ஸ்ரீ நாராயண தர்மம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீ நாராயண தர்மம்
நூல் பெயர்:ஸ்ரீ நாராயண தர்மம்
ஆசிரியர்(கள்):ஸ்ரீ நாராயணகுரு
(தமிழாக்கம்: பி.சி.போஸ், சி. நல்லசிவம்)
வகை:ஆன்மீகம்
துறை:ஸ்ரீ நாராயண தர்மம்
இடம்:ஸ்ரீ நாராயணகுரு தர்ம மடம் ,
மருத்துவாமலை
பொற்றையடி-629 703
கன்னியாகுமரி மாவட்டம்,
தமிழ்நாடு
மொழி:தமிழ்
பக்கங்கள்:78
பதிப்பகர்:மருத்துவாமலை பப்ளிகேசன்ஸ்
பதிப்பு:2004
ஆக்க அனுமதி:பதிப்பாளருக்குரியது

கேரளாவில் ஈழவர் சமுதாயத்தில் பிறந்து கேரளா முழுவதும் பரவியிருந்த சாதிக் கொடுமைகளை எதிர்த்து சமூகச் சீர்திருத்தக் கொள்கைகளைப் பரப்பிய ஸ்ரீ நாராயணகுரு ஆன்மீகத்திலும் சிறப்புடன் விளங்கினார். இவர் தனது சீடர்களுக்குப் பதில் அளிப்பது போல் ஒரு மனிதன் வாழ்க்கையில் பிறப்பு முதல் என்னென்ன செய்ய வேண்டும் என்கிற கருத்தை தன் உபதேசங்கள் வழியாகத் தெரிவிக்கிறார். இவை அனைத்தும் தொகுக்கப்பட்டு ஸ்ரீ நாராயண தர்மம் என்ற சிறு நூலாக 78 பக்கங்களில் இந்திய மதிப்பில் ரூபாய் 45 விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

நூலாசிரியர்[தொகு]

ஸ்ரீ நாராயணகுரு அவர்களின் அருளுரைகளின் சுருக்க வடிவத்தை மலையாளம் மொழியிலிருந்து தமிழாக்கம் செய்திருப்பவர்கள் பி.சி.போஸ் மற்றும் சி.நல்லசிவம் ஆகியோர்.

முன்னுரை[தொகு]

இந்நூலைத் தமிழாக்கம் செய்த பி.சி.போஸ் மற்றும் சி.நல்லசிவம் ஆகியோர் முன்னுரையுடன் மலையாள மொழி நூலான "ஸ்ரீ நாராயண தர்மம்" நூலின் ஆசிரியர் தோட்டம் ராஜசேகரன் முன்னுரையும் தமிழாக்கம் செய்து வழங்கப்பட்டுள்ளது.

முகவுரை[தொகு]

மருத்துவாமலை சதயபூஜா சங்கம் டிரஸ்ட் தலைவர் அவர்களின் முகவுரை தரப்பட்டுள்ளது.

சிறு குறிப்புகள்[தொகு]

கன்னியாகுமரி மாவட்டம், பொற்றையடி அருகிலுள்ள மருத்துவாமலையும் ஸ்ரீ நாராயணகுரு தர்ம மடமும் குறித்த ஒரு பக்கக் குறிப்பும், 1855 முதல் 1928 வரை வாழ்ந்த ஸ்ரீ நாராயணகுரு குறித்த தகவல்கள் இரண்டு பக்கங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளன. சிவகிரியில் ஸ்ரீ நாராயணகுருவின் மகா சமாதி மண்டபம், ஸ்ரீ நாராயணகுருவின் படம் ஆகியவை அடுத்த பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.

பொருளடக்கம்[தொகு]

மங்கலா சரணத்துடன் துவங்கும் இந்நூலின் ஒரு பகுதியில் சமஸ்கிருதம் மொழியில் உருவாக்கப்பட்ட சுலோகங்கள் தமிழில் தரப்பட்டுள்ளது. மற்றொரு பகுதியில் அந்த சமஸ்கிருத சுலோகங்களுக்கான விளக்கம் தமிழில் வழங்கப்பட்டுள்ளது. கீழ்க்காணும் பத்து அத்தியாயங்களில் அவை வழங்கப்பட்டுள்ளன.

