ராம்நாத் கோயங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராம்நாத் கோயங்கா
ராம்நாத் கோயங்கா 1942-ல்
பிறப்பு(1904-04-03)ஏப்ரல் 3, 1904
தர்பங்கா, பீகார், பிரித்தானிய இந்தியா.
இறப்புஅக்டோபர் 5, 1991(1991-10-05) (அகவை 87)
மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா
பணிஇதழாசிரியர், தொழில் முனைவோர்
வாழ்க்கைத்
துணை
மூங்கிபாய் கோயங்கா
வலைத்தளம்
The Indian Express
ராம்நாத் கோயங்கா 1926-ல்

ராம்நாத் கோயங்கா(Ramnath Goenka; ஏப்ரல் 3, 1904- அக்டோபர் 5, 1991) இந்தியன் எக்சுபிரசு பத்திரிகைக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர். நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்டவர். இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட நெருக்கடி நிலையின்போது (26 சூன், 1975 - 21 மார்ச்சு, 1977) நாடு முழுவதும் குடிமை உரிமைகள் நசுக்கப்பட்டன; எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு, விசாரணை இன்றிச் சிறையில் அடைக்கப்பட்டனர். குறிப்பாக, பத்திரிகைச் சுதந்திரம் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது.

நெருக்கடி நிலையைக் கடுமையாக எதிர்த்து, துணிச்சலுடன் குரல்கொடுத்தவர்களுள் ஒருவர் கோயங்கா ஆவார். இவ்வாறு குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்க நிகழ்ந்த "உரிமைப் போரில்" பத்திரிகைத் துறைக்கே ஒரு வழிகாட்டியாகவும், மூத்த தளபதியாகவும் கோயங்கா திகழ்ந்தார்.[1] இந்தியா டுடேயின் 60 மகத்தான இந்தியர்கள் வரிசையில் இடம்பெற்றவர்.[2]

இளமை[தொகு]

ராம்நாத் கோயங்கா பிகார் மாநிலத்தின் வட பகுதியில் உள்ள தர்பங்காவில் தில்தர் நகர் என்ற கிராமத்தில் 18-04-1904-ல் பிறந்தார். இவர் ஆறு மாத குழந்தையாய் இருக்கும் போதே இவரது தாயார் இறந்துவிட்டதால் இவருடைய அத்தை வசந்தாலால் கோயங்கா என்பவரால் தத்து எடுக்கப்பட்டு அவரின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டார். இவருடைய அத்தை பெரும் நிலக்கிழாராக இருந்தார். வாரணாசியில் தனது தொடக்கக் கல்வியை முடித்ததும் எவர் கையையும் எதிர்பாராமல் வியாபாரத்தில் ஈடுபடத் தீர்மானித்தார். மூங்கிபாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

வணிகம்[தொகு]

தனது மாமா பாபு பிரஹ்லாத ராய் டால்மியா மற்றும் சாகர்மால் டால்மியா ஆகியோருடன் இணைந்து யார்ன் மற்றும் சணல் வியாபாரத்தின் அடிப்படைகளையும் நெளிவு சுளிவுகளையும் தெரிந்துகொள்ள தனது 15-ஆவது வயதில் கொல்கத்தா நகருக்குச் சென்றார். அங்கு சிறிது காலம் பயிற்சி எடுத்த பிறகு மிகப்பெரிய நிறுவனமான சுகதேவ்தாஸ் ராம் பிரசாத் என்பவரின் வர்த்தகப் பிரதிநிதியாகச் சென்னை வந்தார். 1925 -ல் ஐதராபாத்தைச் சேர்ந்த முரளி பிரசாத் மோகன்பிரசாத் என்பவருடன் தொழில் கூட்டு சேர்ந்தார் அதன் பிறகு இவர்கள் இணைந்து சென்னையின் கிடங்குத் தெருவில் 1926 -ல் ஒரு வியாபார நிறுவனத்தைத் தொடங்கினர். இது 1932-33 வரை தொடர்ந்தது.[3]

அரசியல் ஈடுபாடு[தொகு]

