ஐந்திணை மஞ்சிகன் சிறுநிகண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்நூல் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணைகளுக்கு உரியத் தாவரங்களைப் பற்றிக் கூறும் சிறு நூல் ஆகும். ஆசிரியர்பெயர், ஐந்திணைச் சார்பு, அளவு, சிறுமை ஆகியவற்றால், இந்நூலுக்கு ஐந்திணை மஞ்சிகன் சிறுநிகண்டு எனப்பெயர் அமைந்தது. மஞ்சிகன் என்பவரால் எழுதப்பட்டது ஆகும். இந்நிகண்டு மாகறல் தி.பொன்னுசாமி முதலியாரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது.இவர் தமது முன்னுரையில், மாகறல் கார்த்திகேய முதலியாரிடமிருந்து இந்நிகண்டு கிடைத்ததாகக் கூறியுள்ளார்.

அமைப்பு[தொகு]

பொதுவாக நிகண்டுகள் அனைத்திலும் கடவுள் வாழ்த்து, குரு வாழ்த்து, அவையடக்கம் போன்றவற்றால் ஏதாவது ஒன்று நூலின் தொடக்கத்தில் அமைந்திருக்கும். இந்நிகண்டில் இவைகளில் ஒன்றும் காணப்படவில்லை. பெருநிகண்டு என்னும் நிகண்டு ஒன்றின், தொடர்ச்சியாக இந்நூல் அமைந்திருக்கலாமென்றுக் கருதப்படுகிறது.

இந்நூல், எளிதில் மனனம் செய்வதற்கு ஏற்றவாறு 122 ஓரடி நூற்பாக்களைக் கொண்டுள்ளது. மரங்களின் பெயர்களையும், பிற தாவரங்களின் பெயர்களையும் கூறுகிறது. ஒவ்வொரு நூற்பாவும், ஒரு மரத்தைப் பற்றி என, 122 மரங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு நூற்பாவும் ஆகும், எனப்படும், எனப்படுமே என்று முடிவதாக அமைந்துள்ளது.

உள்ளடக்கம்[தொகு]

ஒவ்வொரு மரத்துக்கும் பெரும்பான்மை 2 பெயர்களும் (தடவம், தணக்கு-56) சிறுபான்மை பெயர்கள் (பிசிதம், மந்தம், வெள்ளறுகு-68) என மூன்று பெயர்கள் வரை சுட்டியுள்ளதைக் காணமுடிகிறது. மேலும், மருத்துவ குணமிக்க மரங்களையும், வாசனைப் பொருள் மிகுந்த மரங்களையும் குறிப்பிடுகிறதேயன்றி, அவற்றின் பயன்பாடு பற்றிக் கூறப்படவில்லை.

பட்டியல் இடப்பட்ட தாவரங்கள்[தொகு]

மரங்கள்: பிரம்பு, சிறுமுன்னை, பெருமுன்னை, தென்னை, பனை, வெண்முருங்கை, மூங்கில், தகரை, ஈஞ்சு, நிலவேம்பு, ஆலம், மகிழ், கொன்றை, குரா, செருந்தி, சந்தனம், அரசு, கோங்கம், ஒதியம், புளி, குங்குமம், அனிச்சம், கொய்யா, ஆத்தி, தேறு, இரும்பிலி, தும்பிலி, கடம்பு, பிடா, ஊசிப்பாலை, பெருமரம், கருங்குன்றி ஆகியன.

மூலிகைகள்: மூலிகை (ஒடதி, ஒடதம்), கருநாகதாளி, அறுகு, சித்திரமூலம், நஞ்சுமுறிச்சான், முடக்கற்றான், பச்சிலை, ஆவிரை, தான்றி, பல்லி, பொருதலை, குதம்பை, தணக்கு, செம்பு, பிரமி, ஈயுணி, வெள்ளறுகு, காக்கணம், கஞ்சாங்கோரை, கொறுக்கை, நன்னாரி, நெடுங்கோரை, கரும் பிரண்டை, திரிதளமூலி, பாற்சொற்றி, சிறுநெல்லி, செந்தூதளை, வெண்தூதளை, கரிசலாங்கண்ணி, நெருஞ்சில், துளசி ஆகியன மூலிகைச் செடிகள் ஆகும்.

கீரைகள்: சிறுகீரை, தொய்யா, கானாங்கீரை, பொன்னாங்கண்ணி ஆகியன பற்றிக் கூறப்பட்டுள்ளன.

ஒப்பீடு[தொகு]

திவாகரம், பிங்கலம் ஆகிய இரண்டு நிகண்டுகளிலும் மரப்பெயர்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றன. இவற்றின்மரப்பெயர்த் தொகுதிகளோடு, ஒப்பிட்டுப் பார்த்தால், பல புதிய பெயர்கள் புலப்படுகின்றன. சான்றாக இந்நிகண்டு தென்னையின் பெயரைக் குறிப்பிடும்போது நாலிநாரி, தெங்கு தென்னை (7) என்கிறது. ஆனால் திவாகரம், நாளிகேரம், தெங்கு தழை என நவில்வர் (திவா.702) என்றே குறிப்பிடுகிறது.