காரைநகர் சிவன் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஈழத்துச் சிதம்பரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஈழத்துச் சிதம்பரம் கோயில் முகப்புக் காட்சி

ஈழத்துச் சிதம்பரம் என சிறப்பிக்கப்படும் காரைநகர் சிவன் கோவில் அல்லது சுந்தரேசுவரர் கோயில் அல்லது காரைநகர் திண்ணபுரம் ஈழத்துச் சிதம்பரம் யாழ்ப்பாண நகரிலிருந்து வடமேற்கே 10 மைல் தொலைவில் உள்ள காரைநகரிலே திண்ணபுரம் பிரிவிலே அமைந்துள்ளது. சிதம்பரத்திலே நடைபெறுவது போன்றே பெரும்பாலும் உற்சவங்கள் இந்த திண்ணபுரம் சிவன் கோயிலில் நடைபெறுவதால் அது ஈழத்துச் சிதம்பரம் என அழைக்கப்பட்டு வருகின்றது.

வரலாறு[தொகு]

இது 19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலே அமைக்கப்பட்டது. ஈழத்துச் சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள சிவனுக்கு சுந்தரேசுவரர் என்றும் அம்பிகைக்குச் சௌந்தராம்பிகை என்றும் பேர். இக்கோயில் தொடக்கத்தில் ஆண்டி கேணி ஐயனார் கோயில் என்றே அழைக்கப்பட்டது[1]. ஐயனார் கோயிலை அமைப்பதிலே முன்னின்ற அம்பலவி முருகர் என்ற பக்தரே பின்பு சிவன் கோயிலை அமைப்பதிலும் முன்னின்றவர்.

கோயில் அமைப்பு[தொகு]

இங்குள்ள ஐயனார் பூரணை, புட்கலை சூழ அமர்ந்துள்ளார். சிவனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் ஐயனாருக்கும் அளிக்கப்படுகின்றது. சிவனுக்குக் கோபுரம், சித்திரத்தேர் உள்ளது போல ஐயனாருக்கும் தனியே கோபுரம், சித்திரத்தேர் உள்ளன. கர்ப்பக்கிரகத்தில் எழுந்தருளியுள்ள சிவலிங்க மூர்த்திக்குப் பரிவார தெய்வங்களாக அம்பாள், நடேசர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர், விநாயகர், சுப்பிரமணியர், சண்டேஸ்வரர், சமயகுரவர் என்போர் எழுந்தருளியுள்ளனர்.

சிறப்பு உற்சவங்கள்[தொகு]

இத்திருக்கோயிலில் நடைபெறும் உற்சவங்களில் மிகப் பிரசித்தி பெற்றது திருவெம்பாவை உற்சவமாகும். நடராஜர் இரதாரோகணமும் ஆர்த்திராபிஷேகமும் குறிப்பிடத்தக்கவை. அபிஷேகத்தன்று மாலையில் திருவூடல் நடைபெறும். பங்குனி உத்தரத்தில் நிறைவடையும் படி சிவபெருமான் திருவிழா பத்துத் தினங்களும் ஆடிப் பூரத்தில் நிறைவடையும் படி அம்பாள் திருவிழா பத்துத் தினங்களும் நடைபெறுகின்றன. தைப்பூசம், மாசி மகம், ஆவணி சதுர்த்தி, நவராத்திரி, கார்த்திகைத் தீபம் என்பனவும் விசேடமாக இங்கு போற்றப்படுகின்றன.

ஈழத்துச் சிதம்பரம் மீதான பிரபந்தங்கள்[தொகு]

  • ஈழத்துச் சிதம்பர புராணம் - பண்டிதர் நவாலியூர் சோ. இளமுருகனார் பாடியது
  • ஆண்டி கேணி ஐயனார் புராணம்
  • திண்ணபுர வந்தாதி - காரைநகர் மு. கார்த்திகேய ஐயர் பாடியது
  • சுந்தரேசர் திருப்பதிகமும் திருவூஞ்சலும் - காரைநகர் த. நாகமுத்துப்புலவர் பாடியது
  • திண்ணபுர வெண்பா - காரைநகர் ச. பஞ்சாட்சரக்குருக்கள் பாடியது.

சிறப்புகள்[தொகு]

கொழும்புத்துறை சிவயோக சுவாமிகள் இத்தலைத்தை வழிபட்டுள்ளார். அவர் இக்கோயிலைச் சுட்டிக் காட்டி இவ்வாலயம் சிறப்பான ஆலயம், இதனைக் கூத்துக் கொட்டகை ஆக்கி விடாதீர்கள் என ஆணையிட்டார்[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 புலவர் திருமதி பூரணம் ஏனாதிநாதன், காரைநகர் திண்ணபுரம் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம், வீரகேசரி, சூன் 4, 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரைநகர்_சிவன்_கோவில்&oldid=3903430" இலிருந்து மீள்விக்கப்பட்டது