திருமுருகாற்றுப்படை பழைய உரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருமுருகாற்றுப்படை பழைய உரை என்பது திருமுருகாற்றுப்படை நூலுக்கு அமைந்த பழமையான உரைகள் ஐந்தனுள் ஒன்று. பத்துப்பாட்டு முழுமைக்கும் எழுதப்பட்ட நச்சினார்க்கினியர் உரை, பரிப்பெருமாள், பரிமேலழகர், பரிதியார், பழைய உரையாசிரியர் – ஆகியோரின் உரைகள் அந்த ஐந்து உரைகள். [1]

இவற்றுள் பழைய உரை வையாபுரிப்பிள்ளை விரிவான ஆராய்ச்சி முன்னுரையுடன் செந்தமிழ் இதழில் 1943-ல் வெளிவந்துள்ளது.

14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நச்சினார்கினியார் இவ்வுரையை மேற்கோள் காட்டிவிளக்குவதால் இதன் காலம் 13 ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளப்படுகிறது.

இந்தப் பழைய உரையின் சிறப்புக்களில் ஒன்று.

முருகன் குன்றுதோறும் ஆடுகிறான்.

மென் தோள் பல் பிணை தழீஇ, தலைத்தந்து,
குன்றுதோறு ஆடலும் நின்ற தன் பண்பே [2]

குறத்தியரின் தோளைப் பிணையாகத் தழுவிக்கொண்டு தலைத்தந்து குன்றுதோறும் ஆடுகிறான். இதில் வரும் ‘தலைத்தந்து’ என்னும் தொடரை இவ்வுரை சிறப்பாக விளக்குகிறது.

  • முதற்கை கொடுத்து [3]
  • முதற்கை கொடுக்கும் [4]
  • கூத்திடத்தே தலைக்கை கொடுத்தல் தொழிலைக் கொள்கையினாலே [5]
  • ”அவர்கள்(மகளிர்) களவு அறிந்து அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து” என்பது இங்குக் குறிப்பிடப்படும் திருமுருகாற்றுப்படை பழைய உரை. காதல் கொள்ளும் மகளிர்க்கு முருகன் அவர்களுடன் சேர்ந்து துணங்கை ஆடி அடைக்கலம் தருகிறான் என்பது இவ்வுரையின் விளக்கம்.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு[தொகு]

  1. இந்த ஐந்து உரைகளையும் தொகுத்துக் காசிமடம் வெளியிட்டுள்ளது.
  2. திருமுருகாற்றுப்படை 216-217
  3. நச்சினார்க்கினியர் உரை
  4. புறநானூற்றுப் பழைய உரை (“தலைக்கை தரூஉந்து” – புறம் 24)
  5. (கலித்தொகை 73-ல் வரும் “துணங்கையுள் தலைக்கொள” என்னும் தொடருக்கு நச்சினார்க்கினியர் தரும் விளக்கம்.