தமிழ்த் தேசியப் பேரியக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழ்த் தேசியப் பேரியக்கம்
த.தே.பே.
[[Image:]]
கட்சி பெயர் தமிழ்த் தேசப் பொதுவுடமை கட்சி
தொடக்கம் 1992
தலைவர் பெ. மணியரசன்
பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன்
தலைமையகம் சென்னை
இலக்கு இறையாண்மையுள்ள தமிழ்த்தேசக் குடியரசு

தமிழ்த் தேசியப் பேரியக்கம் (2014க்கு முன்புவரை தமிழ்த் தேசப் பொதுவுடமை கட்சி என அழைக்கப்பட்டது ) என்பது தமிழ்நாட்டு விடுதலை – தமிழீழ விடுதலை ஆகிய இலட்சியங்களை, முதன்மை இலக்காகக்கொண்டு தமிழகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்த்தேசிய அமைப்பாகும்.

இந்திய அரசின் பிடியிலிருந்து, தமிழர்களின் தாயகமாக தமிழ்நாட்டை மீட்டெடுத்து இறையாண்மையுள்ள தமிழ்த்தேச குடியரசு அமைப்பதும், அதன் பின்னர் நிகரமை (சோசலிசம்) நோக்கிப் பயணிப்பதும் கட்சியின் முதன்மைக் கடமைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

வரலாறு[தொகு]

தமிழ்நாட்டில் இந்தியப் பொதுவுடமைக் கட்சி சி.பி.எம். கட்சியில் தஞ்சை - திருவாரூர் மாவட்டங்களில் தீவிரமாக மக்கள் பணியாற்றியவர்கள் தோழர்கள் பெ. மணியரசன், கி.வெங்கட்ராமன் ஆகியோர். சீக்கிய இனப்படுகொலைக்கு ஆதரவாக செயல்பட்ட சி.பி.எம். கட்சியைக் கண்டித்தும், தமிழீழ இனப்படுகொலை கண்டு கொள்ளாததைக் கண்டித்தும் இவர்களது தலைமையில் தணிகைச்செல்வன், இராசேந்திரச்சோழன், தஞ்சை க. பழனிமாணிக்கம், த.கா. பரமசிவம், மா.கோ.தேவராசன் (சிதம்பரம்), புலவர் கி.த. பச்சையப்பன் உள்ளிட்ட பலர் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (சிபிஎம்) கட்சியிலிருந்து விலக முடிவெடுத்து 1985 சூன் 11, 12 ஆகிய இருநாட்கள் கல்லணையில் விவாதித்தனர். இவர்கள் அனைவரையும் சி.பி.எம். கட்சியில் இருந்து வெளியேற்றியது. 1985 சூன் 29,30 ஆகிய நாட்களில் சிதம்பரத்தில் கூடிய இவர்கள் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (Marxist Communist Party -எம்.சி.பி.) என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினர். அதன் அமைப்பாளராக தோழர் பெ.மணியரசன் தேர்வு செய்யப்பட்டார்.

சி.பி.எம். தலைமையிலிருந்து வெளியேறி எம்.சி.பி.ஐ. என்ற பெயரில் பீகாரைச் சேர்ந்த சிறீவஸ்த்தவா தலைமையில் ஓர் இயக்கம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. சில மாதங்கள் கழித்து அவர்களோடு தமிழகத் தோழர்கள் இணைந்தனர். அதன்பிறகு, இக்கட்சி இந்திய மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி (எம்.சி.பி.ஐ) ஆனது. ஆனால், அவர்களும் தமிழ்த் தேசியம் என்ற கருத்தியலை ஏற்க மறுத்தனர். இதனால், எம்.சி.பி.ஐ.லிருந்து பெ.மணியரசன் தலைமையிலான தமிழகத் தோழர்கள் அனைவரும் வெளியேற முடிவு செய்தனர். இதன் தொடக்கமாக 1990 பிப்ரவரி 25 அன்று சென்னையில் பெரியார் திடலில் “தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாடு” என்ற தலைப்பில் மாநாடு ஒன்று தோழர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது. கட்சியின் மாநாடாக இல்லாமல் பொதுநிலையில் நடத்தப்பட்ட அம்மாநாடு அது.

