சிங்கப்பூரில் தமிழ் கல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிங்கப்பூர் இந்தியர்களில் அனைத்து மொழி பேசுவோரும் இருந்தபொழுதும் தமிழே சிங்கப்பூரின் ஆட்சிமொழியாகிய ஒரே இந்திய மொழியாகும். அண்மைய கணக்கின்படி சிங்கப்பூரர்களில் 3.1% பேர் தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். தமிழை ஆட்சிமொழியாக கொண்ட மூன்று நாடுகளில் சிங்கபூரும் ஒன்று, மற்றவை முறையே இந்தியா மற்றும் இலங்கையாகும்.

பள்ளிகளில் தமிழ்[தொகு]

சிங்கப்பூர் கல்வி அமைச்சின் இருமொழித் திட்டத்தின் படி, தமிழ் இரண்டாம் மொழிப் பாடமாக அனைத்து பள்ளிகளிலும் வழங்கப்படுகிறது. ஆரம்ப காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து வந்த ஆசிரியர்களால் பாடம் நடத்தப்பட்டது. தற்பொழுது சிங்கப்பூர் வாழ் தமிழர்களை தமிழாசிரியர்களாக பயிற்றுவிப்பதற்காக தேசிய ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் (National Institute of Education,NIE), பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

பல்கலைக்கழக மட்டத்தில் தமிழ்[தொகு]

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகமும், தமிழ் மொழி ஆராய்ச்சி கழகமும் மேலும் பல இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களை வழங்குகின்றன. தமிழாசிரியர் பணிகளுக்கு இங்கு அதிகமானோர் தேவைப்படுவதால் இந்த பட்டங்களை பெறுவதற்கு மாணவர்கள் முனைப்புடன் சேர்கின்றனர்.

ஊடகங்களின் பங்கு[தொகு]

சிங்கப்பூரிய இந்திய மாணவர்களின் மொழித் திறன் சற்றுக் குறைவே என்றாலும், தமிழ் ஊடகங்கள் மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களை தாய் மொழியில் சிறந்தவர்களாக்க அயராது முயல்கிறது. சிங்கையின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு மாணவர் பகுதி என்ற பக்கத்தில் மாணவர்களுக்காக கவிதை, கட்டுரை, கதை எழுதும் போட்டி என பலவகையில் தமிழ் தொண்டாற்றுகிறது. இதற்கு இணையாக மீடியா கார்ப்பின் வசந்தம் தொலைக்காட்சியும் மாணவர்களுக்காக பல பேச்சு மற்றும் கதை சொல்லும் போட்டிகளையும் நடத்துகிறது.