பேச்சு:வாஸ்து சாஸ்திரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

The approach of the article considering vaasthu sastra as a science may not be acceptable for all readers.Instead of terming it as a science, you can call it as a belief followed by some people.--ரவி (பேச்சு) 12:21, 21 ஏப் 2005 (UTC)

மயூரநாதன் எழுதியுள்ள இக்கட்டுரையில் நிறைய செய்திகள் உள்ளன. படங்களையும் மிகச்சிறப்பாக சேர்த்துள்ளார். அனால், வாஸ்து சாஸ்திரம் என்பது மிக அண்மைக்காலத்திலே மிக விரைவாய்ப் பரவிய ஒரு மோகம். இது வேதகாலத்து அறிவியல் என்று பலராலும் எழுத்தப்படுகின்றது. இதன் ஆணித்தரமான ஆதாரங்கள் எங்கும் எளிதாக கிடப்பதில்லை. சாதியின் படி முறைகள் கொடுப்பட்ட்டுள்ளன. பிராமணன் வீடாயின் கிழக்கே படுக்கை அறை இருக்க வேண்டும், சூத்திரன் வீடானால் மேற்கே படுக்கை அறை இருக்க வேண்டும் என்றெல்லாம் எழுதப்பட்டுளது (சூத்திரன் படுக்க வரும் பொழுது அவன் படுக்கை அறை வெப்பம் மிகுந்ததாக இருக்கும்). சில அடிப்படை பொது அறிவுக் கருத்துக்கள் இருக்க நேர்ந்தாலும், இதனை ஏதோ அறிவியல் போலும் எழுதுவது முறையல்ல என்பது என் கருத்து. வாஸ்து சாஸ்திரத்தின் காலமும் தெளிவாகத் தெரியவில்லை. 1980களிலே திடீர் என்று முளைத்தோ அல்லது பரப்ப்பட்டோ வருகின்ற ஒரு மோகம் இந்த வாஸ்து சாஸ்திரம். இதன் அடிப்படைகளை, அது தரும் ஆணித்தரமான ஆதாரங்களோடும் நடு நிலையோடும் யாரும் கூறினால் நல்லது.--C.R.Selvakumar 16:23, 16 ஜூலை 2006 (UTC)செல்வா

இந்தக் கட்டுரை பற்றிய ரவியின் குறிப்பை நான் இன்றுதான் கவனித்தேன். செல்வாவும் ரவியின் கருத்தையே கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இக்கட்டுரையில் வாஸ்து சாஸ்திரம் ஒரு அறிவியல் என்னும் பொருள் தொனிக்க எழுதப்பட்டிருப்பதாக இருவரது கருத்துக்களும் குறிப்பிடுகின்றன. கட்டுரையில் வரும் பழமையான அறிவுத்துறைகளில் ஒன்றாகும் என்ற தொடரே மேற்படி கருத்து உருவானதற்கான அடிப்படை என எண்ணுகிறேன். அறிவியல்துறை (science), என்பதும் அறிவுத்துறை என்பதும் ஒன்றல்ல. அறிவுத்துறை என்பது field of knowledge எனப் பொருள்படும். வாஸ்து சாஸ்திரம் ஒரு அறிவியல் துறையாக இல்லாவிடினும் இது ஒரு field of knowledge என்பதை ஏற்றுக் கொள்வீர்கள் என எண்ணுகிறேன். கட்டுரையின் பிற பகுதிகளிலும் இது ஒரு அறிவியல் என்ற பொருள் தொனிப்பதாகத் தெரியவில்லை. நிற்க இன்னும் முற்றுப்பெறாத இக்கட்டுரை வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படைகளை விளக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதேயன்றி, வாஸ்து சாஸ்திரத்தை மக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது அல்ல.

வாஸ்து சாஸ்திரம் தொடர்பாக அண்மைக்காலத்தில் ஒரு மோகம் ஏற்பட்டுள்ளது என்பதை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம் எனினும், வாஸ்து சாஸ்திரம் அண்மைக் காலத்தது என்னும் கருத்து சரியானது அல்ல. இன்று பலர் வாஸ்து சாஸ்திரத்தின் தொடக்கத்தை அதர்வ வேதத்தில் அடையாளம் காண முயல்கின்றனர். இவ்வேதத்தில் இது தொடர்பான கருத்துருக்களைக் காணமுடிந்தாலும், வாஸ்து சாஸ்திரத்தின் மூலத்தை இந்தியாவின் ஆரியருக்கு முற்பட்டகாலப் பண்பாட்டுக் கூறுகளிலேயே தேட வேண்டுமென்பது எனது கருத்து. வேதங்களுக்குப் பின்னர் மிகப் பழைய காலத்திலேயே உருவான இதிகாசங்கள், புராணங்கள் போன்றவற்றிலும், கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பிருஹத் சம்ஹிதை போன்ற நூல்களிலும் வாஸ்து சாஸ்திரம் தொடர்பான விரிவான விளக்கங்கள் உள்ளன. இந்து மதத்தின் தமிழ் நாட்டுக்குரிய தத்துவமான சைவசித்தாந்தத்துக்கு அடிப்படையான ஆகமங்களில் வாஸ்து சாஸ்திரம் தொடர்பான பெருமளவு விடயங்கள் உள்ளன. இதனை அடிப்படையாக வைத்தே தமிழ் நாட்டில் மானசாரம், மயமதம் போன்ற இந்தியாவிலும். இலங்கை, கம்போடியா, இந்தோனீசியா போன்ற அயல் நாடுகளிலும் பயன்படுத்தப்பட்ட சிற்பநூல்கள் உருவாயின. இவை சோழர் காலத்தில் பத்தாம் நூற்றாண்டை அண்டி எழுதப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. தஞ்சைப் பெரிய கோயில் உட்படத் தமிழ் நாட்டின் பாரிய கோயில்களும், பண்டைய நகரங்கள் பலவும் மேற்படி நூல்களின் அடிப்படையிலேயே கட்டப்பட்டவை.

