இந்தியாவில் இட ஒதுக்கீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இட ஒதுக்கீடு என்பது சமுதாயத்தில் அழுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பதவிகள் என பல்வேறு துறைகளில், இடங்களை அவர்களின் பாதிப்பு நிலை அல்லது பங்கு பெற்றுள்ள நிலை , மக்கள் தொகைக்கேற்ப ஒதுக்கி அவர்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை பெறச் செய்து, காலப்போக்கில் சமுதாய சமத்துவத்தை ஏற்படுத்தும் திட்டமாகும். அப்படி அழுத்தப்பட்ட மக்கள் இனம், சாதி, சமூகநிலை, மொழி, பாலினம், வாழிடம், பொருளாதாரச் சூழல், மாற்றுத்திறன் போன்றவற்றில், எந்தக் காரணியால் பாதிக்கப்பட்டார்களோ அதே காரணியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக பெண்கள் பல சமூகங்களில் படிப்பு, வெளி வேலை இல்லாமல் வீட்டு வேலையே செய்து வந்தனர். அவர்கள் பங்கினை உறுதி செய்ய வேலைவாய்ப்பு , அரசியல் பதவிகளில் குறிப்பிட்ட அளவு இடங்கள் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டது.இந்தியாவில் பல சாதிகளுக்கு படிப்பு உரிமைகள், சொத்து உரிமை மறுக்கப்பட்டு, சமூகரீதியில் தாழ்நிலையில் அழுத்தப்பட்டனர். பாதிக்கப்பட்ட வகுப்பினருக்கு பாதிக்கப்பட்ட அளவுக்கேற்பவும், மக்கள் தொகைக்கேற்பவும், உரிமைகளும், வாய்ப்புகளும் கிடைக்க இட ஒதுக்கீடு பயன்படுகிறது. வெள்ளையின, கருப்பின ஏற்றத்தாழ்வால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இன அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இட ஒதுக்கீடு பாதிக்கப்பட்டவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தினாலும் அதன் அடிப்படை நோக்கம் வறுமை ஒழிப்பு அல்ல. அனைத்து வகுப்பு மக்களையும் எந்தக் காரணத்தால் பாதிக்கப்பட்டார்களோ அதே காரணத்தைக் கொண்டு பிரதிநிதித்துவப்படுத்துவதே இட ஒதுக்கீட்டின் முதன்மை நோக்கம் ஆகும்.

இட ஒதுக்கீட்டுடன் தொடர்புடைய கோட்பாடுகள்[தொகு]

நடைமுறை(Reality) அல்லது சமநிலையின்மை (Unequality), சமநீதி(Equality), சமூக நீதி(Equity), நீதி(Justice) ஆகியவை இட ஒதுக்கீடு தொடர்பான கோட்பாடுகள் ஆகும். இந்த நிலைகளை தொடர்புபடுத்தியே இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படுகிறது.

நடைமுறை(Reality) அல்லது சமநிலையின்மை (Unequality),

நடைமுறையில் உள்ள நிலையைக் குறிக்கிறது.இதுவே அடிப்படை நிலை அல்லது முதலாவது நிலையாகும். இந்த நிலையில் மக்கள் ஏற்றத்தாழ்வுடன் இருப்பர். வாய்ப்பு கிடைத்தவர்கள், அல்லது ஆதிக்கம் செலுத்துபவர்கள் உயர்ந்த நிலையிலும் மேலும் மேலும் வாய்ப்புகளை பெற்று தங்களது ஆதிக்கத்தை தக்க வைப்பர். வாய்ப்பு கிடைக்காதவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் தாழ்ந்த நிலையில் இருப்பர். வாய்ப்புகள் கிடைப்பது தடுக்கப்படுவதாலும் ஆதிக்கத்தாலும் அழுத்தப்பட்ட நிலையிலேயே இருப்பர். இந்நிலையில் பின்பற்றப்படும் நடைமுறைகளே ஒரு சமூகத்தில் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது.

சமநீதி(Equality)

இது ஆதிக்கம் செலுத்துபவர், ஓரளவு பாதிக்கப்பட்டவர், மிகவும் பாதிக்கப்பட்டவர் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் சமமான வாய்ப்பையே தரும் முறையாகும். அனைவருக்கும் ஒரே விதமான வாய்ப்புகளே கிடைப்பதால் உயர்ந்த நிலையில் மேலும் வாய்ப்புகளை பெற்று ஆதிக்கத்தை தொடர்கிறார். இடைநிலையில் உள்ளவர்கள் ஓரளவு வாய்ப்பு பெற்றாலும் தேவைப்படும் வாய்ப்புக்கும் குறைவாகவே பெறுவர்.எனவே அதிக வாய்ப்பு பெற்றவர்களுக்கு சமமான நிலையை அடைய முடிவதில்லை.

