பிள்ளைத்தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், சமயாசாரியர்கள், புலவர் பெருமக்கள், ஆதீனகர்த்தர், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக உருவகித்துக் கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். குழந்தையாகக் கொண்டது பாவனையே ஆகும். அப்பாட்டுடைத் தலைவர்கள் செயற்கரும் செயல்களைக் குறித்துப் பிள்ளைக்கவியில் பாடவில்லையாயின், நூல் என்னும் அமைப்புக்குள் அமையாமல், வெறும் பருவங்கள் மட்டும் அமைந்திருக்கும். ஆகவே, இதனை உளம் கொள்ளுதல் வேண்டும்.

இஃது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரண்டு பால்களிலும் பாடப்படுவதுண்டு. மூன்று மாதம் முதல் இருபத்தொரு மாதம் வரையான குழந்தையின் வாழ்க்கைக் காலத்தைப் பத்துப் பருவங்களாகப் பிரித்துக் காண்பர். ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் வீதம் அமைத்துப் பாடப்படுவது வழக்கு. ஆண்பால் பிள்ளைத் தமிழ்க்குரிய பருவங்கள் இவை, பெண்பால் பிள்ளைத் தமிழ்க்குரிய பருவங்கள் இவை என்பனவும் முன்பே குறிக்கப்பட்டன.

இலக்கணம்[தொகு]

தொல்காப்பியம்[தொகு]

கடவுள் மீது காமம் கொண்டு பாடுவதும் கைக்கிளை. கைக்கிளையின் புறம் பாடாண் திணை ஆகையால் கடவுள்மீது காமம் கொண்டு பாடுவதும் பாடாண் திணை. இதில் கடவுளைக் குழந்தை வடிவமாக்கிப் பாடும் மரபும் உண்டு எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.[1]
பிள்ளைத்தமிழ் முன்னோடி
தொல்காப்பியத்துக்கு 1200 ஆண்டுகளுக்குப் பின்னர்த் தோன்றிய நூலாயினும் திருமாலைக் குழந்தையாக்கிக்கொண்டு பெரியாழ்வார் பாடும் பாடல்கள் இதற்கு இலக்கியமாகத் திகழ்கின்றன. பெரியாழ்வார் பாடிய இந்தப் பிள்ளைத்தமிழ் பிற்காலப் பிள்ளைத்தமிழ் நூல்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது.[2]

பருவங்கள்[தொகு]

  • ஆண்பாற் பிள்ளைத்தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனும் பத்துப் பருவங்களையுடையது. *பெண்பாற் பிள்ளைத்தமிழில் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, ஆகியவற்றைப் பொதுவாகக் கொண்டு இறுதியிலுள்ள மூன்று பருவங்களுக்கு ஈடாகச் சிற்றில் இழைத்தல், சிறு சோறாக்கல், குழமகன், ஊசல், காமவேள்நோன்பு முதலியவற்றுள் எவையேனும் மூன்றைப் பெற்று வரும் ஆயினும் பெரும்பாலும் நீராடல் அல்லது கழங்கு, அம்மானை, ஊசல் எனும் பருவங்களே அதிகம் இடம் பெறுகின்றன. இதனை
" சாற்றிய காப்புத்தால் செங்கீரை சப்பாணி
மாற்றாரிய முத்தமே வாரானை - போற்றாரிய
அம்புலியே யாய்த்த சிறுபறையே சிற்றிலே
பம்புசிறு தேரோடும் பத்து "

என்ற வெண்பாப் பாட்டியல் நூற்பாவாலும் (பாடல் 7) ,

"சிற்றில் இழைத்தல் சிறுசோறாக்கல்
பொற்பமர் குழமகன் புனைமணி ஊசல்
ஆண்டு ஈறாறதில் இழிற்காமன் நோன்போடு
வேண்டுதல் தானுள விளம்பினர் புலவர்"

என்ற பன்னிரு பாட்டியல் நூற்பாவாலும் (பாடல் 105)

" பின்னைய மூன்றும் பேதையர்க் காகா
ஆடுங் கழங்கு அம்மானை ஊசல்
பாடுங் கவியால் பகுத்து வகுப்புடன்
அகவல் விருத்தத் தாள் கிளையளவாம்" (பாடல்.47)

என்றஇலக்கண விளக்கப் பாட்டியல் நூற்பாவாலும் அறியலாம். பிள்ளைத்தமிழ் பத்து பருவங்களில் தான் அமைய வேண்டும் என்பது வரையறை ஆகும். பெரும்பாலான பிள்ளைத்தமிழ் நூல்கள் இவ்வாறே பாடப்ப்பட்டுள்ளன. ஆயினும் ஆண்டாள் பிள்ளைத்தமிழ் 11 பருவங்களையும், தில்லை சிவகாமியம்மைப் பிள்ளைத்தமிழ் பன்னிரண்டு பருவங்கள் கொண்டதாகவும் பாடப்பட்டுள்ளன.