சென்னைக்கு வந்தபின் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபாடு காட்டினார். சென்னை மாநகரின் மேல்தட்டு மக்களிலிருந்து எளியோர் வரை அனைவரிடமும் நன்றாகக் கலந்து பழகினார். அதன் விளைவாக, சமூகத்தின் கட்டமைப்பையும் அதன் பிரச்னைகளையும் தேவைகளையும் நன்கு தெரிந்துகொண்டார். இவரின் செயல்களால் கவரப்பட்ட சென்னை நிர்வாகம் 1926-l ராம்நாத் கோயங்காவைச் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமித்தது. அரசாங்கம் நியமித்த பதவியை ஏற்றுக்கொண்டாலும் அதை மக்களுடைய நன்மைக்காகவே முழுக்க முழுக்கப் பயன்படுத்தினார் கோயங்கா. அரசின் தவறுகளையும் குறைகளையும் தயங்காமல் சுட்டிக்காட்டினார். இதனால் அரசு மட்டுமல்லாமல் மேல்தட்டு மக்களும் அவரைக் கூர்ந்து நோக்க ஆரம்பித்தனர்.

மேலவை உறுப்பினர்கள் சிலர் சேர்ந்து தொடங்கிய 'இன்டிபென்டன்ட் பார்ட்டி' என்ற குழுவுக்கு ராம்நாத் கோயங்காவைச் செயலாளராக நியமித்தனர். தன்னுடைய வியாபாரத் தொடர்புகளைப் பயன்படுத்தி நிதி உதவியும் இதர ஆலோசனைகளும் தேவைப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்குத் உதவினார்.

இதழாளர்[தொகு]

தேசிய எழுச்சி கொண்ட பத்திரிகைகளுக்கு உதவுவதைத் தன்னுடைய கடமையாகவே கருதினார். 1932-ல் சதானந்தம் அவர்களின் தி பிரீ பிரஸ் ஜோனல் (சென்னை பதிப்பு) என்ற இதழ் சரிவடைந்ததை ஒட்டி, தனது சொந்த ஊர்தி மூலம் தானே அவ்விதழை ஒவ்வொரு இடங்களுக்கும் சேர்ப்பித்தார். மேலும் டி. பிரகாசத்தின் 'ஸ்வராஜ்யா'வுக்கும் எஸ். சதானந்தத்தின் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கும் உதவிகளைச் செய்துவந்தார். 1936-ம் ஆண்டு அக். 26-ம் தேதி 'இந்தியன் எக்ஸ்பிரஸ்', 'தினமணி' ஆகிய நாளேடுகளின் பெரும்பான்மைப் பங்குதாரராகவும் உரிமையாளராகவும் ஆனார். 1941-ல் தேசிய இதழாசிரியர் மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டர். இது பிரித்தானிய அரசிற்கு ஒரு பெரும் சிக்கலாக இருந்தது.

விடுதலைப் போரில் பங்கு[தொகு]

1942-ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது, இந்தியாவில் பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், மற்றும் இதழ் சுதந்திரம் ஆகியவை மறுக்கப்பட்டன. இந்தியப் இதழாசிரியர்கள் கூடி, பிரித்தானியரின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் முகமாக நாட்டிலுள்ள எல்லா இதழ்களையும் கால வரையின்றி மூடிவிடத் தீர்மானித்தனர். காந்தியடிகள். தமது "ஹரிஜன்" முதலிய இதழ்களையும் நிறுத்தினார் மற்ற இதழ்கள் ஒரு நாள் அடையாள நிறுத்தம் செய்தால் போதுமென தீர்மானித்தன. ராம்நாத் கோயங்கா காந்தியடிகளின் விருப்பப்படி நடப்பதே சிறந்ததென தமது பத்திரிகைகள் அனைத்தையும் காலவரையின்றி நிறுத்திவிட்டார்.[4]