  • முதல் அத்தியாயத்தில் கேரளாவில் இருக்கும் வர்க்கலை , சிவகிரி ஆகியவை குறித்து சொல்லப்பட்டு ஸ்ரீ நாராயணகுரு அவருடைய சீடர்களின் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் வழியாக மனிதர்கள் வாழ்வில் காண வேண்டிய தர்ம தரிசனம், அதன் வடிவம், அதை அடையக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், அதனால் அடையும் நன்மைகள் போன்றவை சொல்லப்பட்டுள்ளன.
  • இரண்டாம் அத்தியாயத்தில் தர்மத்தையும் அதர்மத்தையும் பகுத்தறிதல் எனும் தலைப்பில் எங்கும் நிறைந்த தர்மம், சாதி , மதம் , மதம் ஒன்றே, ஒன்றே தேவன் என்கிற கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
  • மூன்றாம் அத்தியாயத்தில் பொது தர்ம நியதிகள் எனும் தலைப்பில் அஹிம்சை , சத்தியம் , பிறர் பொருள் களவாமை, விபச்சாரம், கள்ளுண்ணாமை போன்ற ஐந்து வகை தர்மங்கள் (தர்ம பஞ்சகம்), உடல் சுத்தம், வாக்கு சுத்தம், மன சுத்தம், புலன்கள் சுத்தம், வீட்டு சுத்தம் ஆகிய ஐந்து வகை சுத்திகள் (சுத்தி பஞ்சகம்) போன்றவை விளக்கப்பட்டிருக்கின்றன.
  • நான்காம் அத்தியாயத்தில் பிறப்பு எனும் தலைப்பில் பேறுகால சிகிச்சை , பெயர் சூட்டுதல், சோறூட்டுதல், குழந்தை பராமரிப்பு , கல்வி கற்பித்தல் போன்றவை குறித்து விளக்கப்பட்டுள்ளன.
  • ஐந்தாவது அத்தியாயத்தில் ஆஸ்ரம தர்மம்" எனும் தலைப்பில் ஆசிரம தர்மங்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளன.
  • ஆறாவது அத்தியாயத்தில் பிரம்மச்சரிய ஆஸ்ரமம் எனும் தலைப்பில் பிரம்மச்சரியம் , கல்வி பயிலும் காலம் போன்றவை விளக்கப்பட்டுள்ளன.
  • ஏழாவது அத்தியாயத்தில் இல்லற தர்மம்"' எனும் தலைப்பில் இல்லற தர்மம், திருமணம் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.
  • எட்டாவது அத்தியாயத்தில் ஐம்பெரும் யாகங்கள் எனும் தலைப்பில் பூப்புச் சடங்குகள், கர்ப்ப கால பாதுகாப்பு, இல்லறத்தின் சிறப்பு , தாம்பத்யம் , மறுமணம் , இல்லற தர்மம், நல்ல மனைவி போன்றவை குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளன.
  • ஒன்பதாவது அத்தியாயத்தில் நீத்தார் கடன் எனும் தலைப்பில் இறந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய கடைசிக் கடமைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளன.
  • பத்தாவது அத்தியாயத்தில் சந்நியாசம் எனும் தலைப்பில் சமதர்ம சங்கம்,தியான யோகம் கடைப்பிடித்தல், சன்னியாசத்தின் பெருமை ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.

- மனிதன் ஒரு குழந்தையாகப் பிறந்ததிலிருந்து கடைசியாக மரணமடைந்த பின்பும் குறிப்பிட்ட கடமைகளை செய்ய வேண்டியுள்ளது என்று ஸ்ரீ நாராயணகுரு தன் சீடர்களுக்கு அளிக்கும் பதில்கள் வழியாக இந்த நூலின் மூலம் உணர்த்தியிருக்கிறார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீ_நாராயண_தர்மம்_(நூல்)&oldid=3229762" இலிருந்து மீள்விக்கப்பட்டது