பருவங்கள் விளக்கம்[தொகு]

தமிழர் பண்பாட்டில் முதல் 2 திங்கள் குழந்தையை வெளியில் கொண்டு வர மாட்டார்கள். எனவே, பிள்ளைத்தமிழ், 3-ஆம் திங்கள் முதல் பாமாலைகளால் தொடுக்கப்படும்.

  1. 3-ஆம் திங்கள்: காப்பு
  2. 5-ஆம் திங்கள்: செங்கீரை
  3. 7-ஆம் திங்கள்: தாலாட்டு
  4. 9-ஆம் திங்கள்: சப்பாணி
  5. 11-ஆம் திங்கள்: முத்தம்
  6. 13-ஆம் திங்கள்: வருகை
  7. 15-ஆம் திங்கள்: அம்புலி
  8. 17-ஆம் திங்கள்: சிற்றில் (ஆண்பால் பிள்ளைத்தமிழுக்குரியது) / நீராடல் (பெண்பால் பிள்ளைத்தமிழுக்குரியது)
  9. 19-ஆம் திங்கள்: சிறுபறை (ஆண்பால் பிள்ளைத்தமிழுக்குரியது) / அம்மானை (பெண்பால் பிள்ளைத்தமிழுக்குரியது)
  10. 21-ஆம் திங்கள்: சிறுதேர் (ஆண்பால் பிள்ளைத்தமிழுக்குரியது) / ஊசல் (பெண்பால் பிள்ளைத்தமிழுக்குரியது)

1. காப்புப்பருவம் :[தொகு]

பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முதல் பருவம் காப்புப்பருவம் ஆகும். பிள்ளைத்தமிழ் இலக்கியம் சிறக்கவும் பாட்டுடைத்தலைவன் மேன்மையடையவும் காப்பாற்றியருளும்படி இறைவனை வேண்டும் பருவம். பின் வரும் பருவங்களுக்கெல்லாம் இப்பருவமே முதல் நாடியாக அமைவதால் காப்பு இன்றியமையாததாகிறது. காக்கும் தொழிலை மேற்கொண்டுள்ள திருமாலே காக்கும் பருவத்தில் முதற்கடவுளாகப் போற்றப்படுகிறார் இதனை

" அவன்தான்
காதற்கிழவன் ஆகலானும்
பூவின் கிழத்தியைப் புணர்த லானும்
முடியும் கடகமும் மொய்பூந் தாரும்
குழையும் நூலும் குருமணப் பூணும்
அணியும் செம்மல் ஆகலானும்
முன்னுற மொழிதற்குரியன என்ப" ( பாடல். 24)

எனப் பன்னிரு பாட்டியல் குறிப்பிடுகிறது. ஆயினும் இதனை விடுத்து வேறு கடவுளர்களையோ, அடியவர்களையோ காப்பாகக் கூறும் முறையும் உள்ளது.

2. செங்கீரைப் பருவம்[தொகு]

பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் இரண்டாவது பருவம் செங்கீரைப் பருவமாகும். இது குழந்தையின் ஐந்தாம் திங்களில் நிகழ்வதாகும். "கீர் என்பதற்கு சொல் எனப் பொருள் கொண்டு இது குழந்தைகள் மழலையை விட இனிமையான பொருள் தெரியாத ஓசையை எழுப்பும் பருவம்" என்றும், "ஆடுக செங்கீரை எனப்பாடுவதால் குழந்தை ஒருகாலை உயர்த்தியுமொருகாலை மடக்கியும் இரு கைகளையும் நிலத்தில் ஊன்றி முகத்தை மேலே உயர்த்தி ஆடுதலாகிய பருவம்" என்றும், "அவ்வாறு ஆடும் பொழுது சுற்றத்தார் சிறந்த சொற்களை மழலை கூற வேண்டும் என்று வேண்டிக் கொள்வர்" என்றும் கூறுவர். (காண்க கலைக்களஞ்சியம், தொகுதி 7 பக்கம்: 370)

குழந்தை தலையெடுத்து முகமசைத்தாடும் நிலையே பெரும்பாலான பிள்ளைத்தமிழ் நூல்களில் காணப்படுகிறது.

