திருநாட்டியத்தான்குடி மாணிக்கவண்ணர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
திருநாட்டியத்தான்குடி மாணிக்கவண்ணர் கோயில்
பெயர்
பெயர்:திருநாட்டியத்தான்குடி மாணிக்கவண்ணர் கோயில்
அமைவிடம்
ஊர்:திருநாட்டியத்தான்குடி
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:மாணிக்கவண்ணர், இரத்தினபுரீசுவரர், கரிநாலேசுவரர், நாட்டியத்து நம்பி
தாயார்:மங்களாம்பிகை
தீர்த்தம்:சூரிய தீர்த்தம், கரிதீர்த்தம்.
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சுந்தரர்

திருநாட்டியத்தான்குடி மாணிக்கவண்ணர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 118ஆவது சிவத்தலமாகும்.சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில் அமைந்துள்ளது. சுந்தரர் இத்தலத்திற்கு வந்த போது, இறைவனார் அம்பிகையுடன் உழவனாக நாற்று நட மறைந்து சென்றுவிட, விநாயகப் பெருமான் சுந்தரருக்கு இறைவனார் இருக்கும் திசை காட்டி உதவ, சுந்தரரும் அங்கு சென்று பாடல் பாடி இறைவனை அழைத்தார்.

சுந்தரர் தேவாரம்[தொகு]

"நட்ட நடாக்குறை நாளை நடலாம்
நாளை நடாக்குறை சேறுதங்கிடவே
நட்டது போதும் கரையேறி வாரும்
நாட்டியத்தான்குடி நம்பி."

அமைப்பு[தொகு]

கோயில் வெளியில் எதிரில் கைகாட்டி விநாயகர் கோயில் உள்ளது. ராஜகோபுரத்தை அடுத்து கொடி மரம், பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளன. திருச்சுற்றில் கோட்புலி நாயனார், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், கன்னிமூலை விநாயகர், வள்ளி தெய்வானையுடன் உள்ள சுப்பிரமணியர், காசி விசுவநாதர், விசாலாட்சி, கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. மூலவர் சன்னதியின் இடது புறத்தில் இறைவி சன்னதி உள்ளது. மூலவர் கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

கோட்புலி நாயனார்[தொகு]

கோட்புலி நாயனாரின் அவதாரத் தலம். அவரின் இரு புதல்விகளான சிங்கடி, வனப்பகை இருவரையும் சுந்தரர் தம் புதல்விகளாக ஏற்ற தலம்.[1] அதனால்தான் சுந்தரர் தன் தேவாரப் பாடல்களில் தன்னை சிங்கடி அப்பன், வனப்பகை அப்ர் என்று குறிப்பிடுகிறார். சுந்தரரின் உற்ற நண்பராக இருந்த கோட்புலி நாயனாருக்கு அவர் பிறந்து வளர்ந்த ஊரில் உள்ள சிவன் கோயிலில் உருவச்சிலை அமைத்து சோழர்கள் போற்றியுள்ளனர். கி.பி.10ஆம் நூற்றாண்டில் அவருக்கு எடுக்கப்பட்ட அந்த உருவச்சிலை 2003இல் கண்டெடுக்கப்பட்டது. நின்ற கோலத்தில் உள்ளகோட்புலியார் தோளில் உள்ள ஒன்றியை அணைத்த வண்ணம் இறைவணங்கும் கோலத்தில் அச்சிலை உள்ளது.[2][3]

புத்தர் சிலைகள்[தொகு]

இக்கோயிலின் அருகே புத்தர் சிலை ஒன்று 2003இல் கண்டுபிடிக்கப்பட்டது. அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் அச்சிலை காணப்படுகிறது. சோழ நாட்டில் காணப்படும் புத்தர் சிலைகளுக்குரிய கூறுகள் அனைத்தும் இச்சிலையில் காணப்படுகின்றன.[2] சற்றொப்ப இச்சிலையைப் போலவே சிறிது தூரத்தில் வயலில் மற்றொரு புத்தர் சிலை உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 261
  2. 2.0 2.1 திருவாரூர் அருகே திருநாட்டியத்தான்குடியில் 1300 ஆண்டுக்கு முற்பட்ட புத்தர், நாயனார் சிலைகள் கண்டெடுப்பு, தினமலர், 20.3.2003
  3. Rare sculptures found in Tiruvarur district, The Hindu, 20.3.2003

இவற்றையும் பார்க்க[தொகு]