மங்கலதேவி கண்ணகி கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேதமடைந்த நிலையில் கண்ணகி கோயில் பகுதி

மங்கலதேவி கோவில் அல்லது மங்களா தேவி கண்ணகி கோயில் தேனி மாவட்டம், தமிழ் நாட்டில் உள்ளது. இக்கோயில் தமிழ்நாட்டின் கூடலூர் வனப்பகுதியில் பளியங்குடி எனுமிடத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிலும், கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலுள்ள குமுளி என்ற ஊரிலிருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இது கடல் மட்ட அளவில் இருந்து சுமார் 5000 மீட்டர் உயரத்தில் உள்ளது. ஆண்டுக்கு சித்திரா பௌர்ணமி தினத்தன்று ஒரு நாள் மட்டுமே இக்கோயில் பகுதிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இங்கிருந்து ஒரு பக்கம் கிழக்கு மலைத்தொடர்களையும், அதனுடன் தமிழ் நாட்டில் இணைந்திருக்கும் சில கிராமப்பகுதிகளையும் நன்றாக காணலாம்[1].

தல வரலாறு[தொகு]

கோவலனுக்கு பாண்டிய மன்னன் முழுமையாக விசாரிக்காமல் மரண தண்டனை அளித்துக் கொன்று விட்டதறிந்து கோபத்துடன் கண்ணகி பாண்டிய மன்னனின் அரச சபையில் அவன் தவறை உணர்த்தித் தவறாக நீதி வழங்கிய மதுரை மாநகரமே தீப்பற்றி எரியட்டும் என்று சாபம் விட்டு மதுரையை எரித்துவிட்டு அங்கிருந்து வெளியேறி 14 நாட்கள் நடந்து திருச்செங்குன்றம் எனும் மலையில் இருந்து தேவலோகம் சென்றதாக வரலாறு சொல்கிறது. இந்த இடத்தில்தான் மங்கலதேவி கண்ணகி கோயில் இருக்கிறது.

மதுரை மாநகருக்குத் தனது கணவனுடன் கண்ணகி கிழக்கு வாயில் வழியாக நுழைந்தாள். அதன் பின்னர், தனது கணவனை இழந்த கண்ணகி பாண்டியனையும், மதுரையையும் அழித்துவிட்டு மிகுந்த வெறுப்புணர்வுடன் மதுரையின் மேற்கு வாயில் வழியாக மனமுடைந்த நிலையில் தன்னந்தனியாய் மாமதுரையை விட்டுப் புறப்படுகிறாள். (சிலம்பு 53:183) அதன் பின்னர் வையை ஆற்றின் தென் கரையைப் பற்றி மேற்கு நோக்கி நடக்கிறாள் (சிலம்பு 23:185). அவ்வாறு நடந்தவள் வையை ஆறு பரவிப்பாயும் இடமாகிய சுருளிமலைத் தாழ்வாரம் தொடராம் நெடுவேள் குன்றத்தில் அடிவைத்து ஏறி வந்து (சிலம்பு 23:190), மலை மீது இருந்த பூக்கள் பூத்துக் குலுங்கும் மூங்கில் புதர்கள் அடர்ந்த வேங்கைக் கானலில் வந்து நின்று (சிலம்பு 23:191) தெய்வமாகிறாள் (சிலம்பு 24:3). இத்தகையக் காட்சியினைக் குன்றக் குறவர்கள் நேரில் கண்டு அவளைத் தெய்வமாகப் போற்றினர் (சிலம்பு 24: 14, 15). குன்றக் குறவர்கள் இக்காட்சியினை மலைவளம் காண்பதற்காக வந்திருந்த சேரன் செங்குட்டுவனிடம் கூறினர். மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் குன்றக் குறவர்கள் கூறியதைத் தாமும் கண்டதாகக் கூறினார். அதனைக் கேட்ட சேரன் செங்குட்டுவனும் அவன் மனைவியும் கண்ணகிக்குக் கோயில் கட்டத் தீர்மானிக்கின்றனர். அதற்காக இமயமலை சென்று அங்கிருந்து கல்லெடுத்து வந்து இக்கோயிலை அமைத்தான். [2]

மங்கலதேவி பெயர்க்காரணம்[தொகு]