3. தாலப்பருவம்[தொகு]

பிள்ளைத்தமிழில் மூன்றாம் பருவம் தாலப்பருவம் ஆகும். இது குழந்தையின் ஏழாம் திங்களில் நிகழ்வது ஆகும். தால் என்பது நாக்கு. நாக்கை அசைத்து தாலாட்டி குழந்தைகளைத் தூங்க வைப்பது இப்பருவமாகும். பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் ஒரு பருவமாக விளங்கும் தாலாட்டு நாளடைவில் தனியொரு சிற்றிலக்கியமாக உருப்பெற்றது எனலாம்.

4. சப்பாணிப் பருவம்[தொகு]

சப்பாணிப்பருவம் குழந்தையின் ஒன்பதாம் திங்களில் நிகழ்வதாகும். ஒன்பதாவது மாதத்தில் குழந்தை உட்காரத் தொடங்கிய பிறகு மகிழ்ச்சியால் கை கொட்டுதல், கையாட்டுதல் போன்ற விளையாட்டுகள் அதனிடம் இயல்பாகத் தோன்றும். பெற்றோரும் மற்றோரும் கைதட்டிக் காட்டி குழந்தையை அழைப்பதோடு குழந்தையையும் கைத்தட்டும்படி வேண்டுவர். குழந்தை அதற்கேற்ப " சப்" என்ற ஒலி உண்டாகும்படி "பாணி" யைக் (கையை) கொட்டி முழக்கும். இதுவே சப்பாணிப் பருவம் ஆகும்.
குழந்தை நிமிர்ந்து அமர்ந்திருக்கும் அமைப்பை 'சப்பாணி' என்று கூறும் வழக்கம் உண்டு.

5. முத்தப்பருவம்[தொகு]

பிள்ளைத்தமிழின் ஐந்தாவது பருவம் முத்தப் பருவம் ஆகும். குழந்தையின் பதினோராம் திங்களில் நிகழ்வது இப்பருவம் ஆகும். பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் முத்தப்பருவம் சிறந்த பருவமாகக் கருதப்படுகிறது. குழந்தையைப் பாராட்டி மடியில் தூக்கி வைத்துக் கொண்டு, அதன் மலரினும் மெல்லிய இதழ்களால் முத்தம் பெற்று மகிழ்தலே முத்தப் பருவம் ஆகும்.பாட்டுடைத் தலைவனைக் குழந்தையாக்கி அதன் முத்தத்திற்கு ஏங்கும் கவிஞர்களின் நிலையினை எல்லாப் பிள்ளைத்தமிழ் நூல்களிலும் காணலாம்.

6. வருகைப்பருவம்[தொகு]

ஆறாவது பருவமாகிய வருகைப் பருவம் குழந்தையின் பதின்மூன்றாம் திங்களில் நிகழ்வதாகும். இதனை வாரானைப் பருவம் என்றும் போற்றுவர். வரவேற்றல் என்பது தமிழர் பண்பாட்டில் தலை சிறந்த ஒன்றாகும். இப்பான்மையில் தோன்றியதே வருகைப் பருவமாகும். தத்தித் தத்தி தளர்நடை இட்டு வரும் குழந்தையை அருகில் வருக! வருக! என வாய் குளிர மெய்மகிழ அழைக்கும் பருவமே வாரானைப் பருவம் ஆகும். குழந்தையை அவ்வாறு வரவேற்கும் பொழுது அதன் சிறப்புகளையெல்லாம் எடுத்துச் சொல்வர்.

7. அம்புலிப்பருவம்[தொகு]

அம்புலி என்பது நிலவைக் குறிக்கும். விண்ணில் இருக்கும் நிலவை விளையாட வருமாறு அழைக்கும் பருவமே அம்புலிப் பருவமாகும். பிள்ளையின் பதினைந்தாம் திங்களில் இது நிகழும். நடக்கக் கற்றுக் கொண்ட குழந்தை அங்குமிங்கும் சென்று காட்சிகளைக் காண மிகுதியாக விரும்பும். 'பிள்ளைக்கலிக்குஅம்புலியாம்' என்பதன் மூலம் இப்பருவத்தின் சிறப்பை உணரலாம். வெண்ணிலவை குழந்தையுடன் விளையாட வருமாறு அழைக்கும் பொழுது

  1. குழந்தையுடன் சரி நிகராக அம்புலியை எண்ணுதல்
  2. அம்புலியும் குழந்தையும் வேறுபடுதல்
  3. விளையாட வருவதனால் ஏற்படும் நலன்களைக் கூறுதல்
  4. வருந்தி அழைத்தும் வரவில்லையாயின் இன்ன தண்டனை பெறுவாய் என்று கூறுதல்

எனச் சாம பேத தான தண்ட முறையில் அமைவது இப்பருவமாகும்.அவ்வாறு அழைக்கும் பொழுது சிலேடை முதலிய அணி இலக்கணங்கள் அழகுற அமைவதாகும்.