இந்தியத் தேசியத்தை முற்றிலுமாக மறுத்து தமிழ்த் தேசியத்திற்கு முன்னுரிமை கொடுப்பது என்ற தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் வெளிப்பாடாக இம்மாநாடு அமைந்தது. இதில் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை (Right to self determination with the right to secede) தமிழ்நாட்டிற்கு வேண்டும் என்றும் தமிழ்நாட்டை மாநிலம் என்று அழைக்காமல் தமிழ்த் தேசம் என்று அழைக்க வேண்டும் என்றும் இந்தியாவைத் தேசம் என்று அழைக்காமல் ஒன்றியம் என்று அழைக்க வேண்டும் என்றும் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தமிழ்த் தேசக் குடியரசு நிறுவப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தும் மாநாட்டுத் தீர்மானத்தை தோழர் பெ.மணியரசன் முன்மொழிந்தார். பலத்த கரவொலிகளுடன் ஒரு மனதாக அது ஏற்கப்பட்டது.

மாநாட்டில் பாவலரேறு பெருஞ்சித்திரனார், சாலை இளந்திரையன், சுப. வீரபாண்டியன், வழக்கறிஞர் அருள்மொழி, கவிஞர் இன்குலாப் உள்ளிட்ட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்திய அரசின் தேசிய ஒருமைப்பாட்டுப் பேரவைக் கூட்டத்தில் இம்மாநாடு குறித்து விளக்கம் தருமாறு, அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி நேரில் அழைத்து விசாரிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, 1990 திசம்பர் 25ஆம் நாள் சிதம்பரத்தில் வைத்து பெ.மணியரசன் சிறைப்படுத்தப்பட்டார். 8 ஆண்டுகள் இவ்வழக்கு நடந்தது. இறுதியில் அவரை நீதிமன்றம் விடுவித்தது.

எம்.சி.பி.ஐ. யின் தமிழ்நாடு கிளை அக்கட்சியிலிருந்து முற்றிலும் துண்டித்துக் கொண்டு, “தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி” என்ற புதிய பெயரை வைத்துக் கொண்டது.

கட்சியின் முதல் மாநாடு காஞ்சிபுரம், அய்யம்பேட்டையில் 1991 பிப்ரவரி 1,2,3 நாட்களில் நடைபெற்றது. கட்சியின் கொள்கை அறிக்கை முடிவு செய்யப்பட்டது. தோழர் பெ.மணியரசன் அவர்களைப் பொதுச் செயலாளராக் கொண்டு த.தே.பொ.க. இயங்கத் தொடங்கியது.

1991இலிருந்து 2014ஆம் ஆண்டு ஆகத்து 15-16 வரை, "தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி" என்ற பெயரில் செயல்பட்டு வந்த இவ்வமைப்பு, திருச்சியில் நடைபெற்ற அமைப்பின் ஏழாவது பொதுக்குழுவில், “தமிழ்த் தேசியப் பேரியக்கம்” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கொள்கை அறிக்கை[தொகு]

தமிழ்த் தேசியப் பேரியக்கம் (அப்போது தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி) 1992 பிப்ரவரி 1, 2, 3 ஆகிய நாட்களில் காஞ்சிபுரம் அய்யம்பேட்டையில் தனது முதல் மாநாட்டை நடத்தியது. அதில், த.தே.பே. கொள்கை அறிக்கை மற்றும் அமைப்புச் சட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட்டன.

பிறகு, 1998, திசம்பர் 24, 25, 26 ஆகிய நாட்களில் சிதம்பரத்தில் நடைபெற்ற கட்சியின் மூன்றாவது சிறப்புப் பொதுக்குழுவில் கொள்கை அறிக்கையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 2005 அக்டோபர் 31, நவம்பர் 1, 2 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெற்ற 5ஆவது சிறப்புப் பொதுக்குழுவில் கொள்கை அறிக்கையிலும், அமைப்புச் சட்டத்திலும் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.