ஆனாலும், நாடெங்கும் நடக்கும் அராஜக பிரித்தானிய கெடுபிடிகள் உலகறியச் செய்ய வேண்டும் என்று கோயங்கா துடித்தார். நாட்டில் எங்கு பார்த்தாலும் நடக்கும் அக்கிரமங்களைப் பற்றிய செய்திகளைச் சேகரித்தார். அவைகளை எல்லாம் திரட்டிக் கணிசமான ஒரு நூலாக உருவாக்கினார். தனது அச்சகத்தில் ரகசியமாக ஆயிரக்கணக்கான பிரதிகள் அச்சான அந்த ஆங்கில நூலுக்கு "இந்தியாவில் படுகொலை" (India Ravaged) என்று தலைப்புத் தந்தார். நூலின் பிரதிகளை, ரகசியமாக பிரித்தானிய நாடாளுமன்ற அங்கத்தினர்கள் ஒருவர் விடாமல் எல்லோருக்கும், பிரித்தானிய மந்திரிகளுக்கும் அனுப்பி வைத்தார். அது மட்டுமல்லாமல், அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்வீடன், கனடா, ஆஸ்திரேலியா முதலிய வேறு பல நாடுகளின் முக்கியத் தலைவர்களுக்கும் பிரிட்டிஷார் அறியா வண்ணம் நூலை அனுப்பிச் சாதனை புரிந்தார்.[4]

சுதந்திரத்துக்காகப் போரிடுகிறோம் என்று சொல்லிக் கொண்டே இந்தியாவில் லட்சக்கணக்கான மக்களை சிறையில் தள்ளி கெடுபடி ஆட்சி நடத்தி வந்த ஆங்கிலேய அதிகாரிகளின் போலித்தனம் உலகறியத் தெரியலாயிற்று. பிரித்தானிய பாராளுமன்றத்தின் கேள்விகளுக்கு இந்தியாவின் பிரித்தானியப் பிரதிநிதிகள் பதில் சொல்ல முடியாமல் திகைத்தனர். உலக அரங்கில் பிரிட்டனின் புகழுக்குப் பெரிய அடி கிடைத்தது. ராம்நாத் கோயங்காவின் இந்தச்ச் சாதனையால் உண்மையை உலகம் உணர்ந்தது. பிற்காலத்தில் இந்தியாவுக்குச் சுதந்திரம் தரலாம் என பிரித்தானிய தொழிற் கட்சி அரசு முடிவு செய்ய இந்த மாற்றம் உதவியது என்று சொல்லலாம்.[5]

இதழ் சுதந்திரம்[தொகு]

அரசியல் கட்சிகள், அதிகார மையங்கள், வியாபாரக் குழுமங்கள், நண்பர்கள் வட்டம் என்று எதன் பிடியிலும் சிக்காமல் சுதந்திரமாகப் பத்திரிகை வெளிவர வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இந்தியாவின் நலன்தான் தனது பத்திரிகையின் லட்சியம் என்பது அவரது தீர்மானமாகும். அரசியல் தலைவர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், அறச் சிந்தனையாளர்கள், சமூக சேவகர்கள், மதத் தலைவர்கள், ஆன்மிகவாதிகள் என்று அனைத்துத் தரப்பினருடனும் தொடர்பில் இருந்த போதும் தனது இதழில் இடம்பெறும் செய்திகள் குறித்து அவர் சுதந்திரமாகச் செயல்பட்டார். அதில் தலையிடும் உரிமையையோ, சலுகையையோ யாருக்கும் அளிக்கவில்லை. இதழ்களுக்கு சிறந்த ஆசிரியர்களை நியமித்தார். அவர்களைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தார்.[6] அரசின் விளம்பரங்களுக்காக மட்டுமே இதழ்கள் என்ற நிலையை மாற்றிக் காட்டினார். அரசு விளம்பரம் தராவிட்டாலும் மக்களின் பிரச்சனைகளை எழுதி, ஓர் இதழுக்கு வாசகர்களின் ஆதரவும், விளம்பரதாரர்களின் ஆதரவும் இருந்தால் போதும் என்பதைச் செயலில் நிரூபித்தார்.