ஆண்பால் பிள்ளைத்தமிழுக்குரியன[தொகு]

8. சிற்றில் இழைத்தல் / சிற்றில் சிதைத்தல்[தொகு]

ஓடியாடி சுற்றித்திரிந்து விளையாடும் குழந்தையின் பதினேழாம் திங்களில் இப்பருவம் பாடப்படுவதாகும். இதன் முந்தைய பருவத்தில் அம்புலியை விளையாட அழைத்து அது வாராத போது கோபம் கொண்ட குழந்தை பெண்குழந்தைகள் கட்டிய சிற்றிலை சிதைக்கிறது. அப்போது அதனைக் கட்டிய பெண்மக்கள் எல்லாம் எம் சிற்றிலைச் சிதைக்க வேண்டாம்! என வேண்டுமுகமாகப் பாடப் படுவதே இப்பருவமாகும். மற்ற பருவங்கள் எல்லாம் பெற்றோரும் மற்றொரும் பாடுவதாக அமைய இப்பருவம் மட்டும் சிறுமிகள் பாடுவதாக அமையும்.

9. சிறுபறை முழக்கல்[தொகு]

ஆண்பாற் பிள்ளைத்தமிழின் ஒன்பதாவது பருவம் சிறு பறை முழக்கல் ஆகும். இது குழந்தையின் பத்தொன்பதாம் திங்களில் நிகழ்வதாகும். இப்பருவத்தில் ஒலி இன்பங்கள் குழந்தையை மிகவும் ஈர்க்கும். ஆதலால் குழந்தை சிறு பறை முதலியவற்றைக் கொட்டிக்கொண்டு விளையாடும். அவ்வாறான கருவிகளைக் கொடுத்து ஒலி முழக்குமாறு செய்து மகிழ்விப்பதே இப்பருவமாகும்.

10 சிறு தேர்ப்பருவம்[தொகு]

ஆண்பால் பிள்ளைத்தமிழின் பத்தாவது பருவம் சிறுதேர்ப் பருவமாகும். இது 21-ம் திங்களில் நிகழ்வதாகும். மரத்தாலான சிறிய தேரினை உருட்டி மகிழும்படி குழந்தையை வேண்டிப்பாடுவது இப்பருவமாகும். மட நடை பயிலும் பருவத்தில் உள்ள குழந்தைகளின் நடைப் பயிற்சிக்கு உதவும் பொருட்டு சிறு தேரினை ஓட்டி மகிழச் செய்வர். குழந்தை வளர வளர நடந்து செல்லுதல் மட்டுமின்றி தேர் முதலிய வற்றின்மீது ஊர்ந்து செல்லுதலையும் விரும்பும் இவ்விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு தேர் முதலியவற்றினை உருட்டி குழந்தையை அமரச் செய்து மகிழ்வூட்டுவர். இது குழந்தையின் இருபத்தோராம் திங்களில் நிகழும் என்பது பொது இலக்கணம் ஆகும். ஆனால் 'இலக்கண விளக்கப்பட்டியல்' இப்பருவம் குழந்தையின் ஏழாம் ஆண்டில் நிகழும் எனக் கூறுகிறது.

பெண்பால் பிள்ளைத்தமிழுக்குரியன.[தொகு]

காப்பு முதலாக அம்புலி ஈறாக சொல்லப்பட்ட பருவங்கள் ஏழும் ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கும் பெண்பாற்பிள்ளைத்தமிழுக்கும் பொதுவானதாகும். நீராடல், அம்மானை, ஊசல் ஆகியன பெண்பால் பிள்ளைத்தமிழுக்கே உரியனவாகும்.

8. நீராடல்[தொகு]

இது பெண்பால் பிள்ளைத்தமிழின் எட்டாவது பருவமாகும்.குழந்தையின் பதினேழாம் திங்களில் நிகழ்வது இப்பருவமாகும்.குழந்தையை நீர் நிலைகளில் நீராட வேண்டிப் பாடும் பருவமாகும்

9. அம்மானை[தொகு]

அம்மானை பெண்பாற்பிள்ளைத்தமிழின் ஒன்பதாவது பருவமாகும். கழங்கு என்றும் இதனைக் கூறுவர்.கழங்கு என்பது மரம் அல்லது ஈயம் போன்ற பொருள்களால் பந்து போன்று உருண்டையாகச் செய்து அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக மேலே எறிந்து கையால் பிடித்து விளையாடும் விளையாட்டு ஆகும். கழங்குக் காய்கள் கொண்டு ஆடுவர் என்றும் கூறப்படுகிறது. பேதை அல்லது பெதும்பைப் பருவ மகளிர் அம்மானை ஆடுவர் என்று உலா நூல்களில் குறிப்பிடப்படுகிறது. அம்மானை கலம்பகம் என்ற சிற்றிலக்கிய உறுப்புகளில் ஒன்றாகவும் விளங்குகிறது.