அடிநிலையில் உள்ளவர்கள் தேவைப்படும் வாய்ப்புக்கும் மிகமிகக் குறைவாகவே பெறுவதால் வழங்கப்பட்ட வாய்ப்பு பலனளிப்பதில்லை. ஆதிக்கம் செலுத்துவோருடன், இடைநிலையில் உள்ளலர்களுடன் போட்டியிட்டு தனக்கான பங்கை அடைவது இயலாததாகிறது. ஏற்றத்தாழ்வு மறைவதில்லை அப்படியே நீடிக்கும். வாய்ப்பு சம அளவில் கிடைத்தாலும் பலன்கள் சம அளவில் கிடைக்காது. இது முதலாவது நிலையை விட சற்றே சிறந்த நிலையாகும்.

சமூக நீதி(Equity)

இம்முறை அதிகம் வாய்ப்பு பெற்றவர்களுக்கு குறைந்தளவு வாய்ப்பைத் தரும் அல்லது வாய்ப்பு வழங்கப்படுவதில்லை, ஓரளவு வாய்ப்பு பெற்றவர்களுக்கு சற்றே அதிக வாய்ப்பையும், வாய்ப்பு கிடைக்காமல் அழுத்தப்பட்ட நிலையில் இருப்போருக்கு அதிக வாய்ப்பையும் தருகிறது. எனவே சமூகத்தில் ஏற்றத்தாழ்வு படிப்படியாக குறைகிறது. இந்த வாய்ப்பு வழங்கும் முறைகளில் ஒன்றுதான் இட ஒதுக்கீடு ஆகும். ஏற்றத்தாழ்வை உருவாக்கும் காரணிகள் அகற்றப்படும்வரை இந்த முறையே ஏற்றத்தாழ்வை குறைக்க உதவுகிறது.

நீதி(Justice)

இது ஏற்றத்தாழ்வை உருவாக்கும் காரணிகளையே அகற்றுவதாகும். இந்த நிலையை அடைவதன் மூலம் சமநீதி,சமூகநீதி செயல்முறைகள் தானாகவே தேவையற்றுப் போகும்.சமூகம் சமத்துவ நிலையை அடையும்


இந்திய அரசின் இட ஒதுக்கீடு[தொகு]

இந்திய அரசால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டின் சதவீதம். இது 1931 மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களின் படி கணக்கிடப்பட்டுள்ளது.

Indian_Union_Government_reservation_percentage

பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு[தொகு]

  • கல்வி நிலையங்களிலும், அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் வேலை வாய்ப்பில் பட்டியல் சமூகத்தினர் மற்றும் பட்டியல் பழங்குடிகளுக்கு (SC & ST) முறையே 15 % மற்றும் 7.5 % இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இவர்களுக்கு துணைப் பிரிவுகளாக பிரித்து இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மத்திய அரசில் பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியினர் என்ற பெயர்களில் இட ஒதுக்கீ வழங்கப்படுகிறது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு[தொகு]

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு (OBC) 27.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநில அரசுகளில் BC,MBC,BC-A, BC-B, OBC-A, OBC-B, OBC எனப் பல்வேறு துணைப்பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மத்திய அரசில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எனக் குறிப்பிடுகின்றனர்.

குடும்பத்தின் ஆண்டு வருமானம் 8,00,000 ₹க்கு குறைவாக இருப்பவர்களுக்கு மட்டுமே OBC இட ஒதுக்கீடு வழங்கப்படுறது.இவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு-கிரீமிலேயர் அல்லாதவர் (OBC-Non Creamy layer) எனக் குறிப்பிடப்படுகின்றனர். குடும்பத்தின் ஆண்டு வருமானம் 8,00,000 ₹க்கு அதிகமாக இருப்பவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு கிடையாது இவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு-கிரீமிலேயர் (OBC-Creamy layer) எனக் குறிப்பிடப்படுகின்றனர்.இந்த வருமான வரம்பானது அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகிறது.

உயர் சாதி ஏழைகள்(FC-EWS)[தொகு]

அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள 15 மற்றும் 16-இன் கீழ் சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க முடியும். பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது. எனவே அரசு வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வி நிறுவன சேர்க்கையில் உயர் சாதிகளின் ஏழைகளுக்கு 10% சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் வகையில் திருத்தம் செய்ய 124-வது அரசியலமைப்புச் திருத்தச் சட்ட மசோதா, சனவரி, 2019-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.[1]பொதுப் பிரிவினரில் ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு சட்டம் 14 சனவரி 2019 முதல் நடைமுறைக்கு வந்தது.[2]

இச்சட்டத் திருத்தத்தின் படி உயர் சாதி பிராமணர், ராஜபத்திரர் (தாகுர்), ஜாட், மராத்தா, பூமிஹர், ஜெயின், நகரத்தார் போன்ற வர்த்தகச் சமூத்தைச் சேர்ந்த ஏழைகள் பயனடைவர். உயர் சாதியினரில் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் குறைவான வருமானம் அல்லது 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயன்பெற முடியும்.