அவசர நிலைப்பிரகடனத்திற்கு எதிராக[தொகு]

இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது கொண்டு வந்த அவசர நிலைப் பிரகடனத்தின் அம்சமாக அரசாங்கத்திற்கு எதிரான சிறு அசைவுகள் கூட கவனித்து ஒடுக்கப்பட்ட காலகட்டத்தில், அவசர நிலைப் பிரகடனத்தை எதிர்த்தும் ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு ஆதரவாகவும் செய்திகளை இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியிட்டார். அதனால் அரசு, இந்தக்குழுமப் பத்திரிக்கைகளின் நிர்வாகத்தைத் தன் கைவசம் கொண்டுவந்தது. அப்போது உடல்நிலை சரியில்லாத கோயங்காவும், அவரது மகன் மற்றும் மருமகள் ஆகியோர் மிசாவில் கைது செய்யப்படலாம் என்று அச்சுறுத்தப்பட்டனர். உடல்நிலை தேறிய கோயங்கா சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து அரசாங்கம் நியமித்த நிர்வாகக் குழுவைக் கலைத்தார். அரசாங்கத்தால் சிவில், கிரிமினல் மற்றும் தனிப்பட்ட முறையில் என இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் கோயங்காவின் மீது கிட்டத்தட்ட 250 வழக்குகள் தொடுக்கப்பட்டன. [7]

பிறமொழி இதழ் பதிப்புகள்[தொகு]

தமிழில் 'தினமணி'க்கு இருந்த வரவேற்பைப் பார்த்து வியந்த கோயங்கா, பிற இந்திய மொழிகளிலும் இதழ் தொடங்க விருப்பம் கொண்டு தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இதழ்களைத் தொடங்கி நடத்தினார். அனைத்திலும் அவரது இதழ் குழுமம் வெற்றிநடை இட்டது. அரசியலில் ஊழலுக்கு எதிரான போர்க்குரல் எழுப்புவதில் எக்ஸ்பிரஸ் குழுமம் முன்னின்றது.

குழும இதழ்கள்[தொகு]

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தி நியூ சன்டே எக்ஸ்பிரஸ், தி சன்டே ஸ்டாண்டர்டு, தினமணி, கன்னட பிரபா, மலையாள வாரிகா, சினிமா எக்ஸ்பிரஸ், சகி, ஆல்தர் கிளிட்டர்ஸ் ஆகியன எக்ஸ்பிரஸ் குழுமத்தைச் சேர்ந்த இதழ்களாகும். 1991-ல் ராம்நாத் கோயங்காவின் மறைவுக்குப் பின்னர் இக்குழுமத்தின் பங்குகள் அவரது குடும்பத்தாரால் பிரித்துக்கொள்ளப்பட்டது

இறுதிக்காலம்[தொகு]

இதழ் உலகின் சுதந்திரத்திற்கும் நடுநிலைத்தன்மைக்கும் சான்றாக வாழ்ந்த ராம்நாத் கோயங்கா 1991, அக். 5-இல் மறைந்தார். இவரது வாழ்க்கை வரலாற்றை வி. ஜி. வர்கீஸ் என்பவர் எழுதியுள்ளார். இது பெங்குவின் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டது.[8] "ராம்நாத் கோயங்கா": கறுப்பு வெள்ளை வாழ்க்கை என்ற நூல் இவரது மருமகள் அனன்யா கோயங்கா என்பவரால் 2005-ல் சொந்தமாக வெளியிடப்பட்டது.

மேற்கோள்[தொகு]

  1. http://www.dinamani.com/edition/story.aspx?artid=406441&SectionID=133&MainSectionID=133&SectionName=Editorial%20Articles&SEO= வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா தினமணி
  2. Naqvi, Saeed (2000). "THOUGHT & ACTION: The Baron". Indian Today. Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2012-04-27.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-02-28. பார்க்கப்பட்ட நாள் 2012-04-29.
  4. 4.0 4.1 http://tamilnaduthyagigal.blogspot.in/2011/02/blog-post_09.html
  5. "தினமணி" சுதந்திரப் பொன்விழா மலர்.
  6. http://writersamas.blogspot.in/2011/03/blog-post.html
  7. அமுதசுரபி தீபாவளி மலர் 2004; இராம்நாத் கோயங்கா; பக்கம் 176-178
  8. Warrior of the Fourth Estate, is the official biography of Goenka and is authored by BG Verghese. It has been published by Penguin, India. ISBN 0-67-005842-4

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்நாத்_கோயங்கா&oldid=3925631" இலிருந்து மீள்விக்கப்பட்டது