மகளிர் மூவர் கூடி தம் தலைவனைக் குறித்து மூவரில் ஒருத்தி வினா எழுப்ப, மற்றொருத்தி அதற்கு விளக்கம் சொல்ல, வேறொருத்தி இவ்விருவருக்கும் விடை கூறி அம்மானைக் காய்களை எறிந்து ஆடி மகிழ்வர். இவ்வாறு அமையும் பாடலின் இறுதிச் சீரில் அம்மானை என்ற சொல் அமையும். அம்மானை என்பது ஒரு வகை மகளிர் விளையாட்டு என்ற நிலை மாறி கதை அமைப்பை இசையோடு கூறும் இலக்கியம் என்ற நிலை தோன்றியது. இவ் அம்மானைப் பாடல்கள் தொடக்கத்தில் நாட்டுப் பாடல்களாகவே இருந்திருத்தல் வேண்டும் என்றும் கூறுவர்.

10. ஊசல்[தொகு]

பெண்பால் பிள்ளைத்தமிழின் பத்தாவது பருவம் ஊசலாகும். ஊசல் என்பது ஊஞ்சல் ஆடலாகும். குழந்தையை ஊஞ்சலாடி மகிழும்படி வேண்டும் பருவமே ஊசல் பருவமாகும். குழந்தையை ஊஞ்சலில் அமர்த்தி தாதியர் முதலானோர் அக்குழந்தையின் சிறப்புகளையெல்லாம் எடுத்துரைத்து ஊஞ்சலை ஆட்டி குழந்தையை மகிழ்விப்பர். ஊஞ்சல் அமைக்கும் வகை, ஆடும் வகை, குழந்தையின் சிறப்பு, காண்போருக்கு விளையும் கருத்து ஆகியவை இப்பருவத்தில் இடம் பெறும்.

பாடல் வரையறை[தொகு]

பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் பத்துப் பருவங்களையும் பாடும்போது பாடல்களின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருக்க வேண்டும் எனவும், இரட்டித்துப் பாடினால் ஓசை நீண்டு பாட வேண்டும் என்பது வரையறை ஆகும். ஆனாலும் இவ்வரையறையை மீறி பத்துப் பருவத்திற்கான பாடல் எண்ணிக்கைக் குறைத்தும் கூட்டியும் பாடியுள்ள நிலை அறியப்படுகிறது.

பிள்ளைத்தமிழ் நூல்கள்[தொகு]

பிள்ளைத்தமிழ் நூல்களின் வகைகள்[தொகு]

பொதுவாக பிள்ளைத்தமிழ் நூல்கள் ஆண்பால் பிள்ளைதமிழ், பெண்பால்பிள்ளைத்தமிழ் என இருவகையிலேயே அடங்கும். ஆயினும் பிள்ளைத்தமிழ் நூல்களின் வளர்ச்சியைக் கணக்கிட உதவும் வகையில் இவை மேலும்

  1. இறைவன் பற்றிய பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள்
  2. இறைவி பற்றிய பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள்
  3. கவிஞர் அல்லது சான்றோர் பற்றிய பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள்
  4. அரசன் பற்றிய பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள்
  5. மக்கள் தலைவர் பற்றிய பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள்

என வகைப்படுத்துவர்.

புகழ் பெற்ற சில பிள்ளைத்தமிழ் நூல்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. காமப் பகுதி கடவுளும் வரையார்
    ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர். (தொல்காப்பியம் புறத்திணையஅயல் 23)
    குழவி மருங்கினும் கிழவது ஆகும். (தொல்காப்பியம் புறத்திணையியல் 24)
  2. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம், 2005, பக்கம் 298

உசாத்துணை[தொகு]

கு. முத்துராசன் அவர்கள் எழுதிய பிள்ளைத்தமிழ் இலக்கியம், மணிவாசகர் பதிப்பகம். -1984

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிள்ளைத்தமிழ்&oldid=3828834" இலிருந்து மீள்விக்கப்பட்டது