பறநாட்டுப் பெருங்கொற்றனார்
பறநாட்டுப் பெருங்கொற்றனார் சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு 323.
பறநாடு என்பது பறம்புநாடு. இது 300 ஊர்களைக் கொண்டது. சங்ககாலத்தில் இதன் அரசன் பாரி.
பாடல் சொல்லும் செய்தி[தொகு]
அவன் பிரிந்துள்ள காலத்தில் அவள் ஏங்குகிறாள். தோழி அவளைத் தேற்றுகிறாள். அவளைத் தேற்றச் சொல்பவை:
கற்பு மேம்படுவி! இதோ இதனைக் காண வருக. மழைப்புயல் உன் கூந்தலைப்போல் கால் இறங்கியுள்ளது. அவர் இவ்வூர் அலர் கெட வருவர் என்பது வாய்மையாகிவிட்டது. - என்கிறாள்.
கற்பு மேம்படுவி!
- கற்பில் மேம்பட்டு விளங்குபவளே
இடி
- பாம்பின் பை பட இடிக்கும். இடிமுழக்கம் கேட்டால் படமெடுத்தாடும் பாம்பின் படம் தானே சுருங்கிவிடும்.
பையத் தடவரல் ஒதுக்கம்
- தலைவி மெல்ல மெல்லத் தடவித் தடவி அடியெடுத்து நடப்பாளாம்.
புயல்
- தலைவியின் கூந்தலைப் போலக் கால் வீழ்த்ததாம்
- மூங்கில் காட்டில் யானைக்கூட்டம் செல்வது போல வானில் செல்கிறதாம்.
ஆலி அழிதுளி
- வானத்தில் உலவும் மழைமேகத்தில் நீர்த்துளிகள் உருண்டு திரண்டு அழிந்து சிறுசிறு துளியாக உள்ளனவாம்.