மோதாசனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மோதாசனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 229

பெயர்க் காரணம்[தொகு]

காதலரிடையே நிகழும் மோதலை ("மோதுதலை") இவர் பாடியுள்ளதால் பாடற்பொருளால் இவருக்கு மோதலாசனார் எனக் குறுந்தொகை நூலைத் தொகுத்தவர் பெயர் சூட்டியுள்ளார்.

பாடல் சொல்லும் செய்தி[தொகு]

"காதல் செவிலியர்" செய்துகொள்ளும் "ஏதில் சிறுசெரு" பற்றி இவர் தம் பாடலில் குறிப்பிடுகிறார். செவிலியர் குழந்தையைப் பேணி வளர்ப்பர். இவர்கள் காதல் குழந்தையை வளர்க்கும் செவிலியர். யார் அவர்கள்? காதலனும், அவனுடன் அவனது ஊருக்குத் தன் பெற்றோருக்குத் தெரியாமல் செல்லும் காதலியும் ஆகிய இருவர்தான்.

அவர்களுக்குள்ளே 'ஏதில் சிறுசெரு'. காரணம் இல்லாத சிறு சண்டை. செல்லும் பாலைநில வழியில் இவர்களுக்குள்ளே நடந்த சிறு சண்டையைக் கண்டவர்கள் தமக்குள் பேசிக்கொள்கின்றனர்.

இவன் இவளது தலைமுடி ”ஐம்பாலைப்” பற்றுகிறான். இவள் இவனது தலைமுடி ”ஓரி”யைப் பற்றுகிறாள். இருவருக்கும் வலிக்கிறது. எனவே இருவரும் தம் பிடியை விலக்கிக்கொள்கின்றனர்.

(காதலர் இணைந்த வாழ்வில் ஒருவரை ஒருவர் துனபுறுத்தினால் அது அவர்கள் இருவருக்கும் துன்பமாக விளையும் என்னும் உண்மையைக் கண்டு தெளிவு பெறுகின்றனர்.)

”பாலே! நீ நல்லைமன்” - இந்தப் பிரிவுப் பாலும், செருப் பாலும் நல்லதுதான் என்று கண்டவர்கள் பேசிக்கொள்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோதாசனார்&oldid=2718216" இலிருந்து மீள்விக்கப்பட்டது