பேச்சு:பிருத்திவிராச் சௌகான்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிருத்திவிராச் சௌகான் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
பிருத்திவிராச் சௌகான் என்னும் கட்டுரை இந்திய வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் இந்திய வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கவனம் தேவை[தொகு]

தமிழ் ஒலியமைப்புக்காகத் தலைப்புக்களை மாற்றும் போது சற்றுக் கவனம் தேவை. சொற்பொருளும் மாறாமல் இருக்கவேண்டும். "பிருத்விராஜ்" என்பது "பிருத்வி" + "ராஜ்", ஆனால், "பிருத்திவிராச்" என்பதைப் பிரிக்கும்போது "பிருத்திவி" + "ராச்" என்றுவருகிறது. "ராச்" என்றால் என்ன? எனவே உச்சரிக்கும்போது ஒலிப்பு ஏறத்தாள வருகிறது என்பதற்காகப் பொருளை விளக்காத எழுத்துக்களைப் பயன்படுத்துவது சரியல்ல என்பது எனது கருத்து. "பிருத்திவிராசு" அல்லது "பிருத்திவிராசன்" என்று எழுதலாம். பொதுவாகத் தலைப்புக்களை மாற்றும்போது முதலில் கலந்துரையாடுவது நல்லது. இதனால் பலருடைய கருத்தையும் அறியும் வாய்ப்புக் கிடைக்கும்.

மேலும், கிரந்த ஒலிகளைத் தமிழ் ஒலிப்புக்கு அமைய மாற்றுவதில் சற்று அவசரப்படுகிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. அவசர அவசரமாக ஏற்கெனவே இருக்கும் தலைப்புக்களை மாற்ற வேண்டியது இல்லை. புதிதாக எழுதும்போது சுலபமாக மாற்றக்கூடியவற்றை மாற்றி எழுதலாம். அச் சொற்கள் தொடர்பில் மறுப்புக்கள் அதிகம் இல்லை என்னும்போது படிப்படியாக மாற்ற முடியும். சில சொற்களை வழமையான ஒலிப்பு மாற்று முறைகளைப் பயன்படுத்தி மாற்றும்போது கேலிக்குரியதாகி விடுவதையும் காணமுடிகின்றது. மயூரநாதன் 15:50, 11 ஏப்ரல் 2009 (UTC)

அனுபவம் வாய்ந்த பயனர், தமிழ் ஒலிப்பு முறைக்கு ஏற்ப எழுத வேண்டு என்று நினைப்பவர், பல இடங்களில் தவறி விடுவது சற்று வருத்தம் தருகிறது. ஜ ச என்பது வழக்கு என்பது எனது மட்டுப்படுத்தப்பட்ட புரிதல். தவறுகளை சுட்டிக் காட்டினால் திருக்திக் கொள்வேன். ஆமாம், சில சொற்கள் விதிவிலக்காக அமைவதுண்டு. ஆனால் விதிவிலக்குகளை வைத்து பொது விதி செய்ய முடியாது. --Natkeeran 16:08, 11 ஏப்ரல் 2009 (UTC)
ராஜ் என்றால் என்ன? --Natkeeran 16:09, 11 ஏப்ரல் 2009 (UTC)

அனுபவம் இருப்பதால்தான் எனது கருத்தைக் கூறியுள்ளேன். நான் "ஜ", "ஸ" போன்றவற்றைப் பயன்படுத்திச் சில சொற்களை எழுதுவது தவறி அல்ல. அந்த இடத்தில் அதை இப்போதைக்கு மாற்றவேண்டாம் என நான் நினைப்பதால் தான். பல இடங்களில் கிரந்த எழுத்துக்களைத் தவிர்த்து நான் எழுதியிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். அவசரமாக இந்த மாற்றங்களைச் செய்வது கூடிய தீமைகளை விளைவிக்கவும் கூடும். பொது விதிமுறைகளைக் கண்ணை மூடிக்கொண்டு பயன்படுத்தக்கூடாது. இடத்துக்குத் தக்கபடி சில மாற்றங்கள் தேவை. அதிலும் புதிய முயற்சியாக இதைச் செய்யும்போது கூட்டுமுயற்சி அவசியம் என்பது எனது கருத்து. "ராஜ்" என்பது அரசன் என்னும் பொருள்படுகின்ற ஒரு சொல். பெயரில் வரும்போது அப் பொருளை அது ஏற்காவிடினும் பொருள்விளங்க இருப்பது நல்லது. மயூரநாதன் 16:23, 11 ஏப்ரல் 2009 (UTC)

