துரைச்சாமி (சின்ன மருது மகன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சின்ன மருது மகன் துரைச்சாமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

துரைச்சாமி (இறப்பு 25. மே. 1820) என்பவர் சிவகங்கைச் சீமையில் ஆங்கிலக் கிழக்கந்தியக் கம்பெனியர்க்கு எதிராக 1785 முதல் 1801 வரை போராடிய சின்ன மருதுவின் மகன்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

சின்ன மருது மகன் துரைச்சாமியின் இயற்பெயர் முத்து வடுக நாத துரை. பின்னர் அந்தப் பெயர் துரைச்சாமி என மருவியது என்று சிவகங்கை அம்மானை எனும் நூல் மூலம் அறிய முடிகிறது. துரைச்சாமி உட்பட 11 பேரைப் பிடித்துக் கொடுத்தால் 1000 கூலிச் சக்கரங்கள் (18-ஆம் நூற்றாண்டு நாணயம்) பரிசாக வழங்கப்படும் என்று ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனித் தளபதி கர்னல் அக்னியூ 1801, அக்டோபர் 1-இல் சிவகங்கை குடிமக்களுக்கு ஒரு பொது அறிவிப்பைப் பிரகடனப் படுத்தினார்.

மருது சகோதரர்கள் 1801, அக்டோபர் 24-இல் தூக்கிலிடப்பட்டனர். அதன் பின்னர் 15 வயதே ஆன துரைச்சாமி உட்பட 73 பேர் மலேயாவின் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவிற்கு (இன்றைய பினாங்கு) 1802, பிப்ரவரி 11-இல் நாடு கடத்தப் பட்டனர்.[1]

பினாங்கில் துரைச்சாமி[தொகு]

1818-ஆம் ஆண்டு தளபதி வெல்ஷ் (Colonel Welsh) பினாங்கிற்குச் சென்றபோது உடல் நலம் குன்றிய தோற்றத்துடன் காணப்பட்ட துரைச்சாமியைக் காண நேர்ந்தது. துரைச்சாமியின் அந்தத் தோற்றத்தைக் கவனித்த தளபதி வெல்ஷ் தன்னுடைய இதயத்தில் கத்தி பாய்ந்தது போல இருந்தது என குறிப்பிடுகின்றார்[2]

துரைச்சாமியின் இறுதி நாட்கள்[தொகு]

1891, மே 18-ஆம் நாள், துரைச்சாமியின் மகன் மருது சேர்வைகாரன் என்பவர் மதுரைக் கலெக்டரிடம் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்த மனுவில் துரைச்சாமியின் இறுதி நாட்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

துரைச்சாமி பினாங்கில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டார். அவர் ஆங்கில அரசிடம் பாதுகாப்புக் கோரி மதுரையில் தங்கியிருக்க அனுமதி கேட்டு இருந்தார். அதன்படி மதறாசில் இருந்து மதுரைக்கு அருகில் உள்ள வண்டியூருக்கு வந்தபோது துரைசாமிக்கு உடல் நலமில்லாமல் போனது. நோய்வாய்ப் பட்ட துரைசாமி சிவகங்கைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவர் வைகாசி 11 (25. மே. 1820) அன்று காலமானார். அவரது உடல் காளையார்கோயில் கொண்டு செல்லபட்டு அடக்கம் செய்யபட்டது. என்று அவருடைய மகன் குறிப்பிடுகின்றார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. கே. ராஜையன் எழுதிய ஆங்கில நூல் The South Indian Rebellion
  2. Welsh’s Military Reminiscences
  3. The Madura District Records letter dated 18-5-1891 volume 4669- pages 99 & 100
  4. "நாடு திரும்பினாரா சின்ன மருதுவின் மைந்தன்?". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-02-21.