தொழில்நுட்பப் பரபரப்புப் புனைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொழில்நுட்பப் பரபரப்புப் புனைவு (techno thriller) என்பது ஒரு வகைப் புனைவுப் பாணி. போர் புனைவு, உளவுப் புனைவு, அறிபுனை போன்ற புனைவுப் பாணிகளின் கூறுகளை உள்ளடக்கி உருவானது. இவ்வகைப் படைப்புகளில் தொழில்நுட்ப விஷயங்களுக்கு, குறிப்பாக ராணுவத் தொழில்நுட்ப விஷயங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். உளவு, ஆயுதங்கள், பன்னாட்டு அரசியல், தொலைதொடர்பு போன்ற விஷயங்களைப் பற்றி கதையோட்டத்தோடு மேலதிக விவரங்கள் தரப்பட்டிருக்கும்.

மைக்கேல் கிரைட்டன் மற்றும் டாம் கிளான்சி இருவரும் இப்பாணியின் தந்தையராகக் கருதப்படுகின்றனர். கிரைட்டனின் தி ஆண்ட்ரோமீடா ஸ்ட்ரென் (The Andromeda Strain), கிளான்சியின் தி ஹண்ட் ஃபார் தி ரெட் அக்டோபர் (The Hunt for the Red October) ஆகிய புதினங்கள் இப்பாணியின் முன்னோடிப் படைப்புகளாகக் கருதப்படுகின்றன. இவை வெளியாவதற்கு முன்பே இயான் பிளெமிங் போன்றோர் தொழில்நுட்பங்களை மையப்படுத்தி பரப்பரப்புப் புனைவுகளை படைத்திருந்தாலும், இவ்விரு புத்தகங்களே இப்பாணிக்கென தனியொரு அடையாளத்தை ஏற்படுத்தின. தற்சமயம் இவ்விரு எழுத்தாளர்களைத் தவிர லாரி பாண்ட், பேட்ரிக் ராபின்சன், டேல் பிரெளன், டான் பிரெளன், ஸ்டீபன் கூண்ட்ஸ், டகளல் பிரெஸ்டன், லீ சைல்ட் ஆகியோரும் இப்பாணியின் முக்கிய எழுத்தாளர்களாகக் கருதப்படுகிறார்கள்.