மேற்கண்ட கொள்கை அறிக்கையின் அடித்தளத்தில் நின்று துல்லியப்படுத்தப்பட்ட நிலைப்பாடுகளைக் கொண்டு, ஓசூரில் 2011 செப்டம்பர் 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் நடைபெற்ற தமிழ்த் தேசியப் பேரியக்கம் 6ஆவது சிறப்புப் பொதுக்குழுவில் கொள்கை அறிக்கை புதிதாக மறுவரைவு செய்யப்பட்டது. தேவைக்கேற்ப அமைப்புச் சட்டத்தில் மாறுதல்கள் செய்யப்பட்டு, புதிய அமைப்புச் சட்டமும் இச்சிறப்புப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.

கொடி[தொகு]

தமிழ்த் தேசியப் பேரியக்கக் கொடியில் மூன்றில் இரண்டு பாகத்தில் சிவப்பு வண்ணம் உள்ளது.

  • இந்தச் சிவப்பு, புரட்சியின் அடையாளம், ஈகத்தின் வெளிப்பாடு. நம் குருதியின் மறுபதிப்பு.
  • எஞ்சியுள்ள மூன்றில் ஒரு பாகம் வெள்ளை நிறம். வெள்ளை நிறப் பின்னணி, அமைதியின் மீது, உலகு தழுவிய சமாதானத்தின் மீது தமிழர்களுக்குள்ள நமக்குள்ள அக்கறையைக் காட்டுகிறது. அமையப்போகும் தமிழ்த்தேசக் குடியரசு உலக அமைதிக்குப் பாடுபடும் என்பதைக் குறிக்கிறது.
  • அந்த வெள்ளைப் பகுதியில் நம்முடைய தமிழ்த்தேசத்தின் வரைபடம் கருப்பு வண்ணத்தில் உள்ளது. கருப்பு வண்ணம் தமிழ் இனத்தின் நிறம். நமது தேசம், தமிழ்த்தேசம்; இந்தியா நமது தேசமல்ல. திராவிடமும் நமது தேசமல்ல என்பதைக் குறிக்கிறது வரைபடம்.

செயல்பாடுகள்[தொகு]

  • 2009 ஈழத்தமிழர்களை ஈவிரக்கிமின்றி நாள் தோறும் கொன்று குவிக்கும் இந்திய - சிங்களக் கூட்டுப்படையின் அட்டூழியத்தை கண்டிக்கும் வகையில் இந்திய - இலங்கைக் கொடிகளை எரிக்கும் போராட்டத்தை 23.04.09 அன்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் - தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்துடன் இணைந்து நடத்தியது.
  • 2010 மாவீரன் முத்துக்குமாருக்கு முதன் முதலாக தமிழகத்தில் சிலை திறந்து அவரை பெருமைப்படுத்தியது, தமிழ்த் தேசியப் பேரியக்கம்
மாவீரன் முத்துக்குமாருக்கு முதன் முதலாக தமிழகத்தில் சிலை திறந்து அவரை பெருமைப்படுத்தியது, தமிழ்த் தேசியப் பேரியக்கம்
  • 2012 காவிரி நீரைத் தடுக்கும் கர்நாடகத்திற்கு தமிழகத்திலிருந்து மின்சாரம் செல்லக் கூடாதென வலியுறுத்தி நெய்வேலி அனல் மின்நிலையத் தலைமையகத்தை தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள் முற்றுகையிட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது
காவிரி நீரைத் தடுக்கும் கர்நாடகத்திற்கு தமிழகத்திலிருந்து மின்சாரம் செல்லக் கூடாதென வலியுறுத்தி நெய்வேலி அனல் மின்நிலையத் தலைமையகத்தை தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள் முற்றுகையிட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது

அமைப்பு[தொகு]

தமிழகமெங்கும் தமிழ்த் தேசிய விடுதலைக்கான வளர்ச்சியில் பங்காற்றும் கட்சி உறுப்பினர்களைக் கொண்ட பொதுக் குழு மற்றும், அரசியல் முடிவுகளை எடுக்கும் வகையிலான தலைமைச் செயற்குழு ஆகியவற்றைக் கொண்டு இயங்கும் கூட்டுத் தலைமை அமைப்பாக த.தே.பே. செயல்படுகின்றது. அமைப்பின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகளுக்கு, சனநாயக முறைப்படி பொதுக்குழுவில் தேர்தல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கும் முறை பின்பற்றப்படுகின்றது.

