ஜாவளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜாவளி (javali, jhāwli) என்பது நாட்டிய இசைக்குப் பயன்படுத்தப்படும் இசை வடிவம் ஆகும். சிருங்கார சாகித்தியத்தை உடையவையாதலால் சிற்றின்ப உணர்ச்சியைத் தூண்டக் கூடிய வகையில் அமைந்திருக்கும். கேட்டவுடனேயே மனதைக் கவரும் இசையில் அமைந்திருப்பதால் யாவராலும் விரும்பப்படுகின்றது.

அமைப்பு[தொகு]

ஜாவளிகளின் அமைப்பு விறுவிறுப்புள்ளதாக அமைந்திருக்கும். பச்சை சிருங்காரத்தை நாயகன், நாயகி, சகி பாவத்தை வெளிப்படுத்தும் ரீதியில் 19ம் நூற்றாண்டில் தோன்றிய உருப்படிகளே ஜாவளிகள். இது நாட்டிய இசையில் உபயோகிக்கப்படுகின்றது. இதன் அமைப்பானது உற்சாகம் ஊட்டக்கூடியதாகவும் சுலபமானதாகவும் இருக்கும். இதன் நடை சாதாரணமாக மத்திம காலத்தில் அமைந்திருக்கும்.

ஜாவளிகளின் கானக்கிரமம் கிருதியைப் போன்றது. பேச்சு வழக்கமுள்ள மொழியிலேயே இவை இயற்றப்பட்டுள்ளன. தாதுக்கள் சாதாரணமாக மத்திம கால நடையில் இருக்கும்.

அம்சங்கள்[தொகு]

சில ஜாவளிகள் சங்கதிகளுடன் காணப்படுகின்றன. இந்துஸ்தானி இசையில் உள்ள கஜல் என்னும் உருப்படி ஜாவளியைப் போன்றதே ஆகும். தெலுங்கு, கன்னடம், முதலிய மொழிகளில் ஜாவளிகள் உள்ளன. ஜாவளியானது பல்லவி, அனுபல்லவி, சரணம் முதலிய அங்கங்களைப் பெற்றுள்ளது.சில ஜாவளிகள் அனுபல்லவி இல்லாமலும் இருக்கின்றன. சாதாரண இராகங்களிலும் ஜாவளிகள் அமைந்துள்ளன எனினும் தேசிய இராகங்களிலும் கவர்ச்சிகரமாக ஜாவளிகள் அமைந்துள்ளன.

ஜாவளி என்னும் இச்சொல் கன்னடச் சொல்லான ஜாவடி என்பதிலிருந்தே உதித்துள்ளது. இதன் விளக்கம் என்னவெனில் ஒரு வகையான தூரசாரமான கவிதை என்பதாகும்.

ஜாவளிகளை இயற்றியோர்[தொகு]

  • தர்மபுரி சுப்பராயர்.
  • பட்டாபிராமய்யர்.
  • பெங்களூர் சந்திரசேகர சாஸ்திரி.
  • பட்டணம் சுப்பிரமண்ய அய்யர்.
  • இராமநாதபுரம் சிறீனிவாச அய்யங்கார்.
  • திருப்பதி நாராயணசாமி.
  • ஐதராபாத் வெங்கடகிரியப்பா.
  • தஞ்சை சின்னையா
  • பெரியசாமித் தூரன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாவளி&oldid=3204763" இலிருந்து மீள்விக்கப்பட்டது