கர்நாடக வீர சைவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கர்நாடக வீர சைவம் பசவண்ணர் என்ற கர்நாடக யோகியான பசவரால் உருவாக்கப்பட்ட வீரசைவத்தின் பிரிவு. ஆனால் அதற்கு முன்னரே வீரசைவத்தின் சில வகைகள் தமிழகத்தில் இருந்து வந்தன.

வரலாறு[தொகு]

பசவண்ணருக்கு காலத்தால் முற்பட்ட யோகி ராமையா என்பவர் அவரது முன்னோடி எனப்படுகிறது. கதம்ப நாட்டு அரசன் காமதேவனின் தார்வார் பகுதியை சார்ந்த சோமேஸ்வரன் கோவிலில் உள்ள கல்வெட்டு ஆதாரமாகச் சுட்டிகாட்டப்படுகிறது. இதில் யோகி ராமையா ஜைன மத துறவிகளோடு வாதப்போர் செய்து தோற்று போனதாகவும் அதனால் தன் தலையை தானே துண்டித்து கொண்டதாகவும், சிவபெருமான் அவருக்கு மீண்டும் உயிர் தந்ததாகவும் இதனை அறிந்த பிஜ்ஜலன் என்ற அரசன் பாராட்டி விருந்தளித்து பல கிராமங்களை நிவந்தமாக அளித்தாகவும் எழுதப்பட்டு இருக்கிறது.

பசவபுராணம் என்ற நூல் சிவபெருமானின் அகோரம், தத்புருஷம், சத்யோஜாதம், வாமதேவம் , ஈசானம் ஆகிய ஐந்து முகங்களில் இருந்து ஏகோராமர் பண்டித ராத்லாரர், இரேவனர், முரலர், விஸ்வராத்யாயர் ஆகிய ஐந்து ஞானிகள் பசவண்ணருக்கு முற்பட்டே தோன்றினர் என்கிறார்கள்.

வீரசைவ கோட்பாடுகள்[தொகு]

வீர சைவ நெறியை பின்பற்றுபவர்களை லிங்காயதர் என்று அழைக்கிறார்கள் அதாவது இதற்கு லிங்க உடம்பினர் என்று பொருள் சொல்லலாம் தனது உடலின் ஒரு பகுதியாக சிவலிங்கத்தை இவர்கள் எப்போதும் வைத்திருப்பார்க்ள். வீர சைவர்களுக்கு லிங்காசாரம் என்ற லிங்க ஒழுக்கம், சதாசாரம் என்ற தன்னிலை ஒழுக்கம் சிவாசாரம் என்ற சிவ ஒழுக்கம் விருத்தியாசாரம் என்ற பணி ஒழுக்கம், கானாசாரம் என்ற சமுக ஒழுக்கம் ஆகிய ஐந்துவகை ஒழுக்கங்கள் வலியுறுத்தப்படுகிறது.

லிங்காசாரம் என்பது மத ஒழுக்கம் என்பது. வீரசைவன் பிறந்து சில மணி நேரங்களிலேயே அவன் கழுத்தில் சிவலிங்கம் அணிவிக்கப்படுகிறது. அது அவன் சாவு வரையிலும் கூடவே வரும். ஜாதிவேறுபாடு, தீண்டாமை, தேவையற்ற சடங்குகள் போன்றவற்றை விலக்குகிறது. சகல உயிர்களும் சிவனின் அம்சம் இருப்பதினால் அதை பேதப்படுத்தி காண்பது பாவம்.

சதாசாரம் என்பது நல்லொழுக்கம். அது பொதுவான ஒழுக்க நெறிகளால் ஆனது. சிவாசாரம் என்பது சிவபக்திக்கான நெறிகள். விருத்தியாசாரம் என்பது அன்றாட செயல்களில் தொழில்களில் உள்ள ஒழுக்கமாகும். கணாசாரம் என்பது ஒரு குழுவாக லிங்காயதர்கள் வாழ்வதற்கான நெறிகளைப் பேசுகிறது. இது தவிர குரு, லிங்கம், சங்கமம் திருவடி துலக்கல், திருவமுது, திருநீறு, ருத்ராட்சம் மந்திரம் என எட்டுவகையான காப்பு முறைகளும் வீர சைவத்தில் சொல்லப்படுகிறது.

ஆறுவகைபயிற்சி வீரசைவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஷட்தளம் என்ற பரிபாஷையில் வீரசைவ ஞானிகள் அழைக்கிறார்கள் . தினசரி லிங்கபூஜை செய்வது போன்றவை இதிலடங்கும். அவ்வாறு தினமும் வைத்திருக்கும் சிவலிங்கத்திற்கு இஷ்டலிங்கம் என்று பெயர்.

வீரசைவம் என்பது கர்நாடக மாநிலத்தில் பெருவாரியான மக்களால் பின்பற்றப்பட்டாலும் தமிழகத்தில் கும்பகோணம், காஞ்சிபுரம், மதுரை, திருப்பரக்குன்றம், சேலம், திருச்சி, தஞ்சை, கோவை, சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களில் பல திருமடங்கள் நிறுவப்பட்டு வீரசைவ நெறி கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இருந்து பரப்பப்பட்டு வருகிறது. 11-ம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த சோழ பேரரசின் ராஜகுருவும், அரசவையின் தலைமை புலவரான கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் வீீரசைவம் பின்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரியை அடுத்துள்ள பொம்மபுரம் திருமடமும், திருக்கோவிலுர் கீழையூரிலுள்ள ஞானியார் திருமடம், சிதம்பரம் மௌனசுவாமி தேசிகர் திருமடமும் வீரசைவ நெறியை பரப்பும் கேந்திரங்கள் ஆகும். துறைமங்கல சிவபிரகாசர், திருப்போரூர் ஸ்ரீமத் சிதம்பரசுவாமிகள் , சாந்தலிங்க அடிகளார், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஆகிய தமிழ்ப் பெரியார்களும் இந்த மரபில் வந்த ஞானிகள்.

வீர சைவ மரபில் ஜங்கமம் என்ற கோட்பாடு மிகவும் புகழ்வாய்ந்ததாகும். இதற்கு நேரிடையான பொருள் அசைவது என்பதாகும். இதனாலேயே இந்த நெறிவழியில் துறவு வாழ்வை மேற்கொள்ளுபவருக்கு ஞானியர் ஜங்கமர் என்ற பட்டப் பெயர் மரபு வழியாக வழங்கப்படுகிறது.

வீர சைவமும் சைவ சித்தாந்தமும்[தொகு]

குழந்தைப் பிறப்புத் தீட்டு, இறப்புத் தீட்டு, மாதவிடாய் தீட்டு, பூப்புத் தீட்டு, எச்சில் பட்ட உணவு அல்லது நீர் அருந்துவதால் ஏற்படும் உணவுத் தீட்டு மற்றும் தாழ்குலத்தவர்கள் தீட்டு என ஐந்து தீட்டுகள் சைவ சித்தாந்தத்தில் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் வீர சைவர்கள் இத்தகைய தீட்டுகளை கடைப்பிடிக்கப்படுவதில்லை. மேலும் வீர சைவர்கள் பால் பேதம் சொல்லிப் பெண்களை ஆன்மீக விடயங்களில் இருந்தும் ஒதுக்கிவைப்பதும் இல்லை.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்நாடக_வீர_சைவம்&oldid=3751808" இலிருந்து மீள்விக்கப்பட்டது