தலைவர்[தொகு]

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன்.
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன்

பெ. மணியரசன் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவராக பணியாற்றி வருகின்றார். இவர் சி.பி.எம். கட்சிச் செயலாளராகப் பணியாற்றியவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றியவர். சங்க்காலத் தமிழ்க் கலை இலக்கியப் போக்குகள் குறித்தும், சமகால இலக்கியப் போக்குகள் குறித்தும் கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும் பணியாற்றினார். தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரித்தும், இந்திய இறையாண்மையை எதிர்த்தும் பேசியதாக பெ.மணியரசன் மீது தமிழக அரசு பலமுறை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் ஆசிரியராகவும் பணயாற்றி வருகின்றார்.

பொதுச் செயலாளர்[தொகு]

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன்
தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன்

தோழர் கி.வெங்கட்ராமன் தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளராக பணியாற்றி வருகின்றார். தோழர் கி.வெங்கட்ராமன் இந்திய மாணவர் சங்கத்திலும், சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்லும் முக்கியப் பொறுப்புகள் வகித்து ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் சி.பி.எம். கட்சி வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர் ஆவார். உழைக்கும் மக்களை தொழிலாளர் இயக்கமாக அணிதிரட்டுவதில் கூடுதல் பங்காற்றியவர் ஆவார். இந்திய – தமிழகச் சூழல்களில் உலகமயப் பொருளியல் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும், பருவநிலை மாற்றங்கள் தொடர்பான விவாதங்கள் வரை இவர் எழுதியுள்ள கட்டுரைகள் தமிழ்ச் சமூகத்தின் ஆவணங்களாகப் போற்றத்தக்கவை ஆகும்.

தற்போது, தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளராகவும், கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் இணை ஆசிரியராகவும், தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகராகவும் பணயாற்றி வருகின்றார்.

தோழமை அமைப்புகள்[தொகு]

தமிழக இளைஞர் முன்னணி[தொகு]

வெளிமாநிலத்தவர்களுக்கு வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை வழங்கக் கூடாது என வலியுறுத்தி தமிழகமெங்கும் 26.03.2012 அன்று தமிழக இளைஞர் முன்னணி மற்றும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன

தமிழ்த் தேசிய விடுதலைக் கருத்தியலுக்கு ஆதரவாக இளைஞர்களை ஒன்று திரட்டும் அமைப்பாக தமிழக இளைஞர் முன்னணி விளங்குகிறது.

பான்பராக் – பீடா போன்ற போதைப் பாக்குகளாலும், மது உள்ளிட்ட போதைப் பழக்க வழக்கங்களாலும் இளைஞர்கள் சீரழிவதைத் தடுக்கும் வகையில், இப்போதைப் பாக்குகளுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி, இப்பாக்குகளைத் தயாரிக்கும் கோத்தாரி நிறுவனத்தை முற்றுகையிட்டுப் போராடியது, 2003இல் புதிதாக சென்னையில் திறக்கப்பட்ட இலங்கை வங்கியை பூட்டுப் போட்டுப் போராடியது, தமிழக இளைஞர்களுக்கு வேலை கொடு அல்லது அதற்கு ஏற்ப வாழ்வூதியம் கொடு என தமிழகமெங்கும் கையெழுத்து இயக்கம் நடத்தியர் என பல்வேறு செயல்பாடுகளால் தமிழக இளைஞர் முன்னணி தமிழக வரலாற்றில் தடம் பதித்துள்ளது.

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளராக செயல்பட்டு வருகின்றார்.

தமிழக மாணவர் முன்னணி[தொகு]

தமிழ்த் தேசிய விடுதலைக் கருத்தியலுக்கு ஆதரவாக மாணவர்களை ஒன்று திரட்டும் அமைப்பாக தமிழக மாணவர் முன்னணி விளங்குகிறது.

