திருவலஞ்சுழி மும்மணிக்கோவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவலஞ்சுழி மும்மணிக்கோவை பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று.

ஆசிரியம், வெண்பா, கட்டளைக் கலித்துறை என்னும் மூவகைப் பாடல்கள் மாறி மாறி வர 30 பாடல்கள் பாடுவது மும்மணிக்கோவை. திருவலஞ்சுழி தேவாரத் தலங்களில் ஒன்று. அவ்வூர்க் கோயிலிலுள்ள சிவனைப் போற்றிப் பாடப்பட்டது இந்த நூல்.

பாடியவர் நக்கீரதேவ நாயனார்; காலம் 10ஆம் நூற்றாண்டு. இதில் மொத்தம் 15 பாடல்கள் மட்டுமே உள்ளன.

ஒரு பாடல்
தானேறு மானேறு கைதொழேன் தன்சடைமேல்
தேனேறு கொன்றைத் திறம்பேசேன் – வானேறு
மையாரும் சோலை வலஞ்சுழியான் என்கொல்என்
கையார் வளைகவர்த வாறு. (பாடல் எண் 11)

”வலஞ்சுழிச் சிவனின் காளைமாட்டைக்கூட நான் தொழவில்லை. அவன் தலையிலுள்ள கொன்றை மாலையைப் பற்றிக்கூடப் பேசவில்லை. அப்படி இருக்கும்போது அவன் என் கைவளையல்கள் கழலுமாறு செய்துவிட்டானே.” – எனத் தலைவி ஒருத்தி இரங்குவதாக உள்ள அகத்திணைப் பாடல் இது.

காலம் கணித்த கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005