion permit the violation of fundamental rights contained in Articles 5, 9, 10, 13.
  12. List of known detainees as at 17 July 2010.
  13. "The ISA has been consistently used against people who criticise the government and defend human rights". Archived from the original on 2013-02-19. பார்க்கப்பட்ட நாள் 2013-02-19.
  14. "The Internal Security Act is like a guillotine that is continuously hanging on the heads of the citizens of Malaysia. - Hishammudin Rais, Ex-ISA Detainee, Civil Rights activist". Archived from the original on 2016-03-20. பார்க்கப்பட்ட நாள் 2013-02-08.
  15. Changes to ISA should satisfy majority, says Hisham.
  16. The new law to replace the Internal Security Act 1960, which will be repealed, will still provide for detention without trial, said Home Minister Datuk Seri Hishammuddin Hussein.