ராஜ் என்பதை ராச என்று சொல்லாம். எனவே ராஜ் என்று முதன்மைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஸூஜாஹூலி இது தமிழா????? லி தவிர???.... இப்படி பல பத்துக் கட்டுரைகள் இருக்கின்றன. விதிவிலக்குகளால் பொது வழக்கை மாற்றுவேண்டும் என்பது நல்ல வாதம் அல்ல. --Natkeeran 16:29, 11 ஏப்ரல் 2009 (UTC)

எடுத்துக்காட்டாக, "ராஜலக்ஷ்மி" என்பதை இலகுவாக "இராசலக்குமி" என்றோ "இராசலட்சுமி" என்றோ மாற்றிக்கொள்ளலாம். "கஜலக்ஷ்மி" என்பதை "கசலக்குமி" என்று எழுதினால் எப்படியிருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். "கச நோய்" பீடித்த இலக்குமி என்ற பொருள் வராதா? பொதுவிதியைக் கடைப்பிடித்து "கசலக்குமி" என்றுதான் எழுதுவேண்டும் என வாதிடுவது நல்லதல்ல. இவ்வாறான இடங்களில், இப்போதைக்கு ஆயினும் "ஜ" வை நான் மாற்றமாட்டேன். "கஜலக்குமி" என்றே எழுதுவேன். பின்னர் ஏற்றுக்கொள்ளக்கூடிய வழி கிடைக்கும்போது மாற்றிக்கொள்வதையே விரும்புவேன். மயூரநாதன் 16:37, 11 ஏப்ரல் 2009 (UTC)

உங்களின் உதாரணம் தகுந்ததே. இப்படி சில இடங்களில் வருவதுண்டு. அப்படியான இடங்களில் இப்போதைக்கு ஜ பயன்படுத்தலாம். ஆனால் கிரந்ததை முற்றிலும் வருத்தி எழுதவதற்கு அது சான்றாக ஆகாது. ஸ ச் சு இசு, ஷ ச ட, ஹ உயிர் ஒலியாலும், ஜ என்பதை ச ய என்று பல இடங்களில் எழுதலாம் என்றே கருதுகிறேன். ஸூஜாஹூலி எப்படி உச்சரிப்பது? வேகமாக மாற்ற வேண்டாம் என்பது சில சர்சைக்குரிய இடங்களில் பொருந்தும். முற்றிலும் புதிதாக எழுத்ப்படும் செற்களை (எ.கா நடு ஆசிய நாடுகள்) தமிழில் எழுதுவதே தகும். சாஸ்திரம் என்பது தமிழில் சாத்திரம் என்று பல காலமாக வழங்கி வருகிறது. சுபூஷணி சுபூசணி என்று எழுதலாம் அல்லவா? --Natkeeran 16:43, 11 ஏப்ரல் 2009 (UTC)

எழுதக்கூடாது என்று நான் சொல்லவில்லையே? நான் எழுதிய இரண்டாம் தாரைன் போர் கட்டுரையைப் பாருங்கள் "பிரித்திவிராசு" என்றுதான் எழுதியுள்ளேன். "பிருத்திவிராச்" என்று எழுதியது தான் பிழை என்கிறேன். நீங்கள் பொது விதிகளை மட்டும் பயன்படுத்திப் பிழையாகத் திருத்தம் செய்ததால்தான் நான் இதுபற்றிக் குறிப்பிடவேண்டி ஏற்பட்டது. பெரும்பாலான நாட்டுப் பெயர்களிலும் கிரந்தம் தவிர்த்துத்தான் நான் எழுதியுள்ளேன். ஆயினும், சில இடங்களில் ஐயம் இருந்தால் அல்லது பொருத்தமாக இருக்காது என நான் கருதினால் கிரந்த எழுத்தை அப்படியே பயன்படுத்தியும் உள்ளேன். மயூரநாதன் 17:04, 11 ஏப்ரல் 2009 (UTC)

பிழையை ஒத்துக் கொள்கிறேன். சில மாதங்களுக்கு முன்னர் இருந்த புரிதலை விடம் இப்போது சற்று கூட உண்டு. வேகமாக மாற்ற வேண்டாம் என்று நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால் ஸூஜாஹூலி போன்ற சொற்களைப் பாக்கையில் சற்று வேதனையாக இருக்கிறது. ஸூ ?? இதை நான் முன்னர் சொற்களில் பாக்க வில்லை. எப்படி உச்சரிப்பது என்றும் என்றும் தெரியாது. போய் கிரந்தத்தைப் படியும் என்று சொன்னால், அது நியாமானதா? தமிழ் கட்டுரைகளில் தமிழ் எழுத்துக்கள் பயன்படுத்த வேண்டும் என்று எதிர்பாப்பது நியாமானது என்றே கருதுகிறேன். --Natkeeran 17:11, 11 ஏப்ரல் 2009 (UTC)