சுமங்கலி பெண்ணானவள் கணவனை இழந்தவுடன் அமங்கலியாகிறாள். அப்படியாயின் கண்ணகி எங்ஙனம் மங்கலதேவியாவாள்? என்கிற வினா அனைவரிடமும் எழும். கணவனை இழந்து கணவன் மீது சுமத்தப்பெற்ற பழியை நீக்கி மதுரையை எரித்துவிட்டு வந்த கண்ணகியைக் கோவலன் மங்கல மடந்தையாக்குகிறான். அவ்வாறு கோவலனால் மீண்டும் மங்கல மடந்தையாக்கப்பெற்று விண்ணுலகெய்திய கண்ணகியே மங்கலம் தரும் மங்கலதேவியாக அனைத்து மக்களாலும் வழிபடப்பட்டுவருகிறாள். விண்ணுலகிலிருந்து பூப்பல்லக்கில் தேவர்களுடன் வந்த கோவலன் கண்ணகிக்கு மங்கலநாண் அணிவித்து விண்ணுலகுக்கு அழைத்துச் சென்றதால் கண்ணகியை மக்கள் மங்கலதேவி என்று அழைக்கிறார்கள். [3]

துர்க்கையம்மன் கோயில்[தொகு]

இக்கோயில் வளாகத்தினுள் கேரள மக்கள் வழிபடும் துர்க்கையம்மன் கோயில் ஒன்றும் உள்ளது. இந்தக் கோயிலில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பூசாரிகள் வழிபாடுகள் நடத்துகின்றனர். தமிழ்நாடு, கேரளா மாநிலங்களைச் சேர்ந்த அனைவரும் இக்கோயிலில் வழிபட்டுச் செல்கின்றனர்.

எல்லைப் பிரச்சனை[தொகு]

தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் இந்த மங்கலதேவி கண்ணகி கோயில் மாநிலங்களுக்கிடையிலான எல்லைப் பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இந்த கண்ணகி கோவிலின் முகப்பு வாயில், மதுரையை நோக்கியே அமைந்துள்ளது. 1817ல், கிழக்கிந்திய கம்பெனி நடத்திய சர்வே மிகவும் பழமையானது. இந்த சர்வேயில், கண்ணகி கோவில் தமிழக எல்லைப் பகுதியிலேயே இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதன் பின்னர், 1893, 1896 -ல் நடத்திய சர்வேயும், 1913, 1915 -ல் வெளியிடப்பட்ட எல்லை காட்டும் வரைபடங்களும் இதையே வலியுறுத்துவதாக உள்ளன. கடந்த 1959 வரை கேரள அரசு, கண்ணகி கோவில் எல்லை குறித்து எவ்வித ஆட்சேபனையும் எழுப்பவில்லை. 1976 -ல், தமிழ்நாடு கேரள அரசு அதிகாரிகள் கூட்டாக நடத்திய சர்வேயிலும், கண்ணகி கோவில் கேரள எல்லையில் இருந்து 40 அடி தூரம் தள்ளி தமிழகப் பகுதியில் இருப்பது ஒப்புக் கொள்ளப்பட்டது.

இதற்கிடையில், கூடலூரில் மங்கலதேவி கண்ணகி கோட்ட சீரமைப்புக்குழு துவக்கப்பட்டு கோவிலைப் புதுப்பிக்க திட்டமிடப்பட்டது. 1976ல் இந்த சீரமைப்புக் குழு,அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியைச் சந்தித்து உதவி கேட்டது. கூடலூரைச் சேர்ந்த, கே.பி.கோபால் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது கண்ணகி கோவிலுக்கு செல்லப் பாதை அமைக்க வேண்டும் என சட்டசபையில் பேசினார். இதனைத் தொடர்ந்து, தமிழகப்பகுதி வழியாக கண்ணகி கோவிலுக்கு ரோடு போடுவதற்காக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த வேலை பாதி நடந்து கொண்டிருந்த போது கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பதவி நீக்கம் செய்யப்பட்டது. இதனால் இத்திட்டம் தாமதப்பட்டது.

இந்த நிலையில் 1976-ல் கேரள வனப்பகுதி வழியாக, தேக்கடியில் இருந்து கண்ணகி கோவிலுக்கு அவசர அவசரமாக கேரள அரசு ஒரு பாதை அமைத்தது. இவ்வாறு போடப்பட்ட இந்தப் பாதையின் வழியாகத்தான், தமிழக பக்தர்கள், கண்ணகி கோயிலுக்கு செல்ல வேண்டியிருந்தது. தற்போது இந்த சாலையை வைத்துக் கேரள அரசு கண்ணகி கோயில் கேரளாவிற்குச் சொந்தமானது என்று உரிமை கொண்டாடுகிறது.