தமிழ் வழிக்கல்விக்காக பரப்புரை இயக்கம், தனியார் மெட்ரிக் கல்வி நிறுவன மோசடிகளை எதிர்த்து பரப்புரை இயக்கம், வெளிமாநில மாணவர்கள் ஆக்கிரமிப்பால் தமிழக மாணவர்களுக்கு தமிழ் பயிற்று மொழி மறுக்கப்பட்டமையை எதிர்த்துப் போராட்டம் என தமிழக மாணவர் முன்னணி தனக்கெனத் தனித்தப் போராட்ட வரலாற்றைக் கொண்டு இயங்குகிறது.

தமிழ்க் கலை இலக்கியப் பேரவை[தொகு]

தமிழ்த் தேசிய விடுதலை இலட்சியத்தை கலை இலக்கியப் படைப்புகளாக வெளிக் கொணரும் படைப்பாளிகளையும், படைப்பிலக்கியங்களையும் வளர்த்தெடுக்கும் நோக்கில் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தொடங்கப்பட்டது. கதை – கவிதை – உரைநடை இலக்கிய விமர்சனங்கள், திரைப்படத் திறனாய்வுக் கூட்டங்கள் என பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வரும், த.க.இ.பே. புதியப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் நூல் வெளியீட்டு நிகழ்வுகளையும் நடத்தி வருகின்றது.

மகளிர் ஆயம்[தொகு]

தமிழ்த் தேசிய விடுதலையை இலட்சிய இலக்காகக் கொண்டு, மகளிரைத் திரட்டும் வகையில் மகளிர் ஆயம் அமைப்பு 2008ஆம் ஆண்டிலிருந்து செயல்படத் தொடங்கியது. தமிழீழ இனப்படுகொலையை எதிர்த்தும், போர் நிறுத்தம் வேண்டியும் மகளிர் ஆர்ப்பாட்டங்கள், இராசபக்சேவை போர்க் குற்றவாளியாக நிறுத்த வேண்டுமென வலியுறுத்திப் கண்டனப் பேரணி, டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் என தொடர்ந்து பல்வேறு செயல்பாடுகளை மகளிர் ஆயும் முன்னெடுத்து வருகின்றது.

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் மதுரை அருணா, மகளிர் ஆயத்தின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகின்றார்.

இளந்தமிழர் இயக்கம்[தொகு]

2009 தமிழீழ இன அழிப்புப் போரை சிங்கள இனவெறி அரசு நடத்திக் கொண்டிருந்த சூழலில், மாவீரன் முத்துக்குமார் கட்சி எல்லைகளைக் கடந்த இளைஞர்களை ஒருங்கிணைக்க விடுத்த அறைகூவலைத் தொடர்ந்து, ஓர் புதிய அமைப்பாக இந்நோக்கில் இளந்தமிழர் இயக்கம் செயல்படத் தொடங்கியது.

தமிழீழ விடுதலையை தமிழக கிராமங்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் நடத்தப்பட்ட பரப்புரை இயக்கம், காங்கிரசுக்கு எதிரான தேர்தல் பரப்புரை, தமிழீழ இனப்படுகொலை குறித்து ஆயிரக்கணக்கில் குறுந்தகடுகள் தயாரித்த விநியோகித்து, தமிழினப் பகைவன் காங்கிரசு முன்னாள் அமைச்சர் ஈரோடு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீட்டை முற்றுகையிட்டது என பல்வேறு செயல்பாடுகளைத் தீவிரமாக முன்னெடுத்தது இளந்தமிழர் இயக்கம். 2009 மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறையில், காங்கிரசு வேட்பாளர் மணிசங்கர் அய்யர் தோற்றதற்கு இளந்தமிழர் இயக்கம் முக்கியக் காரணம் என குமுதம் ஏடு எழுதியது.

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்.