வாஸ்து சாஸ்திரம் அல்லது சிற்ப நூல் ஒரு science இல்லாவிட்டாலும் அது இந்திய தத்துவ ஞானத்தின் ஒரு பகுதி. பல ஆயிரம் வருட இந்திய சிந்தனைப் போக்கினதும், உலக நோக்கினதும், அடிப்படையில் உருவானது. பல ஆயிரம் வருடங்கள் புழங்கிவருகின்ற இது போன்ற விடயங்களில், செல்வா குறிப்பிட்டது போன்ற குறைபாடுகள் இல்லாமல் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. இது போன்ற corruptions இன்றைய அறிவியலை முதன்மைப்படுத்தும் உலகிலும் இருக்கத்தான் செய்கின்றன. வாஸ்து சாஸ்திரம் சாதி அடிப்படையிலான விதிகளைக் கொண்டிருப்பது போல அறிவியலின் பயனை நுகர்வதிலும் பாகுபாடுகள் இருக்கின்றன. சில வல்லரசுகள் மட்டும் அணு ஆயுதங்களைத் தயாரித்து வைத்துக்கொள்ளலாம், மற்ற நாடுகள் அவ்வாறு செய்யக்கூடாது என்ற ஒப்பந்த உள்ளடக்கம் எந்த அறிவியலைச் சார்ந்தது என யாராவது கூற முடியுமா? எந்தக் காலத்திலும், எந்த அறிவையும், அதிகார பலம் கொண்டவர்கள் தங்கள் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது வரலாற்று உண்மை.

வாஸ்து சாஸ்திரத்தை ஒரு அறிவியல் என்றோ அல்லது எல்லோரும் கைக்கொள்ளவேண்டிய ஒரு விடயமென்றோ இதனை நான் அணுகவில்லை. இது இந்தியப் பண்பாட்டுக் கருவூலத்தின் ஒரு முக்கியமான கூறு என்ற அளவிலேயே இது தொடர்பான எனது நோக்கு உள்ளது. இந்தப் பிரபஞ்சம் பற்றியும், உலகத்தைப் பற்றியும், மனிதர்களைப் பற்றியும், இவற்றுக்கு இடையேயான தொடர்புகள் பற்றியுமான இந்தியப் பார்வைக்கும், மேற்கத்திய பார்வைக்கும் இடையே பாரிய வேறுபாடுகள் உண்டு. நுணுகி ஆராய்ந்தால் இந்தியக் கருத்துருக்கள், மேற்கத்திய கருத்துருக்களுக்கு எந்தவகையிலும் குறைந்தவை அல்ல என்பதை அறிந்து கொள்ள முடியும். எனினும் ஒன்றின் அளவுகோலை வைத்துக்கொண்டு மற்றதை மதிப்பீடு செய்யமுடியாது. அதாவது, அறிவியல் அடிப்படையில் வாஸ்து சாஸ்திரத்தை மதிப்பிட முயல்வது இந்தியப் பண்பாட்டின் ஆன்மாவைக் கண்டுபிடிக்க உதவாது. Mayooranathan 19:23, 16 ஜூலை 2006 (UTC)

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி[தொகு]

மயூரநாதன், உங்கள் விரிவான கருத்துக்களுக்கு நன்றி. வாஸ்து சாஸ்திரம் பற்றிய உங்களுடைய அழகான கட்டுரையை நான் மிகவும் மதிக்கிறேன். உங்கள் ஆக்கங்கள் யாவுமே மிகவும் கருத்துடனும், செய்திச் செறிவுடனும் இருப்பது கண்டு நான் மிகவும் மகிழ்பவன். இக்கட்டுரையைப் பற்றிய என் கருத்துக்களை பின்னர் எழுதுறேன். இதைப் பற்றி மேலும் கருத்துக்கள் சொல்வதில் பல சிக்கல்கள் உள்ளன (கருத்துக்கள், தவறான கோணங்களில் உள்வாங்கப்படலாம் என்பதால். பின்னர் சுருக்கமாக எழுதுகிறேன்). --C.R.Selvakumar 15:38, 17 ஜூலை 2006 (UTC)செல்வா

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வாஸ்து_சாஸ்திரம்&oldid=47926" இலிருந்து மீள்விக்கப்பட்டது