கண்ணகி கோயில் விழா[தொகு]

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வரும் சித்திரை முழுநிலவு தினத்தன்று இந்த மங்கலதேவி கண்ணகி கோயிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர். இந்தக் கோவில் வழிபாட்டிற்காக தமிழ்நாடு, கேரளா மாநில அரசுகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி அதன்படி வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. வருடந்தோறும் இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவும் கேரளா அரசு சார்பில் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தைகள் நடத்தி சித்திரை முழுநிலவு திருவிழாவிற்கு பக்தர்களை அனுமதிக்கின்றனர். மற்ற நாட்களில் இங்கு செல்ல அனுமதி அளிக்கப்படுவதில்லை.

கோயில் நிலை[தொகு]

கேரள அரசின் பலவிதமான கட்டுப்பாடுகளுக்கு இடையே தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் சித்திரை முழுநிலவு தினத்தன்று மட்டும் இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சித்திரை முழுநிலவு தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் செல்ல அனுமதியில்லாததால் இந்தக் கோயில் பராமரிப்பின்றி கோவிலின் பல பகுதிகள் சிதைந்து போய்விட்டன.கோவில் சுவற்றின் கற்கள் உடைந்து போய் கிடக்கின்றன. கண்ணகி சிலையும் சில ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய்விட்டது. தற்போது, சித்திரை முழுநிலவு விழா நேரத்தில் சந்தனத்தால் கண்ணகி முகம் வடிவமைக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.இப்படியே சில காலம் கவனிக்காத நிலை தொடர்ந்தால் வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவில் அழிந்து போகும். கோவிலைக் காப்பாற்ற இரண்டு மாநில அரசுகளும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தக் கோயிலின் பக்தர்களும் தமிழ் மேல் பற்றுடைய ஆர்வலர்களும் தொடர்ந்து கோரி வருகின்றனர்.

மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை[தொகு]

தமிழ்நாட்டில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை என்ற ஒரு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் சித்திரை முழுநிலவு தினத்தன்று கண்ணகி கோயிலில் வழிபாடுகள் செய்வதுடன் அங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் செய்து வருகிறது. இந்த அமைப்பு தமிழ்நாட்டின் கூடலூர் (தேனி) மலைப்பகுதியிலுள்ள பளியங்குடியிலிருந்து கண்ணகி கோயிலுக்குத் தனிப்பாதை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் கண்ணகி கோயில் தமிழ்நாட்டுக்குரியது அதை மீட்க வேண்டும் என்றும் கோரி வருகிறது.

புதிய கோயில்[தொகு]

கூடலூர் பளியங்குடி வழியாக மங்கலதேவி கண்ணகி கோயிலுக்குச் செல்லும் வழியில் கூடலூரைச் சேர்ந்த கந்தவேல் என்பவர் அவருக்குச் சொந்தமான இடத்தில் சில வருடங்களுக்கு முன்பு மங்கலதேவி கண்ணகி கோயில் என்ற பெயரில் புதிய கோயில் ஒன்றைக் கட்டியுள்ளார். இந்தக் கோயிலுக்கும் பக்தர்கள் வந்து வணங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் பழமையான கோயில் தமிழ்நாடு- கேரள எல்லைப்பகுதியில் இருக்கும் நிலையில் புதிய கோயில் பக்தர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். மேலும் இது மங்கலதேவி கண்ணகியைக் களங்கப்படுத்துவதாகவும் அமையும். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினரால் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமைவிடம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. கேரளத்தில் சுற்றுப் பயணம் செல்வோற்கான பயணிகளின் வழிகாட்டி, மோதிலால் (யு கே) புக்ஸ் ஒப் இந்தியா, மற்றும் பலர், வி. சுப்புராஜ்
  2. வரலாற்று நோக்கில் மங்கலதேவி கண்ணகி கோட்டம், கவிஞர் இரா. கணபதிராசன் (எ) தமிழாதன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை (ISBN: 978-93-8897-304-5) மார்ச், 2019, பக் 35, 36, 37
  3. வரலாற்று நோக்கில் மங்கலதேவி கண்ணகி கோட்டம், கவிஞர் இரா. கணபதிராசன் (எ) தமிழாதன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை (ISBN: 978-93-8897-304-5) மார்ச், 2019, பக் 33

இதையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கலதேவி_கண்ணகி_கோவில்&oldid=3710581" இலிருந்து மீள்விக்கப்பட்டது