கருணாகரப் பிள்ளையார் கோயில், உரும்பிராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருணாகரப் பிள்ளையார் கோயில், இணுவில்/உரும்பிராய்
இணுவில்/ உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோயிலின் முன்புறத் தோற்றம்
இணுவில்/உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோயிலின் முன்புறத் தோற்றம்
பெயர்
பெயர்:கருணாகரப் பிள்ளையார் கோயில், இணுவில்/உரும்பிராய்
அமைவிடம்
நாடு:இலங்கை
மாகாணம்:வட மாகாணம்
மாவட்டம்:யாழ்ப்பாணம்
கோயில் தகவல்கள்
மூலவர்:கருணாகரப் பிள்ளையார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கல்வெட்டுகள்:உண்டு
இணையதளம்:http://www.karunakarappillaiyar.com

கருணாகரப் பிள்ளையார் கோயில் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உரும்பிராய் கிராமத்தில் இணுவில் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ் மிக்க ஒரு பிள்ளையார் கோயில். உரும்பிராயில் பரத்தைப்புலம் என அழைக்கப்படும் குறிச்சியில் இக்கோயில் அமைந்துள்ளதால், இக் கோயிலை உரும்பிராய் பரத்தைப்புலக் கருணாகரப் பிள்ளையார் கோயில் எனவும் அழைப்பர். இந்தக் கோவிலின் பிள்ளையாரின் கர்ப்பக்கிரகம் அமைந்துள்ள பகுதி இணுவிலுக்குள்ளும் வசந்தமண்டபமும் ஏனைய பகுதிகளும் உரும்பிராய் எல்லைக்குள்ளும் அமைந்துள்ளன.

வரலாறு[தொகு]

தோற்றம்[தொகு]

பலவித மரங்களும் அடர்ந்து சூழ்ந்து இருந்த இவ்விடத்தில் ஓர் அரச மரத்தின் கீழே ஒரு பிள்ளையார் லிங்கம் இருந்ததாகவும், தோன்றிய காலம் எது என்று தெரியாத அந்த இலிங்கத்தை வழிப்போக்கர்களும், ஊர் மக்களும் வழிபட்டு வந்தனர் என்றும் செவிவழிக் கதைகளை மேற்கோள் காட்டி அ. பஞ்சாட்சரம் கூறுகிறார்.[1] யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்தி வம்சத்தின் முதல் அரசனான கூழங்கைச் சக்கரவர்த்தி இவ்வழியாகச் சென்றபோது இந்த இலிங்கத்தைக் கண்டு அதை வழிபட்டுப் பயன் பெற்றதாகவும், அதனால் அரசர், அங்கே செங்கல்லால் ஒரு கோயிலைக் கட்டுவித்ததாகவும் செவிவழிக் கதைகள் உள்ளனவாம்.[2]

தமிழகத்தில் இருந்து வந்த கருணாகரத் தொண்டைமான் என்பவன் யாழ்ப்பாணத்தில் இருந்து உப்பு எடுத்துச் செல்வதற்காகத் தொண்டைமானாற்றை வெட்டுவித்தான் என்று யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது. இந்தப் பணியில் ஈடுபட்டு இருந்தபோது இணுவிலில் தங்கியிருந்த தொண்டைமான் கருணாகரப் பிள்ளையார் கோயிலைக் கட்டுவித்திருக்கலாம் என்று செ. இராசநாயகம் கருதுகிறார்.[3]. இவை தவிர, கருணாகரப் பிள்ளையார் கோயில் கருணாகரத் தொண்டைமானின் ஆட்சிக்குத் துணையாகவிருந்த கருணாகரர் என்பவரால் கட்டப்பட்டது, கருணாகர ஐயர் என்பவரால் பூசிக்கப்பட்டும், பாதுகாக்கப்பட்டும் வந்தமையால் கருணாகரப்பிள்ளையார் என்ற பெயர் வந்தது[4] போன்ற கருத்துக்களும் உண்டு.

கல்வெட்டுக்கள்[தொகு]

இக்கோயில் கட்டியவர் யார் என்பது குறித்தோ எந்த ஆண்டில் கட்டப்பட்டது என்றோ தெளிவாகக் கூறுவதற்கான சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. எனினும், இக்கோயிலில் கிடைத்த கல்வெட்டுக்கள் இரண்டு இதன் பழமைக்குச் சான்றாக அமைகின்றன. யாழ்ப்பாணத்துக் கோயில் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இவை மட்டுமே. பெருமளவுக்குச் சிதைந்த நிலையில் காணப்படும் இந்தக் கல்வெட்டுக்களை கல்வெட்டாய்வாளரான கலாநிதி கா. இந்திரபாலா ஆய்வு செய்துள்ளார். அவர் அதனைப்பற்றிக் கூறும்போது கோயிலைக் கட்டியவரின் பெயரோ ஆண்டோ தெரியவில்லை யெனக் குறிப்பிட்டுள்ளார்.[4] எனினும், செ. இராசநாயகம் தனது நூலில் தந்துள்ள குறிப்புக்களையும், கல்வெட்டில் காணப்படும் பிற தகவல்களையும், எழுத்தமைதியையும் சான்றாகக் கொண்டு முதலாவது கல்வெட்டு 1567 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று இந்திரபாலா கூறுகின்றார். இது, இக் கோயிலுக்கு வழங்கப்பட்ட தானம் ஒன்று பற்றிக் குறிப்பிடுவதால், இக் கோயில் இதற்கு முன்னரே இருந்து வந்தது வெளிப்படை.

பிற்காலம்[தொகு]

ஐரோப்பியர் ஆட்சியின் தொடக்க காலத்தில் யாழ்ப்பாண இராச்சியத்தில் இருந்த கோயில்கள் அனைத்தும் அழிக்கப்பட்டபோது, செங்கல்லால் கட்டப்பட்டிருந்த கருணாகரப் பிள்ளையார் கோயிலும் இடிக்கப்பட்டது. பிற்காலத்தில், கருணாகரர் என்னும் அந்தணர் ஒருவர் குழை மண்ணால் இக்கோயிலை மீளவும் கட்டி வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. பஞ்சாட்சரம், அ., உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோயில் வரலாறும் மகத்துவமும், உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோயில் மகா கும்பாபிசேக மலர், 1973.
  2. 2.0 2.1 பஞ்சாட்சரம், அ., 1973.
  3. இந்திரபாலா, கா. "உரும்பிராய் கருணகாரப் பிள்ளையார் கோயிலிலுள்ள கல்வெட்டுக்கள்", உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோயில் மகா கும்பாபிசேக மலர், 1973, ப -35
  4. 4.0 4.1 இணுவை அப்பர், இணுவையூர் கா. செ. நடராசா

வெளி இணைப்புகள்[தொகு]