ஸூஜாஹூலி என்பது தேவையற்ற கிரந்தப் பயன்பாடுதான். இதனை இலகுவாக "சூசாகூலி" என எழுதலாம். இங்கு ஜா வுக்கான பதிலீடு சற்று நெருடலாகத்தான் இருக்கிறது. சிலர் "சூஜாகூலி" என்றே எழுத விரும்பக்கூடும். எனக்கு நியாயமாகத் தெரிவது வேறு சிலருக்கு அநியாயமாகத் தெரியும். இதனால் தான் கலந்துரையாடல் தேவை என்றேன். இதில் வேறு சில பிரச்சினைகளும் உள்ளன. சொற்களுக்கு இடையில் "க" வரும்போது இலங்கையில் ஏறத்தாழ "ஹ" போலவே உச்சரிக்கிறோம். இதனால் சொற்களுக்கு இடையில் வரும் "ஹ"வை "க" மாற்றுவது இலங்கைத் தமிழருக்குப் பிரச்சினையாக இராது. ஆனால் இவ்வாறு வரு "க" வை "ga" என்பது போலத் தமிழ்நாட்டில் உச்சரிப்பதாகத் தெரிகிறது. எனவே இடையில் வரும் "ஹ" வை "க" வாக மாற்றுவது அவர்களுக்கு ஒரு compromise தான். இதனால் கலந்துரையாடல்களின் பின் மாற்றங்கள் செய்வது நல்லது.மயூரநாதன் 17:42, 11 ஏப்ரல் 2009 (UTC)

மயூரநாதனின் கருத்துகளும் பரிந்துரைகளும் எண்ணி ஏற்கவேண்டியன. ராசு, ராசன் என்று கொள்வதே சரியாக இருக்கும். பிருத்திவிராசு அல்லது பிருத்திவிராசன் என்று இருக்கலாம். முதலில் எல்லாவற்றையும் விரைந்து மாற்றத்தேவை இல்லை. ஒரு சில இடங்களில் கிரந்தம் இப்போதைக்காவது இருக்கலாம். ஆனால் ஒரு கருத்து- கச, கசன் என்பது தமிழில் வழக்குதான். கடோத்கசன், கசலட்சுமி, கசமுகன் என்னும் வழக்குகள் உண்டு. எ.கா: "அடியேனுக்கு அமைத்தருளின சுவர்க்கலோகத்தைக் கசமுகன் சங்கரிக்க..". சில இடங்களில் தமிழ்-வழி பொருட்பிழை வருவது போல் உள்ளவை தவிர்க்க இயலாதன. இது போன்ற இடர்ப்பாடுகள் எல்லா மொழியிலும் உள்ளன. ஆங்கிலத்திலும் சொல்லக்கூடாத ஒலிப்புகள் வரும் (சிலருடைய பெயர்களில்). சில இக்கட்டான இடங்களில் வேறுவிதமாகவும் கூறலாம். இலட்சுமணன் என்றும் இலெட்சுமணன் என்றும் கூறுவது போலவும், தட்சிணாமூரித்தி, தெட்சிணாமூர்த்தி என்று சொல்வது போலவும், கசலட்சுமி என்று கூறாமல் கெசலட்சுமி என்று கூறும் வழக்கமும் உண்டு. எ.கா: "தமிழக மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடுவீராசாமியின் தம்பி தேவராஜன்-கெசலட்சுமி மகள் கவிதா, சென்னை நீலாங்கரை சிவராம..". இதே போல சகதாம்பா, சகன்னாதன் என்னாமல் செகதாம்பா, செகன்னாதன் என்றும் கூறுவதுண்டு. ஆனால் மயூரநாதன் சொன்ன பரிந்துரையை ஏற்பது நல்லது. சற்று பொறுமையாகவே செய்யுங்கள். தாஜ் மகால் என்பதை தாச்சு மகால் என்றால் ஒன்றும் தவறாகாது (பலர் இப்படியேதான் பலுக்குவரும் கூட), ஆனால் தாஜ் மகால் என்று இருக்கட்டும். முடிந்தால், பின்னர் தகுந்த பக்குவம் எய்தினால் தாச்சு மகால் என்று எழுதலாம். இப்போது வேண்டியதில்லை. --செல்வா 04:17, 16 ஏப்ரல் 2009 (UTC)

இந்த உரையாடலைப் பொறுத்த வரை மயூரனாதனின் அணுகுமுறையை முற்றிலும் ஆதரிக்கிறேன். நம் அனைவரின் நோக்கமும் நல்ல தமிழில் எழுதுவது தான். ஆனால், அதனை முறையாக ஆய்ந்து, பொறுமையாக சரியாகச் செயற்படுத்தாவிட்டால் பிழையாகவும் கேலிப்பொருளாகவும் ஆகிவிடும்.--ரவி 07:28, 16 ஏப்ரல் 2009 (UTC)