அறவண அடிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறவண அடிகள் மணிமேகலை காப்பியத்தில் வரும் பௌத்த துறவி. கோவலன், மாதவி ஆகியோரின் மகள் மணிமேகலைக்குப் புத்தநெறியைப் புகட்டியவர். புகார் நகரத்தில் வாழ்ந்தவர். புகார் நகரத்தைக் கடல் கொண்ட பின் கச்சிமாநகருக்கு வந்து அறமுறைத்தவர்.

  • மறவணம் நீத்த மாண்பால் இவரை அறவண அடிகள் என்றனர். [1] [2]
  • உடலுக்குப் பாரமாக ஒட்டிக்கொண்டுள்ள பத்துத் தீவினைகளைக் களையவேண்டும் என மணிமேகலைக்குப் புகட்டியவர்.
  • நரைத்த முடி, நடுக்கமில்லா மூதுரை வழங்கும் நாவை உடையவர் அடிகள்.[3]
  • மாதவி தன் மகள் மணிமேகலையைப் பத்தினித்தெய்வம் கண்ணகியின் மகள் என்று தன் தோழி வயந்தமாலைக்குக் கூறி, அவளை அறவண அடிகளிடம் அடைக்கலப்படுத்துகிறாள். அப்போது பிறந்தவர்க்குப் பெருந்துன்பம், பிறவாதவர்க்குப் பேரின்பம், பற்றால் பிறவி வரும் என்று அடிகள் அருளுரை வழங்குகிறார். [4]
  • மணிமேகலைக்கு அமுதசுரபி வழங்கிய தீவதிலகை ‘தீவினை அறுக்கும் செய்தவப் பயிற்சி’யை அறவண அடிகளிடம் பெறுமாறு ஆற்றுப்படுத்துகிறது.[5]
  • புகார் நகரத்தைப் கடல் கொண்டபின் துறவு மேற்கொண்டிருந்த மாதவியும், அறவண அடிகளும் காஞ்சிபுரத்துக்கு வந்துவிட்டனர். [6]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. மறவணம் நீத்த மாசுஅறு கேள்வி
    அறவண வடிகள் அடிமிசை வீழ்ந்து (மணிமேகலை 2 அடி 60-61)
  2. அல்லவை கடிந்த அறவண வடிகளும் மணிமேகலை 28 அடி 236
  3. நரைமுதிர் யாக்கை நடுங்கா நாவின்
    உரைமூ தாளன் (மணிமேகலை 12 அடி 3-4)
  4. பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
    பிறவார் உறுவது பெரும்பேர் இன்பம்
    பற்றின் வருவது முன்னது பின்னது
    அற்றோர் உறுவது அறிகென்று அருளி (மணிமேகலை 2 அடி 64-67)
  5. தீவினை அறுக்கும் செய்தவம் நுமக்குஈங்கு
    அறவண வடிகள் தம்பால் பெறுமின் (மணிமேகலை 11 139-140)
  6. மாநகர் கடல்கொள
    அறவண ரடிகளும் தாயரும் ஆங்குவிட்டு
    இறவாது இப்பதிப் புகுந்தது கேட்டதும் (மணிமேகலை 28 அடி 80-81)

வெளி இணைப்புகள்[தொகு]

தமிழின் முதல் தருக்கவாதி ‘அறவண அடிகள்’ உங்கள் நூலகம் - ஜூலை 2017

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறவண_அடிகள்&oldid=3285979" இலிருந்து மீள்விக்கப்பட்டது