தமிழக உழவர் முன்னணி[தொகு]

காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பீன்படி கர்நாடகத்திலிருந்து மாதந்தோறூம் நீரைப்பெற தமிழக அரசு தவறியதால் ஏற்பட்ட குறுவை சாகுபடிக்கு இழப்பீடு கோரி தமிழக உழவர் முன்னணி சிதம்பரம் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு 21.08.2012 அன்று மறியல் போராட்டம் நடத்தினர்

உலகமயத் தாக்குதல் மற்றும், அண்டை மாநிலங்களின் நீர் முற்றுகை ஆகியவற்றிலிருந்து தமிழ்நாட்டின் வேளாண்மையைக் காக்க தேர்தல் கட்சி எல்லைகளைக் கடந்து, தமிழக உழவர்களைத் திரட்ட வேண்டிய கடமையை நிறைவேற்ற தமிழக உழவர் முன்னணி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. கட்சி எல்லைகளைக் கடந்து இவ்வமைப்பின் கீழ் திரண்டுள்ள உழவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் போராடி வென்றெடுத்துள்ளனர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகராக செயல்பட்டு வருகின்றார்.


ஊடகம்[தொகு]

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் இயங்கும், கட்சியின் செயல்பாடுகள் தெரிவிக்கப்படுகின்றன.

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்[தொகு]

தமிழ்த் தேசியப் பேரியக்கக் கொள்கை இதழாக தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழ் மாதமிருமுறையாக வெளிவந்து கொண்டுள்ளது. கட்சியின் தொடக்ககாலத்தில், 1986இல் ‘கண்ணோட்டம்’ என்ற பெயரில் வெளிவந்த இதழ் 25 ஆண்டுகள் தொடர்ச்சியாக வெளிவந்து தற்போது மாதமிருமுறை இதழாக வெளிவந்து கொண்டுள்ளது. தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் நிலைப்பாடுகள், போராட்டங்கள் மட்டுமின்றி, தமிழ்ச் சமூகம் குறித்த பல்வேறு குற்பிடத்தக்க ஆய்வுகளையும் தமிழர் கண்ணோட்டம் வாசகர்களிடம் கொண்டு சேர்த்து தனக்கென ஓர் தனிச்சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.


கீற்று இணையத்தில் படிக்க:[1]

கண்ணோட்டம் இணைய இதழ்[தொகு]

எதேச்சதிகாரக் கொடுங்கோன்மைகளை எதிர்த்து 2010 செப்டம்பரில் தொடங்கிய அராபிய எழுச்சிக்கு மாற்று ஊடகங்களே முக்கியக் காரணமாக விளங்கின.

தமிழக மக்கள், தமிழீழ மக்கள், புலம் பெயர்ந்த தமிழீழ – தமிழக மக்கள் என உலகெங்கும் தமிழ் மக்களும், பிற தேசிய இன மக்களும் நடத்தி வருகின்ற போராட்டங்களையும், மக்களின் பண்பாட்டு நிகழ்வுகளையும் பதிவு செய்யவும், பரப்புரை செய்யவும், மீள் கட்டமைக்கவும் இவ்வகை மாற்று ஊடகங்கள் அவசியம் என்பதை உணர்ந்து, அராபிய எழுச்சி சிரியாவை பற்றிக் கொண்ட மார்ச் 15 அன்று முதல் ‘கண்ணோட்டம்’ இணைய இதழ் செயல்தளத்திற்கு வந்தது. இவ் இணைய இதழ் தமிழ் இனம், மொழி நலன் காக்கும் செய்திகள், கட்டுரைகள் உள்ளிட்ட படைப்புகளை வெளியிடவும், இது சார்ந்த விவாதங்களை ஊக்குவிக்கவும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது.

இணையம்:[2]

பன்மைவெளி வெளியீட்டகம்[தொகு]

கட்சியின் நிலைப்பாடுகளையும், தமிழ்ச் சமூகம் குறித்த ஆய்வுகளையும் வெளிக் கொணரும் வெளியீடுகளைக் கொண்டு வரும், நிறுவனமாக பன்மைவெளி வெளியீட்டகம் செயல்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. www.keetru.com/index.php?option=com_content&view=section&id=22&layout=blog&Itemid=148
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-09-29. பார்க்கப்பட்ட நாள் 2021-08-10.