பிற பிரிவுகளின் கீழ் இட ஒதுக்கீடு பெறும் ஜாதிகளைச் சேர்ந்த ஏழைகள் அதாவது SC,ST,OBC பிரிவு ஏழைகள் இந்தப் பிரிவில் பயன்பெற இயலாது

மாநில அரசுகளில் இடஒதுக்கீடு[தொகு]

[3]

  • சில மாநில அரசுகள் பெண்களுக்கு 30 முதல் 33% வரை வேலை வாய்ப்பிலும், கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.[4]

தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு[தொகு]

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் பொதுப் பிரிவினருக்கு (OC) 31%, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (BC) 26.5%, பிற்படுத்தப்பட்ட இசுலாமியருக்கு (BCM) 3.5% உள் இடஒதுக்கீடும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (MBC) 20%, பட்டியல் சாதியினருக்கு (SC) 15%, பட்டியல் சாதிகளில் ஒன்றான அருந்ததியருக்கு (SCA 3% உள் இடஒதுக்கீடும், பட்டியல் பழங்குடியினருக்கு (ST) 1% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.[5]

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் இட ஒதுக்கீடு[தொகு]

இட ஒதுக்கீடும் பங்கு ஒதுக்கீடும் (Reservation and Quoto)[தொகு]

இட ஒதுக்கீடு (Reservation) என்பது அந்தந்த பிரிவினை சார்ந்த அனைவருக்கும் குறிப்பிட்ட நோக்கத்திற்காக இடங்களை ஒதுக்கி வைத்து வழங்கப்படுவதாகும். பங்கு ஒதுக்கீடு(Quoto) என்பது ஒரு பொதுவான வகையினருக்கு குறிப்பிட்ட அளவு இடங்களை ஒதுக்குவதாகும். இதனை ஒரு உள் இடஒதுக்கீடு எனலாம். எடுத்துக்காட்டாக SC,ST, OBC-NCL, FC-EWS இட ஒதுக்கீட்டில் அந்தந்தப் பிரிவினை சார்ந்த அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும். பெண்கள் பங்கு ஒதுக்கீட்டில் (Quoto) பெண்களுக்கு என்று தனியே பங்கு வழங்கப்படும்.

முன்னாள் படைவீரர்கள் (Ex-Servicemen') : முன்னாள் படைவீரர்களுக்கு இந்திய அரசு மற்றும் இந்திய அரசு சார்ந்த பொதுத் துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பில் 10% இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.[6] [7][8][9]

மாற்றுத் திறனாளிகள்: தேவையான கல்வித்தகுதி உடைய மாற்றுத் திறனாளிகளுக்கு, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்பில் 4% இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.[10][11]

இட ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சைகளும், விளக்கங்களும்[தொகு]

இட ஒதுக்கீடு ஆதரவாளர்கள் இட ஒதுக்கீடுதான் சமுதாயத்தின் கடந்தகால கடுமையான மேடுபள்ளங்களையும், காலங்காலமாகப் பல குடிகளுக்கு இழைத்த கொடுமைகளையும் ஈடு செய்யும் வழி என்கிறார்கள். அதனால் பல்வேறு மனிதர்கள் -எல்லா சாதி, இனம், பால், தாய்மொழி, இருப்பிடம், கலாசாரம், தேசியம் சார்ந்தவர்கள்- எல்லாத் தொழில்களிலும், கல்விக்கூடங்களிலும் இருக்கும் நிலை இந்த கொள்கையை நியாயமாக்குகிறது.

இட ஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள், இட ஒதுக்கீடு ஏற்கெனவே உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் ஆதிக்கம் செய்வதை தடுப்பதாலும், அளவுக்கு அதிகமான பிரதிநிதித்துவத்தை கட்டுப்படுத்துவதாலும் அதனை பல்வேறு காரணங்களைச் சொல்லி எதிர்க்கின்றனர்.

இதனையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மக்களவையில் மசோதா நிறைவேற்றம்
  2. அமலுக்கு வந்தது 10% இட ஒதுக்கீடு: பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்குப் பொருந்தும்
  3. 10 சதவீத இட ஒதுக்கீடு மாநில அரசுகளே முடிவு எடுக்கலாம்
  4. 33% RESERVATION FOR WOMEN IN ALL STATE GOVERNMENT JOBS
  5. தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு
  6. Ex-Servicemen given extended reservation benefit in civil side employment
  7. Ex-Servicemen
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-04. பார்க்கப்பட்ட நாள் 2015-08-26.
  9. மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீடு மத்திய அரசுக்கு கோர்ட் பாராட்டு
  10. CONSOLIDATED INSTRUCTIONS OF DOP&T ON 3% RESERVATION
  11